இவையெல்லாம் மனிதனை மாண்பு மிக்கவனாக்கும் வழிமுறைகள் ஆகும் .
பாடலைப் பாருங்கள் .
கொடுப்பின் அசனம் கொடுக்க - விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க - எடுப்பில்
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்
( நான் - 82 )
( அசனம் = உணவு ; ஈட்டை = பற்றை ; எடுப்பில் = உயர்த்த விரும்பினால் ; கிளை = உறவு ; கழிந்தார் = வறியவர் ; எடுக்க = காப்பாற்றுக ; கெடுப்பின் = கைவிடுவதாயின் ; வெகுளி = கோபம் )
2.4.2 இல்லாத இயல்புகள்
அறக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் விளம்பி நாகனார் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருப்பதை நான்மணிக்கடிகையில் காணலாம் .
கருத்துகளை நேரிடையாகச் சொல்வது , வலியுறுத்திச் சொல்வது , நகைச்சுவை இழையோடச் சொல்வது , தத்துவமாகச் சொல்வது என்ற வகைகளே அவ்வுத்திகள் ஆகும் .
பின்பற்றுக , நீக்குக என்று முன்னிலைப்படுத்திச் சொல்லாமல் பற்றற்ற நிலையில் சொல்வது போல் அறிவுரை கூறும் அழகைப்பாருங்கள் .
சென்று விட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .
முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்து இல்லை .
அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்து இல்லை .
சினம் கொண்டவரிடம் எந்த நன்மைகளும் இல்லை என்ற கருத்தை என்னும் பாடல் விளக்குகிறது .
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்
( நான் - 10 )
( கழிவிரக்கம் = வருத்தம் , துன்பம் ; உறா முதல் = முயற்சித் துன்பம் ; தெற்றென = தெளிவாக ; அல்ல = நல்லது அல்லாத )
2.4.3. கேடு விளைவிப்பன
உடலுக்கும் , உள்ளத்துக்கும் கேடு விளைவிப்பன யாவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை .
ஒற்றுமையின்மை நம் வலிமையைக் கெடுக்கும் .
பொய்ம்மை உடம்பைக் கெடுக்கும் .
தூய்மையற்ற பாத்திரம் பாலின் சுவையைக் கெடுக்கும் .
தகாதவரிடம் கொண்ட நட்பானது குலத்தை அழிக்கும் .
இக்கருத்தைச் சொல்லும் பாடலைப் பார்க்கலாம் .
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் பெய்த
கலம்சிதைக்கும் பாலின் சுவையைக் குலம்சிதைக்கும்
கூடான்கண் கூடி விடின்
( நான் - 23 )
( மொய் = வலிமை , கூடார் = தகுதியற்றவர் )
இனி , கேடு எப்பொழுது வரும் என்பதையும் நான்மணிக்கடிகை கூறுகிறது .
ஒருவனுக்கு நாணம் நீங்கினால்செல்வம் அழியும் .
ஐம்பொறிகள் நல்வழி நடந்தால் செய்யும் தீவினை கெட்டுப்போகும் .
நீர் இல்லையென்றால் பயிர் விளைச்சல் கெடும் .
நன்மை மாறினால் நட்புக் கெடும் .
பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிப்பட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்
நண்பினார் நண்பு கெடும்
( நான் - 46 )
என்பது அப்பாடல் .
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு .
( குறள் - 788 ) என்று உற்றுழி உதவுதலை வள்ளுவர் குறிப்பிடுகிறார் அல்லவா ?
அத்தன்மை இல்லாதபோது நட்பு கெட்டுப்போகும் என்கிறார் விளம்பி நாகனார் .
இதையடுத்துத் துன்பம் செய்வன எவை என்று காட்டுகிறார் ஆசிரியர் .
அவை , பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு துன்பம் தரும் .
அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும் .
முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும் என்பனவாம் .
( நான் - 52 )
2.4.4 உலக இயல்பு
உலக இயல்பு , மாந்தர் இயல்பு என்று வகைப்படுத்தி , சில உண்மைகளைச் சுட்டிச் காட்டுவதை நான்மணிக்கடிகையில் காணலாம் .
எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர் .
உயிர்கள் பிறக்கும் போதே நீங்கென நீங்காது .
இறக்கும்போது நில்லென நில்லாது .
விண்மீன்களும் , திங்களும் , சூரியனும் என்றும் உள்ளன .
நோயும் முயற்சியும் என்றும் உள்ளன .
ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் .
பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர் .
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழில்ஒக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்
( நான் - 60 )
( நாள் = நட்சத்திரம் ; இருசுடர் = சூரியன் , சந்திரன் ; தொழில் = முயற்சி )
இவையே இவ்வுலக இயல்பு என்று கூறுகிறது நான்மணிக்கடிகை .
உலகில் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை , எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் விளம்பிநாகனார் , பாருங்கள் !
உலகில் இறவாத உயிர்களும் இல்லை .
கெடாத வலிமைகளும் இல்லை .
மூப்பு அடையாத இளமையும் இல்லை .
குறையாத செல்வங்களும் இல்லை என்ற இக்கருத்தை ,
சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்
( நான் - 79 )
( தாவாத = கெடாத ; மூவாது = முதிராது ; வளமை = செல்வம் )
என்ற பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
தொகுப்புரை
நான்கு மணிகள் போன்ற நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார் .
இல்லற நெறிகள் எவை என்று கூறுகிறார் ஆசிரியர் .
வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் அவர் கூறுவதைக் காண முடிகிறது .
கல்வியின் பயன் நல்லொழுக்கமே என்பது வலியுறுத்தப்படுகிறது .
உலக இயல்பு , மாந்தர் இயல்பு , கற்றார் இயல்பு என்று வகுத்தும் , தொகுத்தும் உரைக்கிறார் விளம்பி நாகனார் .
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கற்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சிறப்பாகச் சொல்கிறது நான்மணிக்கடிகை .
எவற்றையெல்லாம் நீக்கினால் மனிதனாக வாழ்ந்து சிறப்படைய முடியும் என்பதையும் பட்டியல் இடுகிறது இந்நூல் .
உலக இயல்பு என்ற நிலையில் வாழ்வியல் உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது .
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைத் தொகுத்துரைக்கும் சிறந்த நூல் நான்மணிக்கடிகை எனலாம் .
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
கோடிட்ட இடங்களை நிரப்புக .
1. அரசனும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ இல்வழி இல். [ விடை ]
2. கல்லாத _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ உலகம் மதியாது .
[ விடை ] 3. அழகும் இளமையும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ கெடும் .
[ விடை ]
4. மூப்பு அடையாத _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ இல்லை .
[ விடை ]
5. பிறப்பாரும் இறப்பாரும் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ உள்ளனர் .
திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி
பாட முன்னுரை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி .
சுவர் இடிந்து போனால் அதன் மேலே உள்ள சித்திரமும் அழிந்து போகும் .
அதுபோல் உடல் நலிந்தால் வாழ்க்கையே சிதைந்து போகும் .
அதனால் இவ்வுலகில் எச்செயலையும் செய்து முடிக்க உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது இன்றியமையாதது .
உடம்பின் சார்பில்தான் உயிர் நிற்கிறது .
உடம்பு அழியும் போது உயிரும் அழிந்து போகிறது .
இதனால் தான் திருமூலரும் ,
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
என்றும் ,
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
( திருமந்திரம் - 708 )
என்றும் கூறுகிறார் .
உடலை வருத்தும் நோயை வராமல் செய்வதுதான் மருந்து .
மறுப்பது உள் நோய் மருந்து எனல் சாலும்
( திருமூலர் - எண்ணாயிரம் )
என்கிறார் திருமூலர் .
உடம்பினை அழியாது வைத்து இயங்கச் செய்யும் மருந்து முறையே வைத்தியம் எனப்பெறும் .
இந்த வைத்தியத்தை இறைவன் திருவருளால் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் .
இதனால் இது சித்த வைத்தியம் எனப் பெயர் பெறும் .
சித்த வைத்தியத்தில் எளிய மக்களும் நல்வாழ்வு பெற்று உய்வதற்காக அதிகச் செலவில்லாமல் மிகுந்த பயன் விளைவிக்கும் மருந்துகள் கூறப்பெற்றுள்ளன .
சித்தர் மருந்துகள் பல உள்ளன .
அவை தம்முள் சிறந்தனவாகத் திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்பனவற்றைக் குறிப்பிடலாம் .
உடல் நோயைத் தீர்க்கும் மருந்துகளைப் போல உள நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லொழுக்க முறைகளே .
அவற்றைத் தொகுத்துத் திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்று உடல் நோய் மருந்துப் பெயர்களையே இட்டு உளநோய் மருந்து நூல்களைப் பாடியிருக்கின்றனர் மூன்று புலவர்கள் .
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடல் .
நாலடி நான்மணி நானாற்ப ( து ) ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு
கடுகம் , திரிகடுகத்தையும் , மாமூலம் சிறுபஞ்சமூலத்தையும் குறிக்கிறது .
ஏலாதி , ஏலாதி என்றே குறிக்கப்பட்டுள்ளது .
மருந்துப் பெயர் கொண்ட திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்ற இம்மூன்று நூல்களும் மூன்றாவது பாடமாக வருகின்றன .
இப்பாடம் மூன்று பகுதிகளாக உள்ளது .
முதல் பகுதியில் திரிகடுகம் பற்றியும் , இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் பற்றியும் , மூன்றாவது பகுதியில் ஏலாதி பற்றியும் பார்க்கலாம் .
இனி முதற்பகுதியான திரிகடுகம் பற்றிப் பார்ப்போமா ?
திரிகடுகம்
காரம் , கார்ப்பு ( உறைப்பு ) என்று பொருள்படும் .
கடுக்கும் பொருளாகிய சுக்கு , மிளகு , திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும் .
சுக்கு , மிளகு , திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும் .
( பிங்கல நிகண்டு , 352 )
• ஆசிரியர்
திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார் .
ஆதனார் என்பது இயற்பெயர் . ‘ நல் ’ என்பது அடைமொழி .
காப்புச் செய்யுளில் , பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது , குருந்தமரம் சாய்த்தது , மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும் .
இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு .
3.1.1 நூல் அமைப்பும் சிறப்பும்
திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது .
முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை , ‘ திரிகடுகம் போலும் மருந்து ’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார் .
திருக்குறள் , நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது .
கொல்லாமை , ஊன் உண்ணாமை , அருளுடைமை , இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல் , மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது .
இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும் .
ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன .
இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது .
இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது .
இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது .
‘ கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி .
பெய் எனப் பெய்யும் மழை ’ ( திரி-96 ) என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது .
பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள் .
தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது .
அதனால் அவர்தம் செல்வம் குறையும் .
காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும் .
தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘ செல்வம் உடைக்கும் படை ’ எனக் குறிப்பிடுகிறார் .
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை
( திரி - 38 )
( கொன்னே = வீணாக ; வெஃகுதல் = விரும்புதல் )
மேலே கூறிய மூன்றும் செல்வத்தை முற்றிலுமாக அழிக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது அல்லவா !
அரசர் இயல்பு , அமைச்சர் இயல்பு , இளவரசன் , ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும் .
தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும் , மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு .
ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா !
மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு ( திரி-62 )
காப்பாற்ற வேண்டியன பெண்டிர் , பொருள் , உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப் படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் ( திரி-47 )
நட்புக் கொள்ளத் தகுதியற்றவர் , நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் ( திரி-12,15 )
கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது .
வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம் .
எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன .
பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது .
3.1.2 அறத்தின் உயர்வும் சிறப்பும்
இளமையில் கல்வி கற்பதும் , பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும் , சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும் .
நல்லவருள் நல்லவர் எனப்படுதல் , நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும் .
உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும் .
வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும் .
( திரி-41 )
• இயற்கையும் அறமும்
அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது .
மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும் .
குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது .
பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது .
வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம் .
( திரி-50 ) • அறத்திற்கு வழி வகுப்பன