71

எனவே , மனிதன் பேசும் மொழி , அணியும் ஆடை , உண்ணும் உணவு , வாழும் முறை , செய்யும் பணி , எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாகக் கருதப்படுகின்றன .

1.2.1 உணவு

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானது உணவு .

ஆனால் , அவன் எதை உண்ணவேண்டும் , எப்பொழுது உண்ண வேண்டும் , எப்படி உண்ணவேண்டும் என்பதை அவனது பண்பாடுதான் கற்றுக் கொடுக்கிறது .

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள் , காலை உணவாகத் தீயில் சுட்ட ( smoked Fish ) மீனை உண்ணுவார்கள் .

அமெரிக்கர்கள் , குளிர்ந்த தானியங்களை உண்ணுவார்கள் .

தமிழர்கள் காலை உணவாக , ஆவியில் வேகக்கூடிய , இட்லி போன்ற உணவுகளை உண்பார்கள் .

இவை எதைக் காட்டுகின்றன ?

அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப அவர்களின் உணவு வகைகள் அமைந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன .

• உண்ணும் நேரம்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் , நடுமேற்குப் பகுதியில் வாழ்பவர்கள் இரவு உணவை , மாலை 5 அல்லது 6 மணிக்குள் உண்டுவிடுவார்கள் .

ஸ்பானியர்கள் இரவு 10 மணிக்குத்தான் இரவு உணவை உண்பார்கள் .

சமணர்கள் , இரவு வருவதற்குள் , அதாவது இருட்டுவதற்கு முன்னர் , தங்கள் இரவு உணவை உண்பார்கள் .

தமிழர்கள் இரவு 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை உண்பார்கள் .

இவை ஒவ்வொருவரின் பண்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளன .

• உண்ணும் முறை

உண்ணும் முறையிலும் ஒவ்வொருவரது பண்பாடும் வெளிப்படுகிறது .

1. மேலைநாடுகளைச் சேர்ந்தவர்கள் , உயர்ந்த நாற்காலியில் அமர்ந்து , உயர்ந்த மேசை மீது உணவை வைத்து உண்பார்கள் .

2. சப்பானியர் , பாயில் அமர்ந்து , குள்ளமான மேசை மீது உணவைப் பரிமாறி உண்பார்கள் .

3. தமிழர்கள் , பாயில் உட்கார்ந்து , தரையில் பரப்பிய வாழை இலையில் உணவை உண்பார்கள் .

இவை , மனிதன் தனக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொழுது பின்பற்றும் முறையினால் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள் .

1.2.2 அணியும் ஆடை

‘ ஆள் பாதி ஆடை பாதி ’ என்று தமிழில் ஒரு பழமொழி வழங்குகிறது .

ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை , தரம் , சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர் .

ஆடை என்பது ஒருவனை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று .

ஒருவன் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு , அவன் எந்த நாட்டைச் சார்ந்தவன் , எந்தச் சமயத்தைச் சார்ந்தவன் , எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவன் என்பன போன்றவற்றை அறிய இயலும் .

அதோடு மட்டுமல்லாமல் , ஒருவன் அணியும் ஆடையும் ஒருவனது பண்பாட்டை வெளிப்படுத்தும் .

• தமிழர்களும் ஆடையும்

தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது , நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் ( habit )

இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு .

தமிழர்களும் ஆடையும்

பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள் , உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர் .

பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் ( Tropical Region ) மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர் .

ஆனால் , பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும் ?

அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள் .

இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை .

அச்சமும் , நாணமும் கொண்ட பெண் , தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள் .

எனவே , தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள் .

இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது .

பண்பாட்டின் வகைகள்

பண்பாட்டை மூன்று வகையாகச் சமூக இயல் அறிஞர்கள் பிரிப்பார்கள் .

1. மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை ( Basic needs ) நிறைவு செய்யும் முறைகளினால் வெளிப்படும் பண்பாடு .

2. கல்வி , கேள்வி வழியாகப் பேணப்படும் பண்பாடு

3. குறியீடுகளைப் ( Symbols ) பயன்படுத்துவதின் வாயிலாக வெளிப்படும் பண்பாடு .

1.3.1 அடிப்படைத் தேவைகளும் பண்பாடும்

மனிதனின் அடிப்படையான தேவைகள் உணவு , உடை , உறைவிடம் ஆகும் .

இவற்றின் வாயிலாகவும் ஒருவன் சார்ந்திருக்கும் பண்பாடு வெளிப்படும் .

இவற்றுள் உணவு , உடை ஆகியவை பற்றி முன்னரே விளக்கினோம் .

இனி , உறைவிடம் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையினைப் பார்ப்போம் . • உறைவிடம்

காடுகளில் விலங்கினங்களோடு வாழ்ந்த மனிதன் , விலங்கினங்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு , இயற்கையான மழை , வெயில் ஆகியவற்றிலிருந்து வரும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு , பாதுகாப்பாக வாழ்வதற்குப் பல உறைவிடங்களைத் தேர்ந்தெடுத்தான் .

மலைக்குகைகளில் ( Cave ) வாழ்ந்தான் .

மரத்தின்மேல் பரண் அமைத்து வாழ்ந்தான் .

அதன்பிறகு படிப்படியாக , குடிசைகள் அமைத்து , கட்டடங்கள் கட்டித் தான் வாழும் இருப்பிடத்தை அல்லது உறைவிடத்தைச் சிறப்பாக அமைத்தான் .

இத்தகைய உறைவிடங்களும் அவரவர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயிலாகவும் இருந்தன .

• தமிழர் உறைவிடம்

தமிழ் மக்களும் இத்தகைய நீரோட்டத்தில் தம்மையும் உட்படுத்தியவர்களே .

இருப்பினும் தங்கள் பண்பாட்டிற்கு ஏற்பத் தம் உறைவிடங்களையும் உருவாக்கிக் கொண்டனர் .

தமிழர்களின் வீட்டு அமைப்பில் உள்முற்றம் , வெளிமுற்றம் , முன்பக்கம் திண்ணை போன்றவை அமைந்திருக்கும் .

இந்த அமைப்பே தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் .

மகளிர் , ஆடவர்களைப்போல வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கின்றவர்கள் அல்லர் .

வீட்டிற்குள்ளேயே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியையும் கழிப்பவர்கள் .

அவர்களது அன்றாட நடவடிக்கைகள் , அடுக்களையில் சமையல் செய்வதிலிருந்து தொடங்கும் .

ஏனைய நேரங்களில் உள்முற்றத்திலேயே பொழுதைப் போக்குவர் .

பெண்மக்களுக்குள் உரையாடல் , உணவுப்பொருள்களை உலர வைத்தல் , அம்மானை ஆடல் , கழல் விளையாடல் முதலிய பல செயல்கள் உள் முற்றத்திலே நிகழும் .

உள் முற்றம் திறந்த வெளியாகவும் , ஞாயிற்றின் ஒளிவருமாறும் அமைக்கப் பட்டிருக்கும் .

உள்முற்றம்

வெளிமுற்றம் வீட்டிற்கு முன்னால் வெளிமுற்றம் அமைந்து இருக்கும் .

நாள்தோறும் காலையில் எழுந்ததும் முதல் நிகழ்ச்சியாக முற்றத்தைச் சுத்தம் செய்து , தண்ணீர் தெளித்து , மெழுகி , முருகியல் உணர்வு ( aesthetic sense ) கொண்ட அழகிய கோலங்களைப் பெண்மக்கள் இடுவார்கள் .

ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு வகையான அழகு மிகுந்த கோலங்களை இடுவர் .

தமிழில் " கோலம் " என்பதற்கே அழகு என்று பொருள் .

அவை தமிழர்களின் பண்பாட்டுக் கூறான , கலைத் தன்மையினை வெளிப்படுத்துவன .

மேலும் வெளிமுற்றத்தில் , தாய் தன் குழந்தைக்கு நிலாவினைக் காட்டி சோறு ஊட்டுவாள் .

சிறுவர்கள் நிலா விளையாட்டு விளையாடுவார்கள் .

ஆடவர் அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் உரையாடுவர் .

அறுவடை செய்த தானியங்களையும் சேமித்து வைப்பர் .

இன்றைக்கும் கிராமங்களில் உள்ள தமிழர்கள் வீடுகளில் திண்ணை ( PIAL ) அமைந்திருப்பதைப் பார்க்கலாம் .

தமிழர்களின் விருந்தோம்பும் பண்பாட்டிற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது திண்ணையே .

திண்ணை

போக்குவரத்து வசதியில்லாத காலத்தில் , ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்யும்போது இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ள இயலாது .

அத்தகைய சூழலில் போகும் வழியில் உள்ள பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வீட்டுத் திண்ணையில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு , மீண்டும் மறுநாள் காலையில் தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள் .

வழிப்போக்கர் யார் வந்தாலும் தங்கிச் செல்லும் வகையில் , வீடுதோறும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும் .

தங்கள் வீட்டுத் திண்ணையில் தங்கிச் செல்லும் வேற்று ஊர்க்காரர்களுக்குத் தேவைப்பட்ட உணவையும் , பிற உதவிகளையும் செய்து மகிழ்வர் .

விருந்தோம்பலின் அடையாளமாக வீட்டுத் திண்ணைகளை அமைத்திருப்பது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று .

1.3.2 பண்பாட்டுக்கல்வி

எந்த ஒரு மனிதனும் பண்பாட்டுக் கூறுகளுடன் பிறப்பதில்லை .

எனவே , வம்சா வழியாக ( biological inheritance ) அவனிடம் பண்பாடு வந்து சேராது .

அவனாகவே , பிறரிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டும் .

குழந்தை தனது அனுபவத்தினாலும் , பிறரைப் போலச் செய்தலினாலும் ( imitation ) பண்பாட்டைத் தெரிந்து கொள்ளுகிறது .

தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் என்ன பேசுகிறார்கள் , என்ன செய்கிறார்கள் , எதை எதை எல்லாம் சரி என்று சொல்கிறார்கள் , எதையெல்லாம் தவறு என்று கூறுகிறார்கள் என்பவற்றைக் கவனித்தும் ( watching ) , கூர்ந்து நோக்கியும் ( observation ) , தான் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து கொள்ளுகிறது .

• கற்று அறிவது

சில பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றோரோ , பிறரோ சொல்லிக் கொடுப்பதில் இருந்து குழந்தைகள் தெரிந்து கொள்ளுகின்றனர் .

எடுத்துக்காட்டாகத் தமிழ்க் குழந்தைகளிடம் பெரியவர்களைப் பார்த்தால் எழுந்திருக்க வேண்டும் , வணக்கம் சொல்ல வேண்டும் , பணிவாகப் பேச வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுக்கின்றனர் .

குழந்தைகள் அவற்றைப் பின்பற்றுகின்றன .

• தானாக அமைவது

ஆயினும் , குழந்தைகளிடம் சில பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் அறியாமலே , அவர்களிடம் படிந்துவிடுவதும் உண்டு .

எடுத்துக்காட்டாக , அரேபியர்கள் , ஒருவரோடு ஒருவர் பேசும் பொழுது மிகவும் நெருங்கி நின்று பேசுவார்கள் .

அரேபியக் குழந்தைகளும் , அவர்களை அறியாமலே எல்லோரிடமும் நெருங்கி நின்று பேசுகிறார்கள் .

இதை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை . இந்தப் பண்பாட்டுக் கூறு குழந்தைகளிடம் தானாகவே அமைந்து விடுகிறது .

1.3.3 பண்பாடும் குறியீடும்

ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு ( Symbol ) எனப்படும் .

சிவப்புக் கொடி அபாய அடையாளத்தின் குறியீடு .

ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் குறியீடுகளும் அவரவர்களின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன .

• வண்ணங்கள்

பல்வேறு சமுதாயங்களும் வண்ணங்களை ( colours ) வெவ்வேறு பொருள் உணர்த்தும் குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றன .

ஒரே வண்ணம் , ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்ப , ஒவ்வொரு விதமான பொருளைக் கொடுக்கும் .

எடுத்துக்காட்டாக , வெண்மை நிறம் , ஐரோப்பியர்களிடையே தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது .

திருமணங்களில் வெள்ளை ஆடைகளையே அவர்கள் அணிகின்றனர் .

வெண்மை அங்கு மங்கலமாகக் கருதப்படுகிறது ; கருப்பு துக்கத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது .

ஆனால் , சீனர்களுக்கோ வெள்ளை நிறம் துக்கத்தின் அடையாளம் !

• தாலியும் மெட்டியும்

தமிழ்நாட்டில் திருமணமான பெண்கள் கழுத்தில் அணியும் தாலியும் , காலில் அணியும் மெட்டியும் இவ்வகையில் பண்பாட்டுக் குறியீடுகளே யாகும் .

இவ்வாறு , எல்லாப் பண்பாடுகளும் , தங்கள் பண்பாட்டை வெளிப்படுத்தவும் , அதனைப் பேணவும் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன .

நெற்றியில் அணியும் திலகமும் , திருநீறும் , தலையில் சூடும் மலரும் , கைகளில் அணியும் வளையலும் இவ்வகையிலான பண்பாட்டுக் குறியீடுகளே .

பண்பாட்டில் கூட்டு வடிவங்கள் தனிக்கூறுகளும்

தனிக்கூறுகளும் , தொடர்புடைய தனிக்கூறுகள் சில இணைந்தும் உருவாகும் கூட்டு வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு பண்பாடு அமையும் .

அகஉணர்வு என்பதும் , புறச்செயல்கள் அல்லது சம்பிரதாயங்கள் என்பவையும் பண்பாட்டின் இரு கூறுகள் .

அகஉணர்வின் வெளிப்பாடே புறச்செயல்கள் .

இவை இரண்டும் சேர்ந்து அமைவதே பண்பாட்டின் கூட்டு வடிவங்கள் .

விருந்து ஓம்புதல் எனும் சிந்தனை அகஉணர்வு வெளிப்படுத்தும் பண்பாடு .

விருந்து ஓம்பும்பொழுது மேற்கொள்ளும் உபசரித்தல் , பணிவிடை செய்தல் போன்றவை புறப்பண்பாடு .

இத்தகைய கூட்டு வடிவங்களால் அமையும் பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள் .

1. புறச்செய்கைகள் , பழக்கவழக்கங்கள் வெளிப்படுத்தும் பண்பாடு ( Material Culture ) புறப்பண்பாடு .

2. அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு ( Non Material Culture ) அகப்பண்பாடு .

1.4.1 புறத்தோற்றங்களினால் வெளிப்படுத்தும் பண்பாடு

நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சில சடங்குகள் , சில அமைப்புகள் , பழக்க வழக்கங்கள் முதலியன புறத்தோற்றத்தினால் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன .

• பூவால் புலப்படும் பண்பாடு

பொதுவாகத் தமிழ் வீரர்கள் வாழ்வில் பூ முக்கிய பங்கு வகிக்கிறது .

பண்டைத் தமிழர் போர் செய்தலையும் ஒரு நெறியாக , ஒழுக்கமாகக் கருதினர் .

எனவே , போரின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்த , ஒவ்வொரு வகையான பூக்களைப் போர்வீரர்கள் அணிந்து சென்றனர் .

அவை , போர்வீரர்கள் , எத்தகையப் போரை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் அடையாளங்களாக அமைந்திருந்தன .

உழிஞைப் போர் , தும்பைப் போர் , வாகை என அவற்றிற்குப் பெயர் சூட்டியிருந்தனர் .

( உழிஞை , தும்பை , வாகை என்பன பூக்களின் பெயர்கள் )

• உழிஞைப்போர்

ஒரு மன்னன் இன்னொரு மன்னனின் கோட்டையைச் சுற்றி முற்றுகை இடுவது உழிஞைப்போர் என்று அழைக்கப்பட்டது .

அப்பொழுது முற்றுகையிடும் நாட்டைச் சார்ந்த படைவீரர்கள் உழிஞைப் பூவை அணிந்திருப்பார்கள் .

• தும்பைப்போர்

இருபடைகளும் ஒன்றிற்கு ஒன்று மோதிப் போரிடுவதைத் தும்பைப்போர் என்று அழைப்பர் .

போரிடும்போது இரு தரப்பினரும் தும்பைப் பூவை அணிந்திருப்பர் .

• வாகை

தமிழில் வாகை என்றால் வெற்றி என்று பொருள் .

வெற்றி பெற்ற வீரர்கள் , தாம் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வாகைப் பூவைச் சூடிச் செல்வர் .

நாட்டை ஆளுகை செய்த பாண்டியர் , சேரர் , சோழர் ஆகிய மன்னர்களும் , தம் நாட்டிற்கு முறையே வேப்பம் பூ , பனம்பூ , ஆத்திப்பூ ஆகியவற்றையே இலச்சனைகளாகக் ( ensign ) கொண்டிருந்தனர் .

இல்வாழ்க்கையிலும் பூ சிறப்பிடம் பெற்றிருந்தது .

கன்னியரும் , மணமான பெண்களுமே தம் தலையில் பூச்சூடுவர் .

கணவனை இழந்த கைம்பெண் ( Widow ) தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை .

இவையெல்லாம் , புறச்செய்கைகளில் காணும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .

இதைப்போல , மனிதர்களால் உருவாக்கப்படும் , கட்டடங்கள் , ஒப்பனைகள் , அணிகலன்கள் , ஓவியங்கள் , சிற்பங்கள் ஆகியவற்றில் காணும் சிறப்புகள் புறத்தோற்றத்தில் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் . 1.4.2 அக உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு

மேலை நாடுகளில் தாம் அணிந்திருக்கும் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவார்கள் .

கீழ்த்திசை நாடுகளில் , இரண்டு கைகளையும் கட்டி , குனிந்து நிற்பார்கள் .

இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம் , அக உணர்வை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள் .

• தமிழர் பண்பாடு

தமிழர்கள் , வயதில் மூப்பு உடையவர்களையும் சிறப்பு உடையவர்களையும் நேரில் பார்த்தால் , எழுந்து நிற்பார்கள் .

இது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று .

அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள் .

இந்நிகழ்ச்சி , புறத்தோற்றம் போல் காணப்பட்டாலும் , அவர்களின் அக உணர்வுகளையே அவர்களது புறச் செயல் வெளிப்படுத்துகின்றது .

• அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு

ஆங்கிலத்திலுள்ள ‘ CULTURE ’ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் என்று ஒரு பொருளும் உண்டு .

மனம் பக்குவம் பெற்ற அல்லது மனம் பண்பட்ட ஒருவரை Cultured man என்று அழைக்கின்றோம் .

மனப்பக்குவம் என்பது உயர்ந்த சிந்தனைகளை உள்வாங்கி அவற்றிற்கு ஏற்றவாறு மனத்தை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகும் .

நல்ல சிந்தனைகள் நல்ல மனத்தின் வெளிப்பாடு .

நல்ல சிந்தனைகள் அல்லது உயர்ந்த சிந்தனைகள் ஓர் இனத்தின் அல்லது ஒரு நாட்டின் உயர்ந்த பண்பாட்டைக் குறிப்பிடும் .

இனத்திற்கு இனம் , நாட்டிற்கு நாடு வேறுபட்ட சிந்தனைகள் உருவாவது இயல்பு .

அது சூழலின் அடிப்படையில் அமையும் .

வேறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும் .

இத்தகைய சிந்தனைகள் ஒரு மனிதனின் அக உணர்வுகளையே வெளிப்படுத்தும் .

எனவே சிந்தனைகளின் வாயிலாகப் புலப்படும் அகஉணர்வுகள் , பண்பாட்டின் வெளிப்பாடு எனலாம் .

நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள் , குடியிருப்பு அமைத்து , முடியாட்சியைத் தோற்றுவித்துக் குடியாட்சி மலரச் செய்த காலம் வரையிலும் , குழுவாக , இனமாக இன்னும் பலபலப் பிரிவாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் பல. இத்தகைய சூழலில் , இந்த உலகிலுள்ள மனிதர் அனைவரும் ஓர் இனம் , ஒருவருக்கு ஒருவர் உறவு உடையவர்கள் .

எல்லா ஊரும் தம் சொந்த ஊரே என்பதனை " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பல எல்லைகளைக் கடந்த உயர்ந்த சிந்தனையாகத் தமிழர்கள் வெளியிட்டுள்ளனர் .

அது அந்தச் சிந்தனையைக் கூறிய காலத்திலும் , இன்றைய சூழலிலும் மிகச் சிறந்த சிந்தனையாகக் கருதப்படுகிறது .

இது தமிழர்களின் அகஉணர்வின் - பண்பாட்டின் வெளிப்பாடு .

• மனத்தூய்மை

‘ அறம் ’ என்றால் என்ன என்பதற்குப் பலரால் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .

ஆனால் திருவள்ளுவர் , அறன் என்பதற்கு

மனத்துக்கண் மாசிலன் ஆதல் , அனைத்துஅறன்

ஆகுல நீர பிற ( குறள் : 34 )

( கண் = இடம் , மாசு = குற்றம் , இலன் = இல்லாதவன் , பிற ஆகுல நீர் = பிற ஆரவாரத் தன்மையன )

என்று விளக்கம் கொடுக்கிறார் .

மனத்தில் எந்த விதக் குற்றமும் இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம் என்று வள்ளுவர் கூறுகிறார் .

மனத்தூய்மை என்பது சமயத்தவரும் , சமுதாயத்தவரும் , ஒத்துக் கொள்ளுகின்ற ஓர் அக உணர்வு .

இந்த அக உணர்வு வள்ளுவரால் வெளிப்படுத்தப்படும் தமிழர்களின் பண்பாட்டுக்கூறு .

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. பண்பாடு என்றால் என்ன ?

விடை

2. பண்பாட்டு வாயில்கள் எவை ?

விடை

3. கூட்டு வடிவங்களினால் ஏற்படும் பண்பாடு எத்தனை வகைப்படும் ?

எவை ?

விடை

4. குறியீடு எவ்வாறு பண்பாட்டுக் கூறாகக் கருதப்படுகிறது ?

ஓர் எடுத்துக்காட்டு தருக .

விடை

5. தமிழர்கள் வயதில் மூப்பு உடையவர்களையும் சிறப்புக்கு உரியவர்களையும் பார்த்த உடன் எழுந்து நிற்பார்கள் .

இது எத்தகைய பண்பாட்டு உணர்வை வெளிப்படுத்துகிறது ?

பண்பாட்டின் எல்லை

பண்பாட்டுக்கு ஒரு வரையறை அல்லது எல்லை கூற இயலாது .

ஒரு நாட்டிற்கு என ஒரு பண்பாடு அமைவது உண்டு . ஒரு குழுவுக்கு என ஒரு பண்பாடு அமைவதும் உண்டு .