88

அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம் .

கடன்படாது வாழ்பவன் , வந்த விருந்தினரைப் போற்றுபவன் , ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும் .

அது அறம் செய்ய வழிவகுப்பதாகும் .

( திரி-12 )

• துன்பம் பயப்பன

மூடரோடு சேர்தல் , மன உறுதி கொண்ட மனைவியை அடித்தல் , பகைவர் முன்னே தம் செல்வத்தைக் காட்டுதல் , பகைவருடன் நட்பு கொள்ளுதல் ஆகியன இறப்பது போன்ற துன்பத்தைத் தரும் ( திரி-3 )

எனவே , அத்தகையை செயல்களை நீக்க வேண்டும் என்கிறார் நல்லாதனார் .

3.1.3 நல்ல குடும்பப் பண்பு

கணவன் , மனைவி , மக்கள் அடங்கியது குடும்பம் .

நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன் .

குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது .

‘ ஏவா மக்கள் மூவா மருந்து ’ என்பது ஆன்றோர் வாக்கு .

பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும் .

அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள் .

ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர் .

இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன் .

செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும் .

வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் ( திரி-49 )

தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது .

எனவே , நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே .

அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள் .

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது

வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி

அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்

இம்மைக் குறுதியில் லார்

( திரி - 49 )

( இளம்கிளை = மக்கள் ; தலைமகன் = கணவன் ; வைது = ஏசி ; எள்ளி = இகழ்ந்து )

3.1.4 கல்வியின் பயன்கள்

சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா ?

கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது .

அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர் .

எனவே தான் வள்ளுவர் ,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

( குறள் - 391 )

என்றார் .

முதுமைக் காலத்தும் ஆசைகளைத் துறக்காதவர்கள் , வீண்மொழி பேசும் துறவிகள் ஆகியோர் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர் .

( திரி-17 )

நல்ல கல்வி இப்பிறவியில் மட்டுமல்லாது மறுபிறவிக்கும் பயன் கொடுக்க வல்லது .

கல்வி முயன்றும் , விரும்பியும் கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறதல்லவா ?

• துன்பத்தைத் தருவன

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுதலும் சுற்றத்தார் பசித்திருக்கத் தாம் சோம்பலை மேற்கொள்வதும் கல்லாதவன் என்று ஒருவனை இகழ்தலும் இவை மூன்றும் துன்பத்தைத் தருவன .

வருவாயில் நான்கிலொருபங்கை அறவழியில் செலவு செய்தல் , எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவராக அமைதல் , பலவற்றையும் ஆராய்ந்து நல்லவற்றைப் படித்தல் ஆகியன சான்றோர்க்கு உரிய கொள்கைகளாம் .

( திரி-21 )

• வீடுபேறு அடையவழி

பற்று என்பது ஒருவனைக் கட்டும் விலங்கு ; பொருள்களின் மேல் மனம் செல்லவிட்டு அப்பொருள்களை அடைய முயலும் விருப்பமே அவா ; பகைவனைப் போலத் தவறாமல் தீங்கு விளைவிப்பது பொய் .

இந்த மூன்றையும் விலக்க வேண்டும் .

பற்று , அவா , பொய் , ஆகியவற்றை நீக்கினால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறது .

( திரி-22 ) • உயர்ந்தோர் யார் ?

கடமை தவறாத அந்தணன் , நெறி தவறாத மன்னன் , கவலையில்லாத குடிமக்கள் ஆகியோர் உயர்ந்தோர் எனப் போற்றப்படுவர் .

( திரி-34 )

• பிறந்தும் பிறவாதார்

அருளில்லாதவனும் , பொருளினைத் தானும் அநுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும் , பிறர் மனம் வருந்தும்படி பேசுகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்களாய்ப் பிறந்தும் பிறவாதவர் ஆவார் .

( திரி-92 )

3.1.5 பிற உண்மைகள்

அறநெறியில் ஒழுகுதல் பற்றியும் , இல்லாவிடில் வரும் கேடு பற்றியும் , கல்வியின் பயன்கள் பற்றியும் பார்த்தோம் .

இனி உலகியலில் சில உண்மைகள் கூறி மனித வாழ்வை நெறிப்படுத்தும் பணியைப் பற்றித் திரிகடுகப் பாடல்கள் சொல்வதைக் காண்போமா !

• எச்சரிக்கையாய் இருக்க வேண்டுவன

வாழ்க்கையில் எது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ?

பின்னால் வரவிருக்கும் முதுமைப் பருவம் , நண்பரிடையே பெருந்துன்பத்தைத் தரும் பிரிவு , உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் ஆகிய மூன்றும் கள்வரை விட அஞ்சக்கூடியன .

அவற்றுக்கு அஞ்சி அதனால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை ,

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு

இருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை

உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்

கள்வரின் அஞ்சப் படும்

( திரி-18 )

என்ற பாடல் உணர்த்துகிறது .

• பயன் தராத செயல்கள்

காலம் பொன்னை விட மேலானது .

காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா ?

அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண் .

அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம் .

( திரி-10 )

ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர் .

இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம் .

ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது .

( திரி-28 )

சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள் .

ஆனால் அது பயன் தராது என்கிறது திரிகடுகம் ( 28 )

தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு , விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது , நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது ( திரி-63 )

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருள்கள் யாவை ?

[ விடை ]

3. ஒருவன் கல்வித்தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ குத்துவது போலப் பயன் அற்றது .

( நிரப்புக)

சிறுபஞ்சமூலம்

இனி இரண்டாவது மருந்து நூலாகிய சிறுபஞ்சமூலம் பற்றிப் பார்ப்போமா ?

பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும் .

மூலம் என்றால் வேர் என்று பொருள் .

மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் பின்வருவன : அவை

1. கண்டங்கத்தரி வேர்

2. சிறு வழுதுணை வேர்

3. சிறுமல்லி வேர்

4. நெருஞ்சி வேர்

5. பெருமல்லி வேர்

என்பனவாகும் . இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன .

இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன .

அவை சிறந்த அற நெறிகள் .

நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர் ,

ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு

ஒத்த இவையலவோர் நாலிட்டு - ஒத்த

உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்

சிறுபஞ்ச மூலம் சிறந்து

( சிறுபஞ் - 1 )

என்று முதல் பாடலில் கூறுகிறார் .

இதன் விளக்கமாவது :

கொலை , பொய் , புலால் , களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை , பொய் கூறாமை , புலால் உண்ணாமை , களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து , ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது .

பஞ்சத்தைப் போக்கும் மழைபோல .

இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும் .

மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள் .

• ஆசிரியர்

சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான் .

காரி என்பது இவரது இயற்பெயர் .

ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர் .

இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர் .

‘ மழைக்கை மாக்காரி யாசான் ’ என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது .

இவரது காலம் நான்காம் நூற்றாண்டு .

ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் ( சிறுபஞ் .

51 ) , அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம் .

3.2.1 நூல் அமைப்பும் சிறப்பும்

சிறுபஞ்ச மூலத்தில் பாயிரச் செய்யுள் உட்பட 100 செய்யுள்கள் உள்ளன .

பாடல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை .

முன்பு கூறியது போல் ஐவகை வேர்களும் நோயை நீக்குகின்றன .

அதைப் போல் இந்த நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகளும் மக்களை நல்வழிப்படுத்தும் அறநெறிகளாகும் .

அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார் .

இந்த அறக்கருத்துகளே நூலில் பாடுபொருளாக விளங்குகின்றன .

பல பாடல்கள் ‘ மகடூஉ முன்னிலை ’யாக அமைந்துள்ளன .

‘ மகடூஉ முன்னிலை ’ என்பது .

ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல , பாடலை அமைப்பது .

எடுத்துக்காட்டாக , ‘ கண்டல் அவிர்பூங் கதுப்பினாய் ’ ( சிறுபஞ் .

14 தாழைமலர் அணிந்த கூந்தலையுடையவளே !

என்பது இதன் பொருள் )

பாடல்கள் 48,54,89,92 ஆகியவற்றிலும் இது போன்ற விளிகளைக் ( அழைப்புகள் ) காணலாம் .

இனி , சிறுபஞ்ச மூலம் கூறும் நெறிமுறைகளைப் பார்ப்போமா ?

உலகில் பஞ்சத்தின் காரணமாக ஏற்படும் விளைவின்மையை மழை நீக்குகிறது .

அதுபோல் உடலுக்கு ஏற்பட்ட நோயைச் சிறுபஞ்சமூலம் என்ற மருந்து நீக்குகின்றது .

அங்ஙனமே உயிரைப் பற்றிய பிணிகளைச் சிறுபஞ்ச மூலம் போக்குகிறது .

உயிரைப் பற்றிய பிணிகள் கொலை , பொய் , புலால் உண்ணுதல் , களவு செய்தல் என்பனவாகும் .

அவற்றிற்கு மருந்தாக அமையக் கூடியவை

1. அருளுடைமை

2 , மெய்ம்மை

3. புலால் உண்ணாமை

4. திருடாமை

ஆகிய நான்கும் மருந்தாக அமையும் .

இந்த மருந்துகளைச் சிறுபஞ்சமூலம் விளக்குகிறது . அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன .

வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான் .

அறிவுடையார் செயல்கள் , அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன .

எது அழகு என்பது சுட்டப்படுகிறது .

ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது .

இவ்வுலகில் ஒரு நோயும் இன்றி வாழ்பவர் யார் , எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்பவர் யார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம் .

மக்கட்பிறவியும் , அப்பிறவிப்பயனும் பற்றிக் கூறப்படுகிறது .

யாருக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன .

ஆண்டுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருமையான பாடல்களும் சிறுபஞ்சமூலத்தில் உண்டு .

அரசர் , அமைச்சர் , தலைவன் , உழவர் ஆகியோர் இயல்புகள் வரையறுக்கப்படுகின்றன .

பொது நல உணர்வுடையவன் சுவர்க்கம் புகுவான் என்ற கருத்தமைந்த பாடலும் உண்டு .

குளத்தைத் தோண்டல் , மரக்கிளைகளை வெட்டி நடல் , பாதைகளை அமைத்தல் , மேடான நிலங்களை உள் தோண்டல் , உழுகின்ற வயலாக்குதல் , வளம்படத் தோண்டி கிணற்றை உண்டாக்குதல் ஆகிய ஐந்தும் மிகுதியாகச் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்கிறார் காரியாசான் ( சிறுபஞ்-66 )

காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற நூலின் வாயிலாகப் பண்டைய தமிழரின் வாழ்வியல் மதிப்பீடுகளை எடுத்துக்காட்டுகிறார் .

அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம் .

அவ்வாறு விளக்கும் போது விலங்குகளையும் , மரங்களையும் , பறவைகளையும் ஒப்பிடுவது சிறப்பாக உள்ளது .

பூவாது காய்க்கும் மரங்கள் , பூத்தும் காய்க்காத மரங்கள் , காக்கைகள் , செவ்வெறும்புகள் , நண்டு , சிப்பி , வேய் , கதலி ஆகியவற்றின் இயல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன .

நன்மை தருவன , தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்ற வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகிறார் .

உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் காரியாசான் அறவழியே நில்லுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார் .

ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன .

அதுபோல இங்குக் கூறப்படும் உறுதிப் பொருள்கள் வாழ்வைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவும் .

வழி நடக்கவும் துணை புரிகின்றன .

பிறவிப் பிணியைத் தீர்க்க வல்ல அருமருந்தாகவும் அது அமைகிறது .

சிறு பஞ்சமூலம் சொல்லும் பெருநெறிகள் இவையே .

3.2.2 அறச்சிறப்பு

கொல்லாமை , பொய்யாமை , புலால் உண்ணாமை , களவு செய்யாமை இவை நான்குடன் இவை அல்லாத ஏனைய அறங்கள் எல்லாம் ஓர் அறமாகக் கொண்டால் , இந்த ஐவகை அறங்களும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறார் காரியாசான் ( சிறுபஞ்-1 )

குழந்தை நலன் காத்தல் நோயற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முதற்படி அல்லவா ?

அதனை விரிவாகப் பேசுகிறது சிறுபஞ்ச மூலம் .

ஈன்ற தாய் தன் குழந்தையை வளர்த்தல் , தான் கொண்ட சூலை அழியாது காத்தல் , வளர்ப்பார் இல்லாத குழவியை வளர்த்தல் , சூல் ஏற்ற கன்னியையும் மிகவும் வருந்தியவனையும் தன் வீட்டில் வைத்துப் போற்றுதல் இவை பெரிய அறங்களாகும் என்பர் சான்றோர் .

இவை இக்காலத்துக்கும் மிகப் பொருந்துகின்றன அல்லவா ?

• இல்லறச் சிறப்பு

மனைவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை , துறவறத்திலும் நன்றாகும் .

நல்ல துறவறத்தார்க்கு உணவை ஆக்கியிட்டுத் தாமும் உண்ணும் சிறப்புடையவர்கள் இல்லறத்தார் .

இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தினால் அதுவே துறவற வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்கிறது சிறுபஞ்சமூலம் ( 92 )

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன்

( குறள் - 46 )

என்ற குறட்பாக் கருத்தை அடியொற்றி மேற்கூறிய கருத்து அமைவதைக் காணலாம் .

• ஈகை

இல்லறநெறியில் ஈகைக்கு இன்றியமையாத இடமுண்டு .

ஈகைக்கு அடிப்படையாக அமைவது உள்ள நெகிழ்ச்சி .

இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து அவர்க்குத் தேவையானதைத் தர வேண்டும் .

எதைப்போல் உள்ளம் நெகிழ வேண்டும் என்று காரியாசான் சொல்கிறார் என்று பார்க்கலாமா ?

நெருப்பைக் கண்ட வெண்ணெய் , மெழுகு , நீர் சேர்ந்த மண் , உப்பு , தன் அழகிய மகனைத் தழுவிய தந்தை என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல் இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து ஈயவேண்டும் .

அவ்வாறு ஈயும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும் என்று ஈகைச் சிறப்பு பேசப்படுகிறது .

பாடலைப் பாருங்கள் ,

வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு

அந்த மகற்சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்

ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்

குன்றுபோல் கூடும் பயன்

( சிறுபஞ்-65 ) ( அந்த மகன் = அழகுடைய மகன் )