உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்
பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்
( நன்னூல் 89 )
( பொருள் : அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும் .
மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும் .
மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்)
ஆய்தம்
ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகளில் ஒன்று .
இதன் வரிவடிவம் முக்கோணத்தில் அமைந்த மூன்று புள்ளிகள் போன்று இருக்கும் .
ஃ
ஆய்த எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் .
ஆய்த எழுத்து , தனியாக வராது .
சொல்லுக்கு நடுவில் மட்டும் வரும் .
ஆய்த எழுத்துக்கு முன்பு குறில் எழுத்தும் , பின்னால் உகரத்துடன் சேர்ந்த வல்லின எழுத்தும் ( கு , சு , டு , து , பு , று ) வரும் .
அஃது
எஃகு
இது தனிமொழி ஆய்த எழுத்து ஆகும் .
இரண்டு சொற்கள் சேரும்போதும் ஆய்த எழுத்து உருவாகும் .
இதைப் பின்னர் காணலாம் .
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே
( நன்னூல் 90 )
பொருள் :
ஆய்த எழுத்து குறில் எழுத்திற்குப் பின்பும் , குற்றியலுகர எழுத்திற்கு முன்பும் வரும் .
உயிரளபெடை
பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன .
செய்யுள் , ஓசையை அடிப்படையாகக் கொண்டது .
குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன .
செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும் .
இவ்வாறு நீண்டு ஒலிப்பதை , அளபெடுத்தல் என்று கூறுவர் .
அளபெடை இரண்டு வகைப்படும் .
அவை ,
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை
என்பவை ஆகும் .
நெடில் எழுத்துகளே அளபெடுக்கும் .
நெடில் எழுத்து அளபெடுக்கும் போது , அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும் .
செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும் .
நெடில் எழுத்து இரண்டு மாத்திரை .
அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால் , குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும் .
இன எழுத்துகள் ஆஅ , ஈஇ , ஊஉ , ஏஎ , ஐஇ , ஓஒ , ஒளஉ என்பனவாகும் , ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால் , முறையே இகரம் , உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும் .
மாஅயோள்
பேஎய்ப் பக்கம்
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே
( நன்னூல் 91 )
( பொருள் : செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும் .
அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்)
பொதுவாக , செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது . எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு .
உயிரளபெடை நான்கு வகைப்படும் .
1. இயற்கை அளபெடை
2. சொல்லிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
4. செய்யுளிசை அளபெடை .
4.3.1 இயற்கை அளபெடை
இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர் .
மரூஉ , ஒரூஉ , ஆடூஉ , மகடூஉ , குரீஇ
குழூஉக்குறி , குளாஅம்பல்
பேரூர்கிழாஅன்
இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன
4.3.2 சொல்லிசை அளபெடை
ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும் .
நசை என்பது விருப்பம் என்று பொருள்படும் .
அதையே
நசைஇ என்று அளபெடை ஆக்கினால் , விரும்பி என்றுபொருள் தரும் .
இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்
தொகை தொகைஇ ( தொகுத்து )
வளை வளைஇ ( வளைத்து )
4.3.3 இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி , அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும் .
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து , தூ என நெடில் எழுத்தாகி , கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும் .
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே .
4.3.4 செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால் , அது ஒரே நிரை அசை ஆகிவிடும் .
இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை , நேர் என்ற இரு அசைகள் தேவை .
தொழாஅள் என்று அளபெடுத்தபின் , தொழா என்பது நிரை அசையாகவும் , அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன .
செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் .
யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும் .
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
நற்றாள் தொழாஅர் எனின்
என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும் .
செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் .
செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்
அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது , நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது .
இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும் .
அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும் .
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க ஒற்றளபெடை
உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும் .
மெய் எழுத்து அளபெடுக்கும்போது , அதற்கு அடையாளமாக , அதே மெய் எழுத்து எழுதப்படும் .
ங் , ஞ். ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய பத்து மெய்எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும் .
ஒரு மெய்எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது .
மெய்எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய்எழுத்துகள் வருவதால் , இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் .
வணங்ங்கினான் .
மன்ன்னன்
ங , ஞ. ண , ந , ம , ன , வ , ய , ல , ள , ஆய்தம்
அளபு ஆம் , குறில் இணை , குறில் கீழ் , இடை , கடை
மிகலே அவற்றின் குறி ஆம் வேறே
( நன்னூல் 92 )
( பொருள் : செய்யுளில் ஓசை குறையும்போது , குறில் எழுத்தை அடுத்தும் , தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும் , சொல்லின் இடையிலும் இறுதியிலும் ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் நீண்டு ஒலிக்கும் .
அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்எழுத்து எழுதப்படும்)
பெயர் : ஒற்றளபெடை
எழுத்துகள் : ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ
வரும் இடம் : ஒரு குறில் எழுத்து இரு குறில் எழுத்து } இவற்றுக்குப் பிறகு
சொல்லின்
முதல்
இடை
இறுதி } ஆகிய இடங்களில் அளபெடுக்கும்
அடையாளம் : அதே எழுத்து மீண்டும் எழுதப்படும் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. உயிர்மெய் எழுத்தில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன ?
விடை
2. அளபெடை என்றால் என்ன ?
விடை
3. உயிரளபெடை எத்தனை மாத்திரை பெறும் ?
விடை
4. உயிரளபெடையின் வகைகள் யாவை ?
விடை
5. ஒற்றளபெடையை விளக்குக .
குற்றியலுகரம்
உகரம் ஒரு மாத்திரை உடையது .
இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து ( குறுகி ) ஒலிக்கிற இடங்களும் உண்டு .
அப்போது அது குற்றியலுகரம் ( குறுகி ஒலிக்கின்ற உகரம் ) என்று அழைக்கப்படும் .
அதற்குச் சில வரையறைகள் உண்டு .
1. வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு .
அதாவது , கு , சு , டு , து , பு , று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும் .
2. இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும் .
எடுத்துக்காட்டு : பாக்கு , பேசு , நாடு , காது , அம்பு , ஆறு .
3. தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது .
எடுத்துக்காட்டு : அது , பசு , வடு , அறு முதலியவை .
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம் .
அவை ,
1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம் 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
என்பவை ஆகும் .
• நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
எ.டு : பாகு
மூசு
பாடு
காது
ஆறு
• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
எ , டு : அஃது ( அது என்பது பொருள் )
கஃசு ( பழங்காலத்து நாணயம் ஒன்று )
• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
நெடில் எழுத்துகள் , நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும் .
எனவே , இது , குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும் .
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும் .
எ.டு : வரகு
தவிசு
முரடு
வயது
கிணறு
• வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
எ.டு : பாக்கு
கச்சு
பட்டு
பத்து
மூப்பு
காற்று
• மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
எ.டு : சங்கு
பஞ்சு
நண்டு
பந்து
பாம்பு
கன்று
• இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு , சு , டு , து , பு , று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் .
எ.டு : மூழ்கு
செய்து
மார்பு
பல்கு
4.5.1 முற்றியலுகரம்
மேலே காட்டிய கு , சு , டு , து , பு , று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை .
நகு , பசு , தடு , எது , மறு
கு , சு , டு , து , பு , று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும் , முதல் எழுத்து , குறில் எழுத்தாக இருப்பதால் , இவை குற்றியலுகரம் அல்ல .
மெல்லின , இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை . அணு , தனு , உறுமு , குழுமு , தும்மு , பளு ,