ஆகியன எல்லாம் இந்தப் பொதுப் பண்பாட்டில் அடங்கும் .
3.2.2 தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்
தமிழர்க்கே உரியன என்ற அளவில் சில பண்புகள் மேற்கூறிய இந்தியப் பொதுப் பண்புகளுக்குக் கூடுதலாகக் குறிக்கத்தக்கன .
1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வதை ஒரு நியதியாகக் கருதுதல் .
2. கூட்டுக் குடும்ப வாழ்வில் சண்டைகள் சச்சரவுகளுக்கிடையில் அறுந்து போகாத ஓர் இறுகிய உறவுப்பிணைப்பு .
3. எவ்வளவு தாழ்ந்த வறுமையிலும் விருந்தோம்பும் ஈரம் .
4. புலால் உண்ணுதல் , உயிர்ப் பலியிடல் ஆகியவற்றுக்கிடையிலும் சீவகாருணியத்திற்கும் இடம் கொடுத்தல் .
5. எந்தச் சூழலிலும் அழிந்து போகாத மனித நேயம் .
6. சமய சாதி வட்டங்களைத் தாண்டிப் பிறரோடு உறவுக்குக் கைநீட்டும் பண்பு .
7. தம்முடைய கோட்பாடுகளையே பெரிதென்று வியந்து கொள்ளாத சமரசம் .
8. நட்பு , காதல் , அன்பு , நேயம் ஆகியவற்றுக்காகத் தம்மையே பலி கொடுத்து விடும் தியாகம் .
9. அடுத்த வீடு , தெரு , ஊர் ஆகியவற்றில் உள்ளவர்களோடு விலகியிருக்க முடியாத ஒட்டுறவு .
10. மறுமை உலக வாழ்வைவிட இருக்கும் உலக வாழ்வைச் செம்மையாகப் பேணும் மனம் .
11. வறுமையில் நற்பண்புகளை இழந்து விடாத நிலை
ஆகியவற்றில் தமிழ்நாடு அதிக அழுத்தம் கொண்டிருந்தது .
3.2.3 தமிழர் பண்பாட்டில் பிற பண்பாட்டு நுழைவுகள்
இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் தமிழ்நாட்டில் நுழைந்து தம் சுவடுகளைப் பதித்த அயலகப் பண்பாடுகள் பல. ஆரியப் பண்பாடு , கிரேக்கப் பண்பாடு , பிரெஞ்சுப் பண்பாடு , உருதுப் பண்பாடு , வடஇந்தியப் பண்பாடு , ஆங்கிலப் பண்பாடு எனப் பல பண்பாடுகள் தமிழரிடையே தம் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன .
அன்றாட வாழ்வில் ,
அதிசயம் , ஆச்சரியம் , அநீதி , அநியாயம் , உபயோகம் , கிராமம் , சத்து , சாட்சி , தாமதம் , சுலபம்
- சமஸ்கிருதம்
தகராறு , வசூல் , லாயக்கு , ரத்து
மகசூல் , முகாம் , பக்கிரி , மாமூல் , மிட்டாய் , டமாரம் , சோம்பு , சொக்காய் , கொலுசு , பவனி , பவிசு ,
ஒட்டாரம் , கண்ணராவி , லாகிரி
- அரபி
இரவிக்கை , எக்கச்சக்கம்
- தெலுங்கு
டப்பி , டப்பா , சௌடால் , தாயத்து , பேமானி , பேட்டி , போணி , இனாம் ,
கசகசா , கச்சா , கசாப்பு
- இந்தி
சப்பாத்தி , தமாஷ் , திவால் , நகாசு , கலாட்டா , ஏலம் , சாவி , கோப்பை , சன்னல் , அலமாரி
- உருது
மேசை , கடிதம் , கிராதி , மேஸ்திரி , டிக்கெட் , டிகிரி , டிபன் , சினிமா , ஓட்டல் , ஏக்கர் , சோப்பு , பேனா ,
பென்சில்
- போர்த்துக்கீசு
ஈரங்கி , ஐட்டம் , ஒரிஜினல்
- ஆங்கிலம்
போன்ற சொற்கள் இன்று தமிழில் வந்து கலந்து சில சமயங்களில் விலக்க முடியாதனவாகவும் உள்ளன .
இச்சொற்கள் பண்பாட்டுப் பாதிப்பையும் காட்டும் .
ஓட்டல் , சோப்பு , சினிமா போன்ற சொற்கள் வெறும் சொற்களாக மட்டும் இல்லை .
இவை தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவை .
தமிழர் வாழ்வில் ஆழமான பதிவை ஏற்படுத்தி உள்ளவையும் ஆகும் .
அயல்நாட்டுப் பண்பாடுகளின் தாக்கம்
தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த பல பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்தபொழுது , தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றைக் கொண்டும் , தம்முடையவற்றிலிருந்து சிலவற்றைக் கொடுத்தும் உள்ளன .
வேறு எந்தப் பண்பாட்டையும் விட ஆரியர் பண்பாடும் , ஐரோப்பியர் பண்பாடும் தமிழர் பண்பாட்டைப் பெரிதும் பாதிக்கச் செய்தன .
பண்பாட்டுப் பாதிப்புகள் பெரும்பாலும் மொழிகளால் ஏற்படுத்தப்படுகின்றன .
சமஸ்கிருதமும் , ஆங்கிலமும் தமிழர் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .
இந்த இருமொழிகளைப் பயன்படுத்திக் கொண்ட பிராமணர் , ஆங்கிலேயர் ஆகியோர் தமிழர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கினர் .
பண்பால் தம்மை மிக உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொண்டிருந்த தமிழினம் ஆரிய இனத்தாலும் வெள்ளை இனத்தாலும் பெரிய வீழ்ச்சியை அடையவே செய்தது .
3.3.1 ஆரியப் பண்பாடு என்ன செய்தது ? வடமொழியைத் தேவமொழி என்றும் , பிராமணரை நிலத்தேவர் ( பூசுரர் ) என்றும் உயர்த்தி ஏனையோரைத் தாழ்த்தி உரைத்த வருணாசிரமம் தமிழகத்தில் மெல்ல மெல்லக் காலூன்றி வளர்ந்து கிளை விரித்துப் பலரையும் தன் எல்லைக்குள் வளைத்துக் கொண்டுவிட்டது .
நம் சமயம் , ஆன்மீகம் , தத்துவம் ஆகியன வருணாசிரம நெறி நுழைவதற்குரிய நல்ல வாயில்களாகிவிட்டன .
எனவே சமயம் ஆன்மீகம் , தத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடுவதற்குரிய தேவையைக் காலம் தோற்றுவித்துவிட்டது , பெண்களின் இலட்சிய வாழ்வின் அடித்தளத்தையே அசைக்கக்கூடிய கருத்துகளை ஆரியச் சார்புடைய இதிகாசங்கள் தமிழகத்தில் பரப்பிவிட்டன .
அவையாவன :
1. பெண் ஒருத்தி கணவர் பலர்க்கு மனைவியாதல் , அதனைக் கற்பறம் என்று போற்றுதல் .
2. வேறொருவனைப் பிள்ளைப்பேற்றுக்காகச் சேர்தல் .
3. வரதட்சணை அளித்தல்
தவிரவும் , “ ஊழையும் உப்பக்கம் காண் ” கின்ற வினைத்திட்பம் போற்றிய தமிழகத்தில் தவம் , மந்திரம் , கழுவாய் ஆகியவை பற்றிய கருத்துகளை இதிகாசங்கள் எடுத்துரைத்தன .
இவ்வகையைச் சார்ந்த கருத்துகள் வருமாறு :
1. கடுந்தவம் இயற்றி மேல்நிலை எய்திய முனிவர்களின் கோபமும் சாபமும்
2. வாள்வலிமை , வில்வலிமை போன்றவற்றைவிடத் தவமியற்றிப் பெற்ற மந்திரத் தொடர்புடைய கணைகளின் வலிமையால் பெறும் போர் வெற்றி
3. எப்படிப்பட்ட தவறுகளையும் கழுவாய் செய்து துடைத்துவிட முடியும் என்ற நிலை
இக்கருத்துகள் அனைத்திற்கும் இதிகாசங்கள் தத்துவ முலாம் பூசின .
3.3.2 ஐரோப்பியப் பண்பாடு செய்த நன்மைகள்
சமஸ்கிருதத்தின் வழியாகப் புகுத்தப்பட்ட ஆரியப் பண்பாடு தமிழகப் பண்பாட்டில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது .
பல நூற்றாண்டுகளுக்கு அத்தாக்கம் நீடித்தது .
அதிலிருந்து தமிழகம் விடுபடாத நிலையில் ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கம் பல வலிமைமிக்க ஊடகங்கள் வழியாக நிகழ்ந்தது .
ஐரோப்பியர் வரவால் தமிழர் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் எண்ணுங்கள் !
• கல்விச் சீரமைப்பு
திண்ணைப் பள்ளிக்கூடம் , அந்தந்த ஆசிரியர் வகுத்துக் கொள்ளும் பாடத்திட்டம் என்ற வகையில் ஒரு திட்டமிடாத கல்வியாக அமைந்து இருந்தது ; அதனை உயர் கல்வி நிலையில் கொண்டு சென்று , பல்கலைகக்கழகங்கள் நிறுவிய பெருமை ஐரோப்பியர்க்குரியது .
படித்தபிறகு பட்டம் பெறுதல் , வேலை வாய்ப்புக்குரிய படிப்புகள் , அப்படிப்புகளுக்குப் பாடத்திட்டங்கள் , தேர்வுகள் எனக் கல்விமுறை பல வரையறைகளைப் பெற்றது .
இதோ மாநிலக் கல்லூரியை நோக்குங்கள் .
இக்கல்லூரி முதல்வராக இருந்த ஸ்டாதம் துரையின் வெண்பளிங்குச் சிலையைப் பாருங்கள் .
நூற்றாண்டைக் கடந்த இந்தக் கல்லூரி , நூற்றாண்டைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால் , பி.ஏ , பி.எஸ்ஸி , எம்.ஏ , எம்.எஸ்ஸி என்று பட்டம் பெறும் ஒரு நாகரிக மாற்றம் நம்மிடையே ஏற்பட்டது .
அது மட்டுமா ?
கல்வி பெரும்பாலும் பெண்ணுக்குத் தேவையில்லை என்ற கருத்து ஐரோப்பியர் வரவுக்குப் பின் மாறிவிட்டது .
தமிழ்நாட்டின் முதல் பெண் டாக்டர் .
முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஐரோப்பிய நாகரிகத் தாக்கத்தால் மருத்துவராக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது .
அடுப்பு நெருப்போடு மட்டும் நெருக்கமான உறவு கொண்டிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று அணுமின் நிலையத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தது ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கமே .
• அறிவியல் ஏற்றம்
தமிழ்நாட்டில் பாம்புகள் மிகுதி .
நல்ல பாம்பு எனும் கொடுமை மிக்க நஞ்சுடைய பாம்பு பலரால் வழிபாடே செய்யப்பட்டது .
பாம்புப் புற்றுகளில் முட்டையும் பாலும் வைத்து வணங்கும் நம்பிக்கை இன்றுகூட நம் மக்களிடம் உள்ளது .
இத்தகைய கொடிய பாம்புகள் கடித்தால் மருத்துவம் செய்வதை விட மந்திரித்துக் கொள்வதே தக்கது என்று தமிழர் எண்ணியிருந்தனர் .
கொள்ளைநோய் , அம்மை போன்றவை தெய்வத்தின் சினத்தால் வந்தவை என்று கருதியிருந்தனர் .
இப்படிப்பட்ட நம்பிக்கைகளை அறவே நீக்கி எந்த நோய்க்கும் மருத்துவம் செய்து கொள்வது தக்கது என்ற கருத்தை ஐரோப்பிய நாகரிகம் நம்மிடையே உண்டாக்கியது .
பாம்புக்கடிக்கும் , வெறிநாய்க்கடிக்கும் , அம்மை , கொள்ளைநோய் ஆகியவற்றுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துத் தந்தது ஐரோப்பிய அறிவியல் .
ஆழமான கிணறு :
கைப்பிடிச் சுவர் இல்லை .
இதில்தான் நம் கிராமத்துப் பெண் இடுப்புமுறியத் தண்ணீர் இறைப்பாள் .
இதோ மணல் பரந்த ஆறு : இதில் தான் நம் முன்னோர் ஊற்றுத் தோண்டித் தண்ணீர் பெற்றனர் .
இப்போது ஊரெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகள் இயங்குகின்றன .
மின்சாரம் கிராமங்களில் நிலையாக அப்பிக் கொண்டிருந்த இருளைத் துடைத்துவிட்டது .
ஊரெங்கும் ஒளிமெழுகும் வழிகள் இரவைப் பகலாகக் காட்டுகின்றன .
கழிப்பறை அமைப்பு இன்று தூய்மை பேணுகின்றது .
இவற்றையெல்லாம் நம்மிடையே கொண்டு வந்து தந்தது ஐரோப்பிய நாகரிகமே .
• உணவு , உடைப்பழக்கங்கள்
ஐரோப்பியர் வரவால் நம் உடைகளில் தாம் எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள் !
கால்சராய் , மேலே Coat எனப்படும் குப்பாயம் , அழகிய கழுத்துப்பட்டி ( Tie ) , கால்களில் Boot எனப்படும் மூடிய காலணி , காலுறைகள் எனத் தோற்றத்திற்கு ஏற்றமும் மதிப்பும் கூட்டியுள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன .
உணவில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . பல குடும்பங்கள் இன்று பிறந்த நாள் கேக் வெட்டுகின்றன .
கோதுமை ரொட்டி உணவு பரவலாகி உள்ளது .
ரொட்டி , வெண்ணெய் , பழக்கூழ் ஆகியவை பலரின் காலை உணவாகியுள்ளன .
• பயண வசதிகள்
ஐரோப்பியர் வரவால் பரந்த இந்த உலகம் சுருங்கி விட்டதா ?
வானூர்தியில் பறந்து பறந்து போய்த் தூர துருவங்களைத் தொட்டு விட்டுத் திரும்பும் வேக விளையாட்டு அல்லவா இப்போது நிகழ்கிறது !
தொடர்வண்டிகள் பந்தயக் குதிரைகளைப் போல் பறக்கின்றன .
பேருந்துகள் மாநிலத்தின் வெவ்வேறு முனைகளை விரைவாகத் தொட்டுத் திரும்புகின்றன .
• வேளாண் வளர்ச்சி
இதோ இந்த வயற்காட்டைப் பாருங்கள் .
செந்நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும் , புன்செய்க் கொல்லைகளும் இவ்வளவு செழுமையாய் முன்பு இருந்தனவா ?
இல்லை .
வீரிய விதைகள் , தீவிர சாகுபடித் திட்டங்கள் , ஊட்டமளிக்கும் உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் , பருவந்தோறும் தக்க செய்நேர்த்திகள் , புதிய பயிர் வகைகள் ஆகியவற்றால் இன்று வேளாண்மை மிகுந்த பயன் தருவதாக அமைந்துள்ளது .
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை
என்ற நிலை மாறி வேளாண் தொழில் இயந்திரத் தொழில் நுட்ப உதவியால் இன்று வேகப்படுத்தப்பட்டுள்ளது .
கைத்தொழில் என்பதெல்லாம் இன்று இயந்திரங்களின் உதவியால் செய்யப்பெறும் தொழிலாகி விட்டது .
வீட்டில்தான் எத்தனை இயந்திரங்கள் !
பழைய அம்மிக்கல் திருமணத்தின் போது மிதிப்பதற்குக் கூடக் கிடைக்காமல் போய்விட்டது .
• அச்சுப்பொறியும் அறிவு வளர்ச்சியும்
ஐரோப்பியர் வரவால் நம்மிடம் ஏற்பட்ட ஒரு பெரிய மாறுதல் அச்சுப்பொறியால் ஏற்பட்டதாகும் .
ஓலைச்சுவடிகளிலிருந்து மெல்ல அழிந்து கொண்டிருந்த நூல்களை அச்சுவடிவில் கொண்டு வர அவர்களின் வருகை தானே உதவியது .
நில இயல் , பயிரியல் , விலங்கியல் , உயிரியல் என்று பலப்பல துறைகளுக்குரிய நூல்கள் எழுதப் பெற்றன .
தமிழில் புத்தம் புதுக்கலைகள் , பஞ்ச பூதத்தின் செயல்கள் விளக்கப்பட்டன .
பொதுவாகவே அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்க ஐரோப்பியர் பண்பாடு உதவியது .
பேய் , பிசாசு , ஏவல் , பில்லி சூனியம் , வேதாளம் , காட்டேறி , கருப்பு என்ற அறிவு சாராத நம்பிக்கைகள் மெல்ல நம்மை விட்டு அகன்றன .
3.3.3 ஐரோப்பியப் பண்பாடு செய்த தீமைகள்
ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன .
அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை .
நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது .
• ஆங்கில ஆதிக்கம்
இன்று தமிழனின் பேச்சைக் கவனியுங்கள் .
நான்கைந்து சொற்களுக்கு இடையே ஆங்கிலச் சொல் புகுந்துவிடுகிறது .
அவ்வளவு ஏன் ?
ஒரு திரைப்படப் பாடல் கேளுங்கள் !
அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள் !
ஆங்கிலச் சொற்கள் கலந்து வழங்கப் பெறுதலைக் காணலாம் .
உணவு தரு விடுதிகளைக்
‘ கிளப் ’ என வேண்டும் போலும் !
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு ‘ சில்கு ஷாப் ’
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும் !
என்று இந்த நிலையை எண்ணிப் பாரதிதாசன் வருந்துகின்றார் !
• தமிழின் நலிவு
ஆங்கிலம் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும் , அலுவல் மொழியாகவும் , கல்வி மொழியாகவும் , தொடர்பு மொழியாகவும் பன்னெடுங்காலம் இருக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழ் நலிந்தது .
தமிழ் பலதுறைகளிலும் வளர்தல் தடைப்பட்டது .
அறிவியலைக் கற்பிப்பதற்கு ஆங்கிலமே பொருத்தமான மொழி என்ற தவறான கருத்து நிலவியது .
ஐரோப்பியர் வாணிகத்தின் காரணமாக இந்தியாவிற்கு வந்தவர் .
இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் , தமிழகத்திலிருந்தும் , அரிய கலைச்செல்வங்களையும் மதிப்புமிக்க செல்வப் பொருட்களையும் ஐரோப்பியர் கொண்டுபோய்விட்டனர் . • சுயமரியாதை இழப்பு
இவை மட்டுமா ?
ஆங்கிலேய அதிகாரிகளைத் ‘ துரைமார்கள் ’ என்று அழைத்த தமிழர்கள் அவர்களுக்கு வேலைக்காரர்கள் ஆயினர் .
தொண்டு செய்யும் அடிமைக் கூலிகளாகிச் சுயமரியாதை இழந்தனர் .
அரசியல் சூழ்ச்சி வலையால் தமிழர்களைப் பிரித்து அடிமைப்படுத்திய ஐரோப்பியர் , பல பிரிவுகளைத் தமிழர்களிடையே வளர விட்டனர் .
பிரித்தாளும் சூழ்ச்சியால் , செல்வர்களுக்குப் பட்டங்கள் கொடுத்தனர் .
கூலிக்காரர்களுக்கு அலுவலக வேலை தந்தனர் .
ஆங்கிலப் பண்பாடு உயர்ந்தது என்ற மாயையினை உண்டாக்கினர் .
உரிமைக் கிளர்ச்சி , விடுதலை இயக்க முயற்சி ஆகியவற்றை ஐரோப்பியர் நலியச் செய்தனர் .
போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோரைச் சிறைக்கூடத்தில் தள்ளிச் சித்திரவதை செய்தனர் .
• பரம்பரைப் பழக்கங்களின் மறைவு
அடுத்து நாம் மிகவும் ஆழ்ந்து கருதவேண்டிய ஒன்றை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும் .
தமிழ்க் கல்வி , தமிழ் மருத்துவம் , தமிழ்க்கலை என்பன படிப்படியாக மறக்கப்பட்டன .
தமிழ்நாட்டு மூலிகைகளின் பெயர்களும் , அவற்றின் மருத்துவப் பண்புகளும் நினைவிலிருந்து நீங்கிவிட்டன .
தமிழர் சீயக்காய் , ஆவாரம்பொடி , பயற்றமாவு , புற்றுமண் போன்றவற்றைத் தேய்த்து ஓடும் நீரில் நீராடும் வழக்கமுடையவர்கள் .
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தினர் .
இவையெல்லாம் ஐரோப்பியர் வரவால் குலைந்தன .
சோப்பு , சவர்க்காரம் , ஷாம்பு , முகத்திற்குப் பவுடர் என ஆடம்பர சாதனங்கள் பெருகின .
தமிழ்மக்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கு புறவயமான ஆடம்பரப் பொருள்களின் பொருட்டாக வாரி இறைக்கப்படும் வழக்கம் உருவாயிற்று .
புற அழகைக் கவர்ச்சியாகக் காட்டும் ஒப்பனைப் பொருள்களில் இந்தியப் பெண்களுக்கு மேலை நாகரிகத்தால் ஓர் ஈடுபாடு ஏற்பட்ட நிலையில் , வலிமைமிக்க தமிழர் பண்பாட்டின் கூறுகளான சில நல்ல பழக்கங்கள் நழுவத் தொடங்கின .
மஞ்சள் பூச்சு , மாக்கோலப் புனைவு , வீட்டிற்கு முன் சாணம் தெளித்தல் , வாழை இலை உணவு ஆகியவை தமிழர் வாழ்விலிருந்து நீங்கி வருகின்றன .
பதநீர் , இளநீர் , நீராகாரம் ஆகியவற்றின் இடத்தைக் காப்பி , தேநீர் , ஐஸ்கிரீம் ஆகியவை பிடித்துக் கொண்டன .
திருமணத்தை வாழ்நாள் பிணைப்பாகவும் , இரண்டுயிரின் ஒருமைப்பாடாகவும் கருதிய நிலை தளர்ந்தது .
மணமுறிவு , மணவிலக்கு ஆகியன நம்மிடையே புகுந்துவிட்டன .
‘ மூன்றாவது முறையாக விவாகரத்து செய்தார் ’ என்று செய்தியோடு ஒரு பெண்ணைக் குறித்து எழுதும் புதுமை தமிழகத்தில் காணப் பெறுகின்றது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. ஆங்கிலேயர்க்கு நாம் அடிமைப்படக் காரணமாக இருந்தவை யாவை ?
விடை
2. தமிழர் வாழ்வில் ஆங்கிலம் நன்கு கலந்து விட்டதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறுக .
விடை
3. இந்தியப் பண்பாட்டின் அச்சாணிகள் எவை ?
விடை
4. தமிழர் பண்பாட்டின் சிறப்புக்களில் மூன்றைக் குறிக்க .
விடை
5. தமிழில் வந்து புகுந்த சமஸ்கிருதச் சொற்கள் ஐந்தைக் கூறுக .
விடை
6. தமிழில் வந்து கலந்த ஆங்கிலச் சொற்கள் நான்கைக் கூறுக .
ஐரோப்பியப் பண்பாட்டின் பங்களிப்பு
தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர் பலரும் தமிழர் பண்பாட்டால் ஈர்க்கப் பெற்றனர் .
தமிழ்நாட்டின் உணவு , உடை ஆகியன ஐரோப்பியரைக் கவர்ந்திருக்கின்றன .
போப்பையரைத் திருக்குறள் நெறிகளும் திருவாசகம் காட்டும் இறையன்பும் பெரிதும் கவர்ந்தன .
தமிழ்நாட்டு நிலப்பின்னணியில் இயேசுவின் வரலாற்றைப் புனைந்து பாடினார் வீரமாமுனிவர் .
தமிழ்நாட்டுத் தெய்வ வடிவங்களில் நடராசர் வடிவம் ஐரோப்பியரைப் பெரிதும் கவர்ந்தது .
போப்பையர் தம்மை ஒரு தமிழ் மாணவன் என்று குறித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார் .
இல்லறநெறியில் ஆண் , பெண் கொண்டிருந்த விலக்கிக் கொள்ள முடியாத உறவு ஐரோப்பியரைக் கவர்ந்தது .
3.4.1 நன்மையும் அறிவும் எத்திசையது ஆயினும்
ஏற்புடையனவே
இந்தியா முழுவதும் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் தன் பங்கை உரிய வகையில் ஆற்றியது .
இந்த நிலையில் தமிழர்களுக்கு அந்நியப் பொருள்கள் , அந்நியத் துணி , அந்நிய நாகரிகம் ஆகியவற்றில் ஒரு மோகம் பிறந்தது .
மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும்