விடை
5. விடுகதை என்றால் என்ன ?
இலக்கணமும் பண்பாடும்
தமிழ் இலக்கணத்தில் இயல்பு வழக்கு , தகுதி வழக்கு என இரண்டு பிரிவுகள் உண்டு .
ஒரு பொருளை அறிவதற்கு அமைந்துள்ள சொல்லால் சொல்லுவது தகுதி அல்ல என்று கருதி வேறொரு சொல்லால் சொல்வது தான் தகுதி என்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கு .
தகுதி வழக்கில் , இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்று மூன்று கூறுகள் உண்டு .
2.3.1 பகுத்தறிவுக்கு இசைந்த திணை பால் , பிரிவுகள்
பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது .
அதன் தனிச் சிறப்புகளாகக் கீழ்க்கண்டவற்றை அறிஞர் காட்டுகின்றனர் .
பகுத்தறிவுக்கு இசைந்த திணை , பால் முதலிய பிரிவுகள் தமிழ் இலக்கண மரபின் சிறப்பு எனலாம் .
எடுத்துக்காட்டாக ,
பெண் வந்தாள்
ஆண் வந்தான்
ஆணும் பெண்ணும் வந்தனர்
பசு வந்தது
பசுக்கள் வந்தன
என்று தமிழில் திணை , பால் முதலிய பிரிவுகள் பகுத்தறிவுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன .
ஆனால் சில மொழிகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை .
குறிப்பாகச் செர்மானிய மொழியில் கைகள் பெண்பாலாகவும் , கால்கள் ஆண்பாலாகவும் , கால்விரல்கள் பெண்பாலாகவும் கொள்ளப் பெறுகின்றன .
மனித உயிராகப் பிறந்து விட்டாலேயே அதனை உயர்திணையாக இலக்கணம் கருதவில்லை .
குழந்தை பேசிற்று , குழந்தை தூங்கிற்று என்றே கூறுவர் .
நன்மை , தீமைகளைப் பகுத்துணரும் அறிவுநிலை அடைந்த பிறகே உயர்திணை என்ற நிலையை ஒரு பிறப்பு அடையும் .
அதேபோலப் பண்பால் உயர்ந்த ஒருவன் இறந்து கிடக்கும் போது அவனைப் பிணம் கிடக்கின்றது என்று கூறாமல் உயிர் இழந்து ஒரு மகன் கிடந்தான் என்று உயர்திணையாகவே மொழிவர் .
பண்புகளுக்குத் தகுந்தாற்போல உயர்வு தாழ்வு கற்பித்து வழங்கும் நெறியைத் தமிழ் இலக்கணம் பெற்றுள்ளது .
' கள் ' என்ற விகுதி அஃறிணைக்கு உரியது என்றாலும் மரியாதையாக ஒருவரைக் குறிக்க ' ஐயா அவர்கள் வந்தார்கள் ' என்று குறிக்கும் பண்பாடு உள்ளது .
அக்கா வந்தாள் என்று சொல்ல வேண்டுவதே இலக்கணமாக இருக்க , அன்பு காரணமாக ' அக்கா வந்தது ' என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது .
இங்கு அஃறிணைப்படக் கூறினாலும் இஃது உயர்ந்த தன்மையையே குறிக்கும் .
2.3.2 இடக்கரடக்கல்
சில தகாத சொற்களைச் சில இடங்களில் , குறிப்பாக சிறப்புடையோர் மத்தியில் சொல்லக்கூடாது .
எனவே அவற்றிற்குப் பதிலாகப் பிற சொல்லைச் சொல்வது இடக்கரடக்கல் எனப்படும் .
ஓர் இடத்தில் , சொல்லத்தகாத சொல்லை அடக்கி , இன்னொரு சொல்லைச் சொல்வதால் அதை ' இடக்கரடக்கல் ' என்று குறிப்பிட்டனர் .
( எடுத்துக்காட்டு ) ஒன்றுக்குப் போனான்
சிறுநீர் கழிப்பதற்குச் சென்ற ஒருவனை ' ஒன்றுக்குப் போனான் ' என்று சொல்வது இடக்கரடக்கல் எனப்படும் .
நாகரிகம் கருதி , சொல்லத்தகாத சொற்களைச் சொல்லாமல் , இன்னொரு சொல்லைச் சொல்ல நினைப்பதுவும் , சொல்வதுவும் ஒருவரது பண்பாடு .
இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது .
2.3.3 மங்கலம்
நன்மை தரும் செயல்களை மகிழ்ச்சி தரும் செய்திகளைக் குறிப்பிடுவது மங்கலம் எனப்படும் .
மங்கலம் இல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால் , பண்பாடு கருதி , மங்கலமாகச் சொல்லுதல் மங்கலம் எனப்படும் .
ஒருவன் இறந்துவிட்டால் , மங்கலமாகத் ' துஞ்சினான் ' ( தூங்கினான் ) என்று குறிப்பிடுவர் .
கணவன் இறந்து தாலி இழந்த பெண்ணைச் சுட்டி , அவளுக்குத் ' தாலி பெருகிற்று ' என்று கூறுவர் .
பசியோடு ஒருவன் இல்லம்தேடி வந்து , பிச்சை கேட்கும்போது உணவு இல்லாவிட்டால் , ' இல்லை ' என்று சொல்லாமல் ' உணவு மிஞ்சி விட்டது ' என்று சொல்வார்கள் .
எதையும் மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை தமிழர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கி வந்திருக்கிறது .
அது அவர்களது உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது .
2.3.4 குழூஉக்குறி
ஒவ்வொரு கூட்டத்தாரும் அல்லது குழுவினரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக , ஒரு பொருள் தரும் சொல்லை விட்டுவிட்டு , அதனை வேறொரு சொல்லால் குறிப்பிடுவது குழூஉக்குறி என்பதாகும் .
நன்கு மது அருந்திக் கொண்டு தள்ளாடிக் கொண்டு செல்லுபவனைப் பார்த்து , ' குதிரையில் போகிறார் ' என்று சொல்வர் .
இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே புரியும் .
சில சொற்களைச் சில இடங்களில் சொல்ல இயலாது .
அதைச் சொல்லவேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால் , சிறப்பாக இருக்கும் என்று கருதிக் கூறுவர் . இதற்கும் ஒரு வகையான மனப்பக்குவம் தேவை .
அந்த மனப்பக்குவத்தை வழங்குவது பண்பாடு .
தமிழர்களிடம் இத்தகைய பண்பாட்டுக் கூற்றை அவர்கள் வழங்கும் குழூஉக்குறியின் மூலம் அறிந்து கொள்ளலாம் .
தொகுப்புரை
மொழி கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணை செய்யும் கருவி .
அதில் பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு என இரு கூறுகள் உண்டு .
இலக்கியச் சிறப்புடைய மொழிகள் செவ்வியல் மொழி என அழைக்கப்பட்டன .
உலகிலுள்ள செம்மொழிகளுள் தமிழும் ஒன்று .
தமிழ் மொழி திராவிட குடும்பத்தில் மூத்த மொழி .
இதில் அமைந்த சொற்களும் , சொல்லாக்கமும் சிறப்பு வாய்ந்தவை .
தமிழ் மொழியில் வழங்கப்படும் பழமொழி , விடுகதை , இலக்கண வழக்கு ஆகியவை தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்துள்ளன .
எனவே , தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி என்பதோடு , அதன் இலக்கண வழக்குகளும் , சொற்களும் , பழமொழி போன்றவைகளும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. இலக்கண வழக்கு எத்தனை வகைபடும் ?
அவை எவை ?
விடை
2.இடக்கரடக்கல் எவ்வாறு தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ?
விடை
3. இறந்து விட்ட ஒருவனைத் ‘ துஞ்சினான் ’ என்று குறிப்பிடுவது எதைக் காட்டுகிறது ?
விடை
4. குழூஉக்குறி என்றால் என்ன ?
அது எவ்வாறு பண்பாட்டுக்கூறாகக் கருதப்படுகிறது ?
தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்
பாட முன்னுரை
உலகம் என்ற சொல்லை ஒரு மங்கலச் சொல்லாகக் கருதியவர் தமிழர் .
வான ஊர்தியில் ஒரு பறவையைப் போல் பறந்து இந்த உலகத்தைப் பார்க்கும்போது எவ்வளவு இனிய காட்சி நல்குகின்றது !
வையத்தில் மூன்று பகுதி கடல் ; ஒருபகுதி நிலம் .
கண்டங்களாகக் கடலால் துண்டாடப்பட்ட நாடுகளின் தொகை .
இதோ பூகோள உருண்டையைச் சுற்றினால் நம் கண்முன் தோன்றும் உலகப்படம் !
கடலால் வளைக்கப்பட்டது இந்த உலகம் .
" பெருங்கடல் வளைஇய உலகம் " என்று கூறுகிறது குறுந்தொகை என்ற இலக்கியம் .
கடலை ஆடையாக உடுத்த நில மங்கை என உருவகம் செய்கிறார் மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை .
உலகிலேயே நாட்டை ஒரு பெண்ணாக முதன் முதல் உருவகித்த பெருமை தமிழ்ப் புலவனுக்கே உரியது .
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இந்தியத் திருநாட்டை ஒரு பெண்ணாக இளங்கோவடிகள் ஓவியப்படுத்திக் காட்டுகின்றார் .
" அலைகளைக் கொண்ட நீரை ஆடையாக உடுத்தவள் .
மலைகளை மார்பகங்களாகக் கொண்டவள் .
ஆறுகளை முத்தாரமாக அணிந்தவள் .
மழை முகில்களைக் கூந்தலாகப் பெற்றவள் " என்பது அவர் காட்டும் சொல்லோவியம் .
உலகப் படத்தில் இந்தியாவைக் காணுங்கள் !
இமயம் தலையாக அமைந்துள்ளது .
குமரி திருவடிகளாக உள்ளது .
மகவை அணைக்க எழுந்த இரு கைகளாக மேற்கிலும் கிழக்கிலும் அகன்ற நிலப்பகுதிகள் அமையக் காணலாம் .
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
( பாரதி - பாப்பாப்பாட்டு : 13 )
வாழும் குமரி என்றும் பிறிதொரு இடத்தில் நித்தம் தவம்செய் குமரி என்றும் பாரதியார் கூறியது குறித்துச் சுவாமி விபுலானந்தர் , " மேலும் கடல் நிலத்தைக் கொண்டு விடாமல் இருக்க வேண்டும் " என்று கருதியதைக் காட்டும் என்பர் .
இந்தியாவின் இன்றைய தென்னெல்லைதான் கன்னியாகுமரி !
முன்னொரு காலத்தில் அதற்கப்பால் பல நூறு கற்கள் நிலமாக இருந்தமையினை வரலாறு காட்டுகின்றது .
அவ்வாறு இருந்த காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது .
சங்ககாலத் தமிழ் மக்கள் , தாம் வாழ்ந்த நிலத்தை அதன் பூகோள அமைப்பிற்கும் ( Geographical Structure ) தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப , ஐந்து வகையாகப் பிரித்தனர் . அவர்கள் வாழ்க்கை முறையும் நிலப்பாகுபாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது .
அவர்களால் படைக்கப்பட்ட , கலைகளும் , பிறபண்பாட்டுக் கூறுகளும் நிலப்பிரிவினைப் பின்புலமாகக் கொண்டே அமைந்துள்ளன .
தமிழ்நாடு
“ வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் " என்று பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது .
அன்றிருந்த நிலை மாறிவிட்டது .
இன்று வடவேங்கடம் என்று கூறப்படும் திருப்பதி திருமலை ஆந்திர நாட்டிற்கு உரியதாகிவிட்டது .
நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு
( பாரதி - செந்தமிழ்நாடு : 5 )
என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார் .
அந்த நிலை மாறி இன்று திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதி ' தமிழ்நாடு ' என வழங்குகிறது .
சென்னை மாநிலம் என்றும் மெட்ராஸ் ஸ்டேட் ( Madras State ) என்றும் வழங்கிய இப்பகுதி அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் " தமிழ்நாடு " எனப் பெயர் மாற்றம் பெற்றது .
பாரதியார்
3.1.1 நிலவரையறை
தமிழகம் இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது .
வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாக நீண்டு கிடக்கின்றது .
மேற்கே கேரளமும் , வடக்கே ஆந்திரமும் , வடமேற்கில் கர்நாடகமும் , தெற்கில் இந்துமாக்கடலும் அமைந்துள்ளன .
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 1,30,057 சதுர கிலோமீட்டர் .
இதன் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ ஆறுகோடிப் பேர் .
வங்கக் கடற்கரையை ஒட்டிய சமவெளிப்பகுதி , மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு இணைந்து விளங்கும் மலை நிலப்பகுதி , இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என மூன்று பெரும்பகுதிகளாகத் தமிழகம் விளங்குகின்றது .
மலைப்பகுதிகள் , காட்டுப்பகுதிகள் , கடற்கரைப்பகுதிகள் , வயல்வெளிப் பகுதிகள் என நால்வகை நிலங்களும் தமிழகத்தில் உள்ளன .
தேக்கு மரங்களும் சந்தன மரங்களும் , வேங்கை , கோங்கு , ஆச்சா மரங்களும் வானுயர வளர்ந்து நிற்கும் தமிழகக் காட்டுப் பகுதிகளைக் காணுங்கள் !
இத்தகைய காட்டைத்தான்
" மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம் " ( அக : 92-8 )
என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது .
மந்திக் குரங்கிற்கும் தெரியாத மரங்கள் நெருங்கிய மலைக்காடு என்பது இதன் பொருள் .
இதோ !
குளிர் தூங்கும் குற்றால அழகைக் காணுங்கள் !
வானரங்கள் கனிகொடுத்து மந்தியுடன் கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
( குற்றாலக்குறவஞ்சி )
அருவிகள் வைரமாலை போலத் தொங்கும் அழகு காண்பதற்குரியது .
ஆண்டில் பாதிநாள் சுறுசுறுப்பாய் வேலை நடக்கும் இந்த வயல்வெளிகளைப் பாருங்கள் !
இந்த வயல் வெளிகளில் நாற்று நடுதல் , களையெடுத்தல் , அறுவடை போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்மூச்சாய்த் திகழும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிப்பதைக் கேளுங்கள் !
களை எடுக்கும் பெரியகுளம்
கணக்கெழுதும் ஆலமரம்
கொத்தடிக்கும் கொட்டாரம்
கூறுவைக்கும் களத்துமேடு
கண்ணாடி வளையல்போட்டு
களையெடுக்க வந்த புள்ளே
கண்ணாடி மின்னலிலே
களை எடுப்புப் பிந்துதடி
வெள்ளிப் புடி வளையல் - நல்ல
விடலைப் பிள்ளை கைவளையல்
சொல்லி அடிச்சவளை - நல்லா
சுழட்டுதில்ல நெல்களையை
கடற்கரைகளில் விடியற்காலையில் கட்டு மரங்களில் புறப்பட்டுக் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டு அந்தியில் திரும்பும் மீனவர்களின் பாடல்களைக் கேளுங்கள் .
ஏலங்கடி ஏலோ ஏலங்கடி ஏலோ கட்டுமரம் ஏறிப்போனா ஐலேசா
காத்தம்மா துணையிருப்பா ஐலேசா
காத்தடிச்சாக் கடல் கலங்கும்
கல்லு போட்டாத் தலை ஒடையும்
கரையோரம் புன்னமரம் ஐலேசா
கண்ணாட்டி நிக்குநெழல் ஐலேசா
காத்திருக்க நா போறேன்
கவலையெல்லாம் மாறிப்போகும் .
3.1.2 நிலப் பாகுபாடு
கிரீஸ் நாடு மிக அழகான ஒரு நாடு என்று குறிப்பிடுவார்கள் .
அதற்குக் காரணம் அந்த நாட்டின் நில அமைப்பு என்பார்கள் .
அதன் கடற்கரை பல வளைவுகளை ( Gulf ) உடையது .
அதன் நதிகளும் தாழ்வான குன்றுகளும் , ஓர் அழகான பரப்பளவு உடையதாக அமைந்திருக்கும் .
ஒரு பகுதியோடு இன்னொரு பகுதி மிக நெருக்கமாக இணைந்திருக்கும் .
அளவிலே சிறியதாக இருந்தாலும் , சுய உணர்வும் , சுயசிந்தனையும் , தனித்தன்மையும் , சுதந்திரமும் அங்குச் சிறப்பாக உள்ளன என்று கூறுவார்கள் .
அதைப்போல , தமிழ்நாட்டின் நிலப்பரப்பும் , பிளவுபட்ட சிறிய மலைகளும் , காடுகளும் , நதிகளும் , கடலும் இயற்கையிலேயே மிக அழகாக அமைந்திருக்கின்றன .
கிரீஸைப்போல , சிற்றரசர்களும் , குறுநில மன்னர்களும் உருவாவதற்கும் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு வாய்ப்பு அளித்தது .
இந்த நில அமைப்பு பல பிரிவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது .
எனவே , சங்ககாலத் தமிழர் , மலைப்பகுதியையும் , காடுகள் அடர்ந்த பகுதியையும் , வயல்கள் நிரம்பிய பகுதியையும் , கடலோரப் பகுதியையும் , வறட்சியான வரண்ட பகுதிகளையும் , தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர் .
மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர் .
மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும் , காட்டைச் சார்ந்த இடமும் .
இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர் .
முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர் .
பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும் , மேற்கும் , தெற்கும் கடல் எல்லையாக இருந்தது .
இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர் .
பருவகாலத்தில் , பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் , வறட்சி ஏற்பட்டு , நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள் .
3.1.3 நிலம் சார்ந்த வாழ்வுமுறை
ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் , நம்பிக்கைகளும் , குணநலன்களும் , பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை , தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் ( Grose Hodge ) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார் .
இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும் .
ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை , செய்த தொழில் , வழிபாடு ஆகியவை ஹோட்ஜின் கருத்தை உறுதிப்படுத்தும் .
• குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் குறவர் , குறத்தியர் என்று அழைத்தனர் .
இவர்கள் தினை பயிரிடுதல் , தேன் எடுத்தல் , வேட்டையாடல் போன்ற தொழிலைச் செய்தனர் .
இவர்களது கடவுள் முருகன் .
• முல்லைநிலம்
முல்லைநிலம்
முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆயர் , ஆய்ச்சியர் எனக் குறிக்கப்பட்டனர் .
இவர்கள் ஆடு , மாடு மேய்த்தலைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர் .
முல்லை நிலக் கடவுள் திருமால் .
திருமாலைக் கண்ணன் என்றும் அழைப்பார்கள் .
கண்ணனாகிய திருமால் ஆயர்குலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறான் .
• மருதநிலம்
மருதநிலம்
மருதநில மக்கள் உழவர் , உழத்தியர் என்போர் ஆவர் .
இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் , நெல் , கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள் .
வாணிகத்தையும் செய்தனர் .
மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து , பண்டமாற்ற வாணிபம் செய்தனர் .
இந்திரன் , மருத நிலக் கடவுள் .
• நெய்தல் நிலம் நெய்தல் நிலம்