8

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்

( நன்னூல் 89 )

( பொருள் : அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும் .

மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும் .

மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்)

ஆய்தம்

ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகளில் ஒன்று .

இதன் வரிவடிவம் முக்கோணத்தில் அமைந்த மூன்று புள்ளிகள் போன்று இருக்கும் .

ஆய்த எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் .

ஆய்த எழுத்து , தனியாக வராது .

சொல்லுக்கு நடுவில் மட்டும் வரும் .

ஆய்த எழுத்துக்கு முன்பு குறில் எழுத்தும் , பின்னால் உகரத்துடன் சேர்ந்த வல்லின எழுத்தும் ( கு , சு , டு , து , பு , று ) வரும் .

அஃது

எஃகு

இது தனிமொழி ஆய்த எழுத்து ஆகும் .

இரண்டு சொற்கள் சேரும்போதும் ஆய்த எழுத்து உருவாகும் .

இதைப் பின்னர் காணலாம் .

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே

( நன்னூல் 90 )

பொருள் :

ஆய்த எழுத்து குறில் எழுத்திற்குப் பின்பும் , குற்றியலுகர எழுத்திற்கு முன்பும் வரும் .

உயிரளபெடை

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன .

செய்யுள் , ஓசையை அடிப்படையாகக் கொண்டது .

குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன .

செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும் .

இவ்வாறு நீண்டு ஒலிப்பதை , அளபெடுத்தல் என்று கூறுவர் .

அளபெடை இரண்டு வகைப்படும் .

அவை ,

1. உயிரளபெடை

2. ஒற்றளபெடை

என்பவை ஆகும் .

நெடில் எழுத்துகளே அளபெடுக்கும் .

நெடில் எழுத்து அளபெடுக்கும் போது , அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும் .

செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும் .

நெடில் எழுத்து இரண்டு மாத்திரை .

அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால் , குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும் .

இன எழுத்துகள் ஆஅ , ஈஇ , ஊஉ , ஏஎ , ஐஇ , ஓஒ , ஒளஉ என்பனவாகும் , ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால் , முறையே இகரம் , உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும் .

மாஅயோள்

பேஎய்ப் பக்கம்

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்

அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே

( நன்னூல் 91 )

( பொருள் : செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும் .

அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்)

பொதுவாக , செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது . எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு .

உயிரளபெடை நான்கு வகைப்படும் .

1. இயற்கை அளபெடை

2. சொல்லிசை அளபெடை

3. இன்னிசை அளபெடை

4. செய்யுளிசை அளபெடை .

4.3.1 இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர் .

மரூஉ , ஒரூஉ , ஆடூஉ , மகடூஉ , குரீஇ

குழூஉக்குறி , குளாஅம்பல்

பேரூர்கிழாஅன்

இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன

4.3.2 சொல்லிசை அளபெடை

ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும் .

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும் .

அதையே

நசைஇ என்று அளபெடை ஆக்கினால் , விரும்பி என்றுபொருள் தரும் .

இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்

தொகை தொகைஇ ( தொகுத்து )

வளை வளைஇ ( வளைத்து )

4.3.3 இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி , அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும் .

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து , தூ என நெடில் எழுத்தாகி , கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும் .

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே .

4.3.4 செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால் , அது ஒரே நிரை அசை ஆகிவிடும் .

இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை , நேர் என்ற இரு அசைகள் தேவை .

தொழாஅள் என்று அளபெடுத்தபின் , தொழா என்பது நிரை அசையாகவும் , அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன .

செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் .

யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும் .

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்

நற்றாள் தொழாஅர் எனின்

என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும் .

செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் .

செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்

அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது , நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது .

இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும் .

அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும் .

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க ஒற்றளபெடை

உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும் .

மெய் எழுத்து அளபெடுக்கும்போது , அதற்கு அடையாளமாக , அதே மெய் எழுத்து எழுதப்படும் .

ங் , ஞ். ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய பத்து மெய்எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும் .

ஒரு மெய்எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது .

மெய்எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய்எழுத்துகள் வருவதால் , இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் .

வணங்ங்கினான் .

மன்ன்னன்

ங , ஞ. ண , ந , ம , ன , வ , ய , ல , ள , ஆய்தம்

அளபு ஆம் , குறில் இணை , குறில் கீழ் , இடை , கடை

மிகலே அவற்றின் குறி ஆம் வேறே

( நன்னூல் 92 )

( பொருள் : செய்யுளில் ஓசை குறையும்போது , குறில் எழுத்தை அடுத்தும் , தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும் , சொல்லின் இடையிலும் இறுதியிலும் ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் நீண்டு ஒலிக்கும் .

அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்எழுத்து எழுதப்படும்)

பெயர் : ஒற்றளபெடை

எழுத்துகள் : ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ

வரும் இடம் : ஒரு குறில் எழுத்து இரு குறில் எழுத்து } இவற்றுக்குப் பிறகு

சொல்லின்

முதல்

இடை

இறுதி } ஆகிய இடங்களில் அளபெடுக்கும்

அடையாளம் : அதே எழுத்து மீண்டும் எழுதப்படும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. உயிர்மெய் எழுத்தில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன ?

விடை

2. அளபெடை என்றால் என்ன ?

விடை

3. உயிரளபெடை எத்தனை மாத்திரை பெறும் ?

விடை

4. உயிரளபெடையின் வகைகள் யாவை ?

விடை

5. ஒற்றளபெடையை விளக்குக .

குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது .

இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து ( குறுகி ) ஒலிக்கிற இடங்களும் உண்டு .

அப்போது அது குற்றியலுகரம் ( குறுகி ஒலிக்கின்ற உகரம் ) என்று அழைக்கப்படும் .

அதற்குச் சில வரையறைகள் உண்டு .

1. வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு .

அதாவது , கு , சு , டு , து , பு , று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும் .

2. இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும் .

எடுத்துக்காட்டு : பாக்கு , பேசு , நாடு , காது , அம்பு , ஆறு .

3. தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது .

எடுத்துக்காட்டு : அது , பசு , வடு , அறு முதலியவை .

குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம் .

அவை ,

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

4. வன்தொடர்க் குற்றியலுகரம்

5. மென்தொடர்க் குற்றியலுகரம் 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும் .

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

எ.டு : பாகு

மூசு

பாடு

காது

ஆறு

• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

எ , டு : அஃது ( அது என்பது பொருள் )

கஃசு ( பழங்காலத்து நாணயம் ஒன்று )

• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

நெடில் எழுத்துகள் , நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும் .

எனவே , இது , குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும் .

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும் .

எ.டு : வரகு

தவிசு

முரடு

வயது

கிணறு

• வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

எ.டு : பாக்கு

கச்சு

பட்டு

பத்து

மூப்பு

காற்று

• மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

எ.டு : சங்கு

பஞ்சு

நண்டு

பந்து

பாம்பு

கன்று

• இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .

எ.டு : மூழ்கு

செய்து

மார்பு

பல்கு

4.5.1 முற்றியலுகரம்

மேலே காட்டிய கு , சு , டு , து , பு , று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை .

நகு , பசு , தடு , எது , மறு

கு , சு , டு , து , பு , று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும் , முதல் எழுத்து , குறில் எழுத்தாக இருப்பதால் , இவை குற்றியலுகரம் அல்ல .

மெல்லின , இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை . அணு , தனு , உறுமு , குழுமு , தும்மு , பளு ,