6

மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும் .

மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர் .

இந்த எழுத்துகள் புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும் கூறுவர் .

உயிர் எழுத்துகள் 12 , மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும் .

‘ உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே ’ ( 59 )

என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது .

3.1.2 சார்பு எழுத்துகள்

தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன .

இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில் , அவற்றின் கூட்டாக அமைகின்றன .

அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து ( துணைஎழுத்தாக ) நிற்கின்றன .

எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன .

உயிர்மெய் , ஆய்தம் முதலிய எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும் .

• உயிர்மெய்

உயிர் ( ஒலியும் ) எழுத்துகளும் மெய் ( ஒலியும் ) எழுத்துகளும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உண்டாகின்றன .

உயிர் ஒலியே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால் அதற்கு முதல் இடம் தந்து , ‘ உயிர்மெய் ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .

மெய் உயிர் உயிர்மெய் ( வரி வடிவம் )

க் + இ = கி

ச் + உ = சு

ப் + ஊ = பூ

வ் + ஆ = வா

த் + ஏ = தே

இந்த எழுத்துகள் எல்லாம் உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உருவாகிய எழுத்துகள் என்பதால் , இவற்றை உயிர்மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம் .

மேலே காட்டிய எழுத்துகளை நீங்களும் ஒலித்துப் பாருங்கள் , இந்த எழுத்துகளில் மெய் எழுத்தின் ஓசையும் , உயிர் எழுத்தின் ஓசையும் இணைந்து இருப்பதைக் காணலாம் ,

• ஆய்தம்

தமிழ் மொழியில் ஃ என்று ஓர் எழுத்து உள்ளது , இதைஆய்த எழுத்து என்று சுட்டுவர் .

இது சொற்களில் பின்வருமாறு வரும் .

அஃது , எஃகு

ஆய்த எழுத்து ஃ என்ற முக்கோண வடிவத்தில் உள்ளது .

இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால் இதை முப்புள்ளி , முப்பாற்புள்ளி என்றும் அழைப்பர் .

ஆய்த எழுத்து உயிர் எழுத்தோடும் மெய் எழுத்தோடும் ஒன்றாமல் இருப்பதால் இதைத் தனிநிலை என்றும் சுட்டுவர் .

ஆய்த எழுத்துகள் சொல்லில் வரும்போது , அதற்கு முன்னும் பின்னும் வேறு எழுத்துகள் வருகின்றன .

ஆய்த எழுத்தும் மற்ற எழுத்துகளைச் சார்ந்தே வருகிறது .

எனவே இதுவும் சார்பு எழுத்து எனப்படுகிறது .

தமிழில் வேறு சில சார்பு எழுத்துகளும் உள்ளன .

அவை பின் வரும் பாடங்களில் விளக்கப்படும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

விடை

2. சார்பு எழுத்துகள் எனப்படுபவை யாவை ?

விடை

3. தனிநிலை என்றால் என்ன ?

விடை

3.1.3 உயிர் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும் .

அவை ,

1. குறில் 2. நெடில்

என்பவை ஆகும் .

• குறில் பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் குறுகி ஒலிக்கின்றன .

அவ்வாறு குறுகி ஒலிக்கும் எழுத்துகளைக் குறில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர் .

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை நோக்குங்கள் .

அ , ஆ , இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஒள

இவற்றில் அ , இ , உ , எ , ஒ ஆகிய ஐந்தும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என்று குறிப்பர் .

‘ அ , இ , உ , எ , ஒ , குறில் ஐந்தே ’ ( 64 )

என்னும் நன்னூல் நூற்பா , அ , இ , உ , எ , ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது .

• நெடில்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் நீண்டு ஒலிக்கின்றன .

அவ்வாறு நீண்டு ஒலிக்கும் எழுத்துகளை நெடில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர் .

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெட்டெழுத்து அல்லது நெடில் எழுத்துகள் என்று குறிக்கப்படும் .

‘ ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள நெடில் ’ ( 65 )

என்னும் நன்னூல் நூற்பா ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது .

3.1.4 மெய் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகளில் இவ்வாறு குறில் , நெடில் வேறுபாடு உண்டு , ஆனால் மெய் எழுத்துகளில் இவ்வாறான குறில் , நெடில் வேறுபாடு இல்லை .

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உண்டாகும் உயிர்மெய் எழுத்துகளிலும் இதே போல குறில் நெடில் வேறுபாடு உண்டு .

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும் .

அவை ,

1. வல்லினம்

2 , மெல்லினம்

3. இடையினம்

• வல்லினம்

மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லினம் என்று கூறுவர் .

க் , ச் , ட் , த் , ப் , ற் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் ஆகும் .

வல்லினம் க , ச , ட , த , ப , ற என ஆறே ( 68 )

என்னும் நன்னூல் நூற்பா வல்லின எழுத்துகள் எவை என்றுகுறிக்கிறது .

• மெல்லினம்

மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் என்று கூறுவர் .

ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும் .

மெல்லினம் ங , ஞ , ண , ந. ம , ன என ஆறே ( 69 )

என்னும் நன்னூல் நூற்பா மெல்லின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது .

• இடையினம்

மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர் .

ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும் .

இடையினம் ய , ர , ல , வ , ழ , ள என ஆறே ( 70 )

என்னும் நன்னூல் நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது .

3.1.5 இன எழுத்துகள்

பிறப்பு , ஒலிப்பு முதலியவற்றில் ஒத்து இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர் .

உயிர் எழுத்துகள் குறில் .

நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளன .

குறில் எழுத்துகள் ஐந்தும் நெடில் எழுத்துகள் ஏழும் உள்ளன .

இவற்றின் ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர் .

அ ஆ

இ ஈ

உ ஊ

எ ஏ

-- - ஐ

ஒ ஓ

-- - ஔ

நெடில் எழுத்தாக ; உள்ள ஐ , ஒள ஆகியவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் இல்லை . மெய் எழுத்துகளில் ஆறு மெல்லின எழுத்துகளும் ஆறுவல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன .

மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் பின்வருமாறு அமையும் .

க் ங் தங்கம்

ச் ஞ் பஞ்சு

ட் ண் நண்டு

த் ந் பந்து

ப் ம் பாம்பு

ற் ன் கன்று

இந்தச் சொற்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கவனியுங்கள் , இவற்றில் ங்க , ஞ்சு , ண்டு , ந்து , ம்பு , ன்று என்று வந்துள்ளதைக் கவனியுங்கள் , இந்தச் சொற்களில் மெய் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அடுத்தடுத்து வந்துள்ளன .

முன்பு உயிர் எழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்த்தோம் .

இவை மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் ஆகும் .

க , ச , ட , த , ப , ற என்ற வல்லின எழுத்துகள் ஆறும் தனியே ஒலிக்கும்போது வன்மையாக ஒலிக்கும் .

மேலே காட்டியபடி சொற்களில் மெல்லின எழுத்துகளை ஒட்டி வரும்போது இவை மென்மையாகவே ஒலிக்கும் .

வல்லின எழுத்தை ஒட்டி வரும்போது வன்மையாக ஒலிக்கும் .

சங்கு பக்கம்

நஞ்சு நச்சு

பண்டம் பட்டம்

மந்தி கத்தி

பம்பரம் கப்பல்

இன்று நேற்று

மேலே காட்டப்பட்டுள்ள சொற்களில் இடப்பக்கம் உள்ளவை மென்மையாகவும் வலப்பக்கம் உள்ளவை வன்மையாகவும் ஒலிக்கும் என்பதை ஒலித்துப் பாருங்கள் .

3.1.6 சுட்டு எழுத்துகள்

ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் எழுத்துகள் சில உள்ளன , பின்வருவனவற்றைப் படியுங்கள் ,

அவ்வீடு

இப்புத்தகம்

அம்மரம்

இப்பூனை

மேலே , வீடு , புத்தகம் , மரம் , பூனை முதலிய சொற்களுக்கு முன் அ , இ ஆகிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன .

இந்த எழுத்துகள் பொருள்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன .

ஒரு பொருளின் பெயருக்கு முன் இந்த எழுத்துகள் வந்து , அந்தப் பொருளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன .

ஒரு தென்னந்தோப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிற்கும் .

மரங்கள் என்று சொன்னால் அது அந்தத் தோப்பில் உள்ள மரங்களைக் குறிக்கும் .

மரம் என்றால் அது தோப்பில் உள்ள ஏதோ ஒரு மரத்தைக் குறிக்கும் .

அம்மரம் என்று சொன்னால் அத்தோப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரம் சுட்டிக்காட்டப்படுவதை நாம் உணரமுடியும் .

இவ்வாறு சுட்டிக்காட்ட உதவும் எழுத்து , சுட்டு எழுத்து எனப்படும் .

அ , இ , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும் .

உ என்ற சுட்டு எழுத்து , தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை .

உதுக்காண்

உவன்

உங்கே

என்ற இடங்களில் உகரம் சுட்டு எழுத்தாக வந்துள்ளதைக் காணலாம் .

இக்காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டும் உகரச் சுட்டைப் பயன்படுத்துகின்றனர் , மற்றபடி இக்காலத் தமிழ் மொழியில் உகரச் சுட்டு இடம்பெறுவதில்லை .

அ , இ , உம் முதல் தனிவரின் சுட்டே ( 66 )

என்னும் நன்னூல் நூற்பா சுட்டு எழுத்துகள் எவை என்று குறிக்கிறது .

• சேய்மைச் சுட்டு

அவ்வீடு

அக்கரை

அம்மரம்

அக்குளம்

மேலே காட்டப்பட்ட எடுத்துக் காட்டுகளில் , அவ்வீடு , அம்மரம் முதலியன தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டுகின்றன , எனவே இதனைச் சேய்மைச் சுட்டு என்கிறோம் . சேய்மை என்பது தொலைவு என்று பொருள்படும் .

• அண்மைச் சுட்டு

இப்பூனை

இப்புத்தகம்

இம்மாடு

இக்கட்டில்

இப்புத்தகம் , இப்பூனை முதலியன அருகில் உள்ள பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன .

எனவே இவற்றை அண்மைச் சுட்டு என்கிறோம் .

அண்மை என்பது அருகில் என்று பொருள்படும் .

• அகச்சுட்டு

அவன்

இவள்

அது

இது

இந்தச் சொற்களில் அ , இ ஆகிய எழுத்துகள் சுட்டுப்பொருளை உணர்த்தி வருகின்றன .

இவை சொல்லுக்கு உள்ளேயே இருக்கின்றன .

அவன் என்பதில் ’அ ’ என்ற சுட்டு எழுத்தை நீக்கிவிட்டால் ‘ வன் ’ தனியே நின்று பொருள் இல்லாமல் போய்விடும் .

எனவே இவற்றைச் சொல்லில் இருந்து தனியே பிரித்துக் காணமுடியாது .

ஒரு சொல்லுக்கு உள்ளே இருந்து , சுட்டுப் பொருளையும் உணர்த்துவதால் , இவற்றை அகச் சுட்டு என்று கூறுவர் .

அகம் என்பது உள்ளே என்று பொருள்படும் .

• புறச்சுட்டு

அவ்வீடு

இம்மனிதன்

அக்குளம்

இம்மாடு

மேலே காட்டியவற்றில் அ , இ ஆகிய சுட்டு எழுத்துகள் வீடு , மனிதன் முதலியவற்றுடன் கூடி .

ஒரே சொல் போன்று காட்சி தருகின்றன .

எனினும் இவற்றைத் தனியே பிரிக்க முடியும் .

எடுத்துக்காட்டாக மேலே உள்ள சொற்களில் சுட்டு எழுத்துகளை நீக்கிப் பார்க்கலாம் .

அ + வீடு

இ + மனிதன்

அ + குளம்

இ + மாடு

இவற்றில் சுட்டு எழுத்தை நீக்கிய பின் வீடு , மனிதன் , குளம் , மாடு ஆகிய சொற்கள் தனித்து நிற்கின்றன .

இந்த எடுத்துக்காட்டுகளில் சொல்லுக்கு வெளியே இருந்து சுட்டு எழுத்துகள் சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இவை புறச் சுட்டு எனப்படுகின்றன , புறம் என்பது வெளியே என்று பொருள்படும் .

• சுட்டுத் திரிபு

அந்த மரம்

இந்த வீடு

அந்த மாடு

இந்த ஆடு

மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளில் மரம் , வீடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த , இந்த ஆகியவை சொல்லுக்கு வெளியே தனியே நின்றுள்ளன .

இவை அடிப்படையில் அ , இ என்ற சுட்டு எழுத்துகளே .

ஆனால் இங்கு அந்த , இந்த என்று மாறியுள்ளன .

இவை தம் வடிவத்திலிருந்து திரிந்து , பொருளைச் சுட்டுகின்றன .

எனவே இவற்றைச் சுட்டுத் திரிபு என்று கூறுவர் .

3.1.7 வினா எழுத்துகள்

அ , இ ஆகிய எழுத்துகள் சுட்டுப் பொருள் தருவது போலவே , சில எழுத்துகள் வினாப் பொருளைத் தருகின்றன .

கீழே உள்ளவற்றைக் கவனிக்க .

வினா என்பதும் கேள்வி என்பதும் ஒரே பொருள் தருவன .

யார் ? எங்கு ?