86

ஆற்று நீரைத் தம்முள் அடக்கும் குளங்களும் உள்ளன .

அரசர்களால் விரும்பப்படும் குடிமக்களும் உள்ளனர் .

வேதக் கருத்துகளை உடைய பழைய பாடல்களும் உள்ளன .

வேள்விகளுக்கு ஒப்பான கொடைகளும் உள்ளன .

( நான் - 54 ) என்று கூறும் ஆசிரியர் மனிதனுக்குச் சிறப்புத் தருவனவற்றைக் கூறுவதைப் பாருங்கள் .

2.2.1 கல்வி

விளம்பி நாகனார் கூறும் ‘ சிறப்புத் தருவன‘ வரிசையில் ஒருவருக்குத் துணையாக நிற்பது கல்வியே ஆகும் என்று காட்டுகிறார் .

நான்கு மணியான கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் சொல்வது நான்மணிக்கடிகை என்று முன்னரே பார்த்தோம் அல்லவா ?

சிறப்பானவற்றைக் குறிப்பிடும் போது செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமை உடையது வேறில்லை .

கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை .

வறுமையைப் போல் துன்பமானது வேறில்லை .

கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதைப் போல் திட்பமானது வேறில்லை .

( நான் - 32 ) என்று கூறிக் கல்வியின் உயர்வைக் காட்டுகிறார் .

கல்வி எப்படித் துணையாக நிற்கிறது ?

அது நெருப்பில் வேகாது .

தண்ணீரால் அழியாது .

திருடரால் களவாட முடியாது .

பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் தன்மை உடையது .

இவ்வளவு சிறப்புகளை உடைய கல்வி நிச்சயம் நமக்குத் துணை செய்யும் அல்லவா ?

ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்து அவர் கற்ற கல்வி அறிவு துணை நிற்கும் என்று கல்வியின் சிறப்பைச் சொல்லுகிறார் ஆசிரியர் .

தனக்கு ஒன்று உறுவுழி நிற்பது அறிவு

( நான் - 31 )

( தனக்கு = ஒருவனுக்கு ; உறுவுழி = துன்பம் ஏற்படும்போது ; நிற்பது = துணையாக இருப்பது )

இடர் வந்தபோது துணை நிற்பதால் கல்வியைப் போல் துணையானது பிறிதில்லை ; தளர்ச்சியுற்ற காலத்துக் கற்றவர் முயன்று எழுகின்றனர் ; கல்லாதவர் கால் முறிந்தவர் போல் ஆகிவிடுகின்றனர் என்ற கருத்தைச் சொல்லும் பாடலைப் பாருங்கள் .

கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முறியும்

( நான் - 75 )

கற்றவர் உலக இயற்கையை அறிவர் .

இவ்வுலகில் புகழும் , மறுமையில் வீடுபேறும் அடைவர் .

கல்வி இத்தகைய சிறப்புடையது .

இதனால் தான்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

( குறள் - 398 )

என்று வள்ளுவர் , ஒரு பிறப்பில் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஏழு பிறப்பிற்கும் உதவும் என்று பாடியுள்ளார் .

2.2.2 செல்வம்

பொருட்செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க இயலாது .

ஈட்டி எட்டிய மட்டும் தான் பாயும் , பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியையும் நாம் அறிவோம் .

செல்வத்தின் வலிமையை விளம்பி நாகனார் எப்படிக் கூறுகிறார் என்று பார்ப்போம் .

ஒளியுள்ள மணிகள் மலையில் பிறக்கும் .

இன்பம் காதலியின் சொல்லில் கிடைக்கும் .

அறநெறிகள் அருளில் கிடைக்கும் .

அறமும் , அறத்தோடு பொருந்திய இன்பமும் ஆகிய எல்லாமும் செல்வத்தினாலேயே கிடைக்கும் என்பதை நான்மணிக்கடிகை பின்வருமாறு சொல்கிறது .

கல்லில் பிறக்கும் கதிர்மணி காதலி

சொல்லில் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று

அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளில் பிறந்து விடும்

( நான் - 7 )

( கல் = மலை , கதிர் = ஒளிவீசுகின்ற , மதம் = இன்பம் ) பொருட் செல்வம் எல்லாவற்றையும் தருவதால்தான் செல்வத்தைப் போல் வலிமை உடையது வேறில்லை என்ற கருத்தை ,

திருவின் திறல்உடையது இல்லை

( நான் - 32 )

( திறல் = வலிமை ) என்ற பாடல் புலப்படுத்துவதைக் காணலாம் .

2.2.3 நட்பின் சிறப்பு

இவ்வுலகில் நட்பைப்போல் உயர்ந்தது வேறில்லை .

பாகன் தன்னை வருத்தினாலும் யானையும் யானைப்பாகனும் பிரிவதில்லை .

தாய் அடித்தாலும் குழந்தை தாயிடமே செல்லும் .

நண்பர்கள் சினந்து கூறினாலும் பிரியமாட்டார்கள் .

சேர்ந்தே இருப்பர் .

ஆனால் பகைவரோ எக்காலத்திலும் ஒன்றாகப் பொருந்துவதில்லை என்று கூறுகிறது நான்மணிக்கடிகை .

மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும் அன்னேயென்று ஓடும் குழவி - சிலைப்பினும்

நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்

உடன்உறையும் காலமும் இல்

( நான் - 25 )

( மலைப்பினும் = தண்டித்தாலும் ; அலைப்பினும் = அடித்துத் துரத்தினாலும் ; சிலைப்பினும் = சினந்து கூறினாலும் ; நட்டார் = நண்பர் ; ஒட்டார் = பகைவர் )

அன்பின் அடிப்படையில் அமையும் நட்பில் பிரிவுக்கே இடமில்லை என்கிறார் ஆசிரியர் .

2.2.4. இனிய சொற்கள்

சொற்கள் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் .

சினத்தையும் உண்டாக்கும் .

இன்சொல்லால் மகிழ்ச்சியும் வன்சொல்லால் கோபமும் உண்டாகும் அல்லவா ?

அன்பிலாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும் .

கற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா .

பண்பிலார் வாயில் பழிச் சொற்கள் தோன்றும் .

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச் சாயினும் தோன்றா கரப்புச்சொல் - தீய

பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும்

( நான் - 98 )

( வடுச்சொல் = குற்றம் நிறைந்த சொல் ; நயமில்லார் = அன்பில்லாதவர் ; சாயினும் = நிலை தாழ்ந்தாலும் ; கரப்பு = வஞ்சனை ; கீழ்கள் = கீழ்மக்கள் )

சொற்களே செயலைக் காட்டிலும் மிக்க துன்பத்தைத் தருவன .

அச்சொற்கள் மனத்துள் வடு ( தழும்பு ) வாய்க்கிடந்து என்றும் ஆறாது துன்புறுத்தும் .

சுட்ட புண் புறத்தே இருக்கும் .

எனவே ஆராய்ந்து பாராமல் படபடப்பாக விரைந்து பழிப்பன கூறுதல் வேண்டாம் என்கிறார் விளம்பி நாகனார் .

பதறிய நாக்கினால் நட்பு கெடும் என்பதை , ‘ நாவன்றோ நட்பறுக்கும் .

( நான் - 81 ) என்ற பாடலடி உணர்த்துகிறது .

இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும் .

வன்சொல்லால் கெடுநினைவு உண்டாகும் .

நயமான சொற்களால் அருள் உண்டாகும் .

ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினால் அறிவர் ( நான் - 80 ) என்ற கருத்துரைக்கும் பாடல் இனி இப்படிப் பேச வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா ?

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற

நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்

ஒப்புரவி னான்அறிப சான்றாண்மை மெய்க்கண்

மகிழான் அறிப நறா

( நான் - 80 )

( மெல்லென்ற = குளிர்ந்த ; மடுவினை = மடுவின் ஆழத்தை ; ஒப்புரவு = உதவுதல் ; மகிழ் = மகிழ்ச்சி ; நறா = கள் )

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

கள்ளி வயிற்றில் எது பிறக்கும் ?

( அ ) அகில் ( ஆ ) அரிதாரம் [ விடை ] 3. இடர் வந்தபோது துணைநிற்பது எது ?

[ விடை ]

4. கல்வியை எப்போது கற்க வேண்டும் ?

இயல்பும் சிறப்பும்

உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில

இயல்புகள் , சிறப்புகள் உண்டு .

அழுக்குச் சேர்ந்தாலும் நல்ல மணியின் பெருமை குறையாது .

கழுவி எடுத்தாலும் இரும்பின் கண் மாசு உண்டாகும் .

இதை எவ்வளவு எளிமையாக நான்மணிக்கடிகை சொல்கிறது பாருங்கள் .

மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்

பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்

( நான் - 100 )

( மாசு = அழுக்கு )

மணி , இரும்பு ஆகியவற்றின் இயல்பைக் கூறியது போல் மன்னர் , மாந்தர் ஆகியோரின் இயல்பையும் இந்நூல் சொல்கிறது .

2.3.1. அரசர் இயல்பு

முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் அரசன் இறைவன் என்று சொல்லத்தக்கவன் என்கிறார் வள்ளுவர் ( குறள் - 388 ) .

முறையாக ஆட்சி செய்பவனே சிறந்த அரசன் .

அரசன் நல்ல ஆட்சி செய்யவில்லையென்றால் நாட்டில் மழை பெய்யாது .

மழையில்லா விட்டால் மக்களுக்கு நன்மையில்லை .

மக்கள் இல்லையென்றால் அரசனும் இல்லை .

ஏனெனில் அரசன் குடிமக்களுக்காகவே வாழ்கிறான் என்ற கருத்தைச் சொல்லும் பாடலைப் பாருங்கள் .

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை ; மழையும்

தவம்இல்லார் இல்வழி இல்லை ; தவமும்

அரசன் இலாவழி இல்லை ; அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்

( நான் - 49 )

மன்னர் , தாம் ஆளும் ஆட்சியால்தான் சிறப்படைவர் என்பது நான்மணிக்கடிகை கூறும் கருத்தாகும் .

இனி , கற்றவர் இயல்பைக் காண்போமா ?

2.3.2 கற்றவர் இயல்பு

கற்றவர்க்கு எந்த ஊரும் தம்மூர் ஆகும் .

எண்ணற்ற பொன்னும் பொருளும் பெற்ற மன்னனுக்குக் கூடத் தன்னாட்டில்தான் பெருமையும் சிறப்பும் உண்டு .

கற்றவருக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு .

விளம்பி நாகனார் , கற்றவர் சிறப்பை வலியுறுத்தக் கல்லாதார்க்கு ஏற்படும் இழிநிலையைச் சுட்டிக் காட்டுகிறார் .

கல்லாத ஒருவர்க்கு அவருடைய வாய்ச்சொல்லே எமனாக அமையும் .

வாழைமரத்துக்கு அதனுடைய குலையே சாவை உண்டாக்கும் .

தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவன் ( எமன் ) ஆவான் .

இல்லத்தில் இருந்து கற்பு கெடுபவள் கொண்டவனுக்குக் கூற்றுவனே என்கிறார் .

இந்தக் கருத்தைக் கூறும் பாடலைப் பாருங்கள் .

கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொல்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறம்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள் .

( நான் - 85 )

கல்லாத மூத்தவனை இவ்வுலகம் மதியாது .

கற்றவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டும் என்ற கருத்தை

ஒரு குடியில் .

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமைபா ராட்டும் உலகு .

( நான் - 66 )

என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கும் . கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் விளம்பி நாகனார் .

கல்வியின்மை தனிஒருவரின் குற்றம் மட்டும் ஆகாது .

கல்வியறிவு இல்லாமல் குழந்தைகளை வளரவிடுதல் சமுதாயத்துக்கே தீங்காக முடியும் .

இதை ஒட்டித் , தீமையானவற்றை ஒரு பட்டியல் போட்டுத் தருகிறார் இந்நூலாசிரியர் .

உயிர்களை எந்தவகையில் கொன்றாலும் அது தீமை .

நாணமற்ற பெண்களின் அழகு தீமை பயக்கும் .

உயர்ந்த கொள்கைகளைக் கைவிடுவது ஒருவன் குலத்துக்கே தீங்கு விளைவிக்கும் .

இக்கருத்துகளைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .

எல்லா இடத்தும் கொலைதீது மக்களைக்

கல்லா வளரவிடல் தீது - நல்லார்

நலம்தீது நாணற்று நிற்பின் குலம்தீது

கொள்கை அழிந்தக் கடை

( நான் - 95 )

( நல்லார் = பெண்கள் )

2.3.3. மக்கள் இயல்பு

தம் செயலாலும் , தாம் செய்யும் தொழிலாலும் வேறுபடும் பலவகை மாந்தர்களின் இயல்புகளைத் தொகுத்து உரைக்கிறது நான்மணிக்கடிகை .

மலர் இருப்பதை அதன் மணத்தால் அறிகிறோம் .

அதுபோல் ஒருவன் செயல்திறனை அவன் சொல்லால் அறியலாம் .

ஒருவன் உள்ளக் குறிப்பை அவன் முகத்தால் அறியலாம் .

நாற்றம் உரைக்கும் மலர்உண்மை கூறிய

மாற்றம் உரைக்கும் வினைநலம் தூக்கின்

அகம்பொதிந்த தீமை மனம்உரைக்கும் முன்னம்

முகம்போல முன்உரைப்பது இல்

( நான் - 48 )

( நாற்றம் = மணம் ; வினைநலம் = செயல்திறமை ; முன்னம் = உள்ளக்குறிப்பு , கருத்து )

உழவு மாடு உடையவன் வேளாளன் .

எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் அந்தணன் ( நான் - 55 ) . நன்மை செய்யாதவன் துணையின்றி இருப்பான் .

நற்குணங்களை உடையவன் இனிமையானவன் ( நான் - 61 ) .

பிறர்க்குக் கொடுத்து உண்பவனே புகழ் உடையவன் .

( “ ஈத்துண்பான் என்பான் இசை நடுவான் ” ) கொடுப்பவன் கைப்பொருளைப் பறித்து உண்பவன் பேராசைக்காரன் .

( நான் - 62 ) என்றெல்லாம் அறநோக்கில் மாந்தர் இயல்புகளை வகைப்படுத்துவதைக் காணலாம் .

அழகும் இளமையும் வறுமையால் கெடும் .

குலத்தின் உயர்வும் குலத்தின் ஒழுக்கமும் கல்லாமையால் கெடும் ( நான் - 83 ) என்று மனிதர் நிலையாலும் , நடத்தையாலும் அவர்தம் இயல்பு வேறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை .

வாழ்வியல் உண்மைகள்

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை எவை என்பது இந்நூலில்

வலியுறுத்தப்படுகிறது .

நீக்க வேண்டியவை எவை என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது .

துன்பம் நீக்கும் வழிகளும் கூறப்படுகின்றன .

2.4.1 பின்பற்ற வேண்டியவை

சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிகள் பலவற்றை விளம்பி நாகனார் சுட்டிக்காட்டுகிறார் .

பிறர் செய்த தீமைகளுக்காக அவரை வெறுக்காமல் இருக்க வேண்டும் .

ஆனால் அவர் செய்த நன்மைகளை மறக்காமல் இருக்க வேண்டும் .

கன்றாமை வேண்டும் கடிய பிறர்செய்த

நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்

( நான் - 13 )

( கன்றாமை = சினவாமை )

எப்போதும் பிறருடைய நற்குணங்களையே காணும் மனித நேயத்தின் மாண்பல்லவா இவ்வழி !

கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க வேண்டும் .

விடுவதானால் பற்றை விட்டுவிட வேண்டும் .

உதவி செய்வது என்றால் சுற்றத்தாருள் ஏழைகளை ஆதரிக்க வேண்டும் . வெகுளியைக் கெடுக்க வேண்டும் .