அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம் .
கடன்படாது வாழ்பவன் , வந்த விருந்தினரைப் போற்றுபவன் , ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும் .
அது அறம் செய்ய வழிவகுப்பதாகும் .
( திரி-12 )
• துன்பம் பயப்பன
மூடரோடு சேர்தல் , மன உறுதி கொண்ட மனைவியை அடித்தல் , பகைவர் முன்னே தம் செல்வத்தைக் காட்டுதல் , பகைவருடன் நட்பு கொள்ளுதல் ஆகியன இறப்பது போன்ற துன்பத்தைத் தரும் ( திரி-3 )
எனவே , அத்தகையை செயல்களை நீக்க வேண்டும் என்கிறார் நல்லாதனார் .
3.1.3 நல்ல குடும்பப் பண்பு
கணவன் , மனைவி , மக்கள் அடங்கியது குடும்பம் .
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன் .
குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது .
‘ ஏவா மக்கள் மூவா மருந்து ’ என்பது ஆன்றோர் வாக்கு .
பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும் .
அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள் .
ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர் .
இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன் .
செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும் .
வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் ( திரி-49 )
தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது .
எனவே , நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே .
அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள் .
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்
( திரி - 49 )
( இளம்கிளை = மக்கள் ; தலைமகன் = கணவன் ; வைது = ஏசி ; எள்ளி = இகழ்ந்து )
3.1.4 கல்வியின் பயன்கள்
சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா ?
கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது .
அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர் .
எனவே தான் வள்ளுவர் ,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
( குறள் - 391 )
என்றார் .
முதுமைக் காலத்தும் ஆசைகளைத் துறக்காதவர்கள் , வீண்மொழி பேசும் துறவிகள் ஆகியோர் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர் .
( திரி-17 )
நல்ல கல்வி இப்பிறவியில் மட்டுமல்லாது மறுபிறவிக்கும் பயன் கொடுக்க வல்லது .
கல்வி முயன்றும் , விரும்பியும் கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறதல்லவா ?
• துன்பத்தைத் தருவன
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுதலும் சுற்றத்தார் பசித்திருக்கத் தாம் சோம்பலை மேற்கொள்வதும் கல்லாதவன் என்று ஒருவனை இகழ்தலும் இவை மூன்றும் துன்பத்தைத் தருவன .
வருவாயில் நான்கிலொருபங்கை அறவழியில் செலவு செய்தல் , எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவராக அமைதல் , பலவற்றையும் ஆராய்ந்து நல்லவற்றைப் படித்தல் ஆகியன சான்றோர்க்கு உரிய கொள்கைகளாம் .
( திரி-21 )
• வீடுபேறு அடையவழி
பற்று என்பது ஒருவனைக் கட்டும் விலங்கு ; பொருள்களின் மேல் மனம் செல்லவிட்டு அப்பொருள்களை அடைய முயலும் விருப்பமே அவா ; பகைவனைப் போலத் தவறாமல் தீங்கு விளைவிப்பது பொய் .
இந்த மூன்றையும் விலக்க வேண்டும் .
பற்று , அவா , பொய் , ஆகியவற்றை நீக்கினால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறது .
( திரி-22 ) • உயர்ந்தோர் யார் ?
கடமை தவறாத அந்தணன் , நெறி தவறாத மன்னன் , கவலையில்லாத குடிமக்கள் ஆகியோர் உயர்ந்தோர் எனப் போற்றப்படுவர் .
( திரி-34 )
• பிறந்தும் பிறவாதார்
அருளில்லாதவனும் , பொருளினைத் தானும் அநுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும் , பிறர் மனம் வருந்தும்படி பேசுகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்களாய்ப் பிறந்தும் பிறவாதவர் ஆவார் .
( திரி-92 )
3.1.5 பிற உண்மைகள்
அறநெறியில் ஒழுகுதல் பற்றியும் , இல்லாவிடில் வரும் கேடு பற்றியும் , கல்வியின் பயன்கள் பற்றியும் பார்த்தோம் .
இனி உலகியலில் சில உண்மைகள் கூறி மனித வாழ்வை நெறிப்படுத்தும் பணியைப் பற்றித் திரிகடுகப் பாடல்கள் சொல்வதைக் காண்போமா !
• எச்சரிக்கையாய் இருக்க வேண்டுவன
வாழ்க்கையில் எது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ?
பின்னால் வரவிருக்கும் முதுமைப் பருவம் , நண்பரிடையே பெருந்துன்பத்தைத் தரும் பிரிவு , உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் ஆகிய மூன்றும் கள்வரை விட அஞ்சக்கூடியன .
அவற்றுக்கு அஞ்சி அதனால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை ,
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
இருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரின் அஞ்சப் படும்
( திரி-18 )
என்ற பாடல் உணர்த்துகிறது .
• பயன் தராத செயல்கள்
காலம் பொன்னை விட மேலானது .
காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா ?
அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண் .
அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம் .
( திரி-10 )
ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர் .
இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம் .
ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது .
( திரி-28 )
சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள் .
ஆனால் அது பயன் தராது என்கிறது திரிகடுகம் ( 28 )
தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு , விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது , நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது ( திரி-63 )
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
1. திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார் ?
[ விடை ]
2. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருள்கள் யாவை ?
[ விடை ]
3. ஒருவன் கல்வித்தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் _ _ _ _ _ _ _ _ _ _ _ _ குத்துவது போலப் பயன் அற்றது .
( நிரப்புக)
சிறுபஞ்சமூலம்
இனி இரண்டாவது மருந்து நூலாகிய சிறுபஞ்சமூலம் பற்றிப் பார்ப்போமா ?
பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும் .
மூலம் என்றால் வேர் என்று பொருள் .
மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் பின்வருவன : அவை
1. கண்டங்கத்தரி வேர்
2. சிறு வழுதுணை வேர்
3. சிறுமல்லி வேர்
4. நெருஞ்சி வேர்
5. பெருமல்லி வேர்
என்பனவாகும் . இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன .
இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன .
அவை சிறந்த அற நெறிகள் .
நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர் ,
ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு
ஒத்த இவையலவோர் நாலிட்டு - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலம் சிறந்து
( சிறுபஞ் - 1 )
என்று முதல் பாடலில் கூறுகிறார் .
இதன் விளக்கமாவது :
கொலை , பொய் , புலால் , களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை , பொய் கூறாமை , புலால் உண்ணாமை , களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து , ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது .
பஞ்சத்தைப் போக்கும் மழைபோல .
இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும் .
மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள் .
• ஆசிரியர்
சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான் .
காரி என்பது இவரது இயற்பெயர் .
ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர் .
இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர் .
‘ மழைக்கை மாக்காரி யாசான் ’ என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது .
இவரது காலம் நான்காம் நூற்றாண்டு .
ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் ( சிறுபஞ் .
51 ) , அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம் .
3.2.1 நூல் அமைப்பும் சிறப்பும்
சிறுபஞ்ச மூலத்தில் பாயிரச் செய்யுள் உட்பட 100 செய்யுள்கள் உள்ளன .
பாடல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை .
முன்பு கூறியது போல் ஐவகை வேர்களும் நோயை நீக்குகின்றன .
அதைப் போல் இந்த நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகளும் மக்களை நல்வழிப்படுத்தும் அறநெறிகளாகும் .
அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார் .
இந்த அறக்கருத்துகளே நூலில் பாடுபொருளாக விளங்குகின்றன .
பல பாடல்கள் ‘ மகடூஉ முன்னிலை ’யாக அமைந்துள்ளன .
‘ மகடூஉ முன்னிலை ’ என்பது .
ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல , பாடலை அமைப்பது .
எடுத்துக்காட்டாக , ‘ கண்டல் அவிர்பூங் கதுப்பினாய் ’ ( சிறுபஞ் .
14 தாழைமலர் அணிந்த கூந்தலையுடையவளே !
என்பது இதன் பொருள் )
பாடல்கள் 48,54,89,92 ஆகியவற்றிலும் இது போன்ற விளிகளைக் ( அழைப்புகள் ) காணலாம் .
இனி , சிறுபஞ்ச மூலம் கூறும் நெறிமுறைகளைப் பார்ப்போமா ?
உலகில் பஞ்சத்தின் காரணமாக ஏற்படும் விளைவின்மையை மழை நீக்குகிறது .
அதுபோல் உடலுக்கு ஏற்பட்ட நோயைச் சிறுபஞ்சமூலம் என்ற மருந்து நீக்குகின்றது .
அங்ஙனமே உயிரைப் பற்றிய பிணிகளைச் சிறுபஞ்ச மூலம் போக்குகிறது .
உயிரைப் பற்றிய பிணிகள் கொலை , பொய் , புலால் உண்ணுதல் , களவு செய்தல் என்பனவாகும் .
அவற்றிற்கு மருந்தாக அமையக் கூடியவை
1. அருளுடைமை
2 , மெய்ம்மை
3. புலால் உண்ணாமை
4. திருடாமை
ஆகிய நான்கும் மருந்தாக அமையும் .
இந்த மருந்துகளைச் சிறுபஞ்சமூலம் விளக்குகிறது . அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன .
வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான் .
அறிவுடையார் செயல்கள் , அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன .
எது அழகு என்பது சுட்டப்படுகிறது .
ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது .
இவ்வுலகில் ஒரு நோயும் இன்றி வாழ்பவர் யார் , எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்பவர் யார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம் .
மக்கட்பிறவியும் , அப்பிறவிப்பயனும் பற்றிக் கூறப்படுகிறது .
யாருக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன .
ஆண்டுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருமையான பாடல்களும் சிறுபஞ்சமூலத்தில் உண்டு .
அரசர் , அமைச்சர் , தலைவன் , உழவர் ஆகியோர் இயல்புகள் வரையறுக்கப்படுகின்றன .
பொது நல உணர்வுடையவன் சுவர்க்கம் புகுவான் என்ற கருத்தமைந்த பாடலும் உண்டு .
குளத்தைத் தோண்டல் , மரக்கிளைகளை வெட்டி நடல் , பாதைகளை அமைத்தல் , மேடான நிலங்களை உள் தோண்டல் , உழுகின்ற வயலாக்குதல் , வளம்படத் தோண்டி கிணற்றை உண்டாக்குதல் ஆகிய ஐந்தும் மிகுதியாகச் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்கிறார் காரியாசான் ( சிறுபஞ்-66 )
காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற நூலின் வாயிலாகப் பண்டைய தமிழரின் வாழ்வியல் மதிப்பீடுகளை எடுத்துக்காட்டுகிறார் .
அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம் .
அவ்வாறு விளக்கும் போது விலங்குகளையும் , மரங்களையும் , பறவைகளையும் ஒப்பிடுவது சிறப்பாக உள்ளது .
பூவாது காய்க்கும் மரங்கள் , பூத்தும் காய்க்காத மரங்கள் , காக்கைகள் , செவ்வெறும்புகள் , நண்டு , சிப்பி , வேய் , கதலி ஆகியவற்றின் இயல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன .
நன்மை தருவன , தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்ற வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகிறார் .
உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் காரியாசான் அறவழியே நில்லுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார் .
ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன .
அதுபோல இங்குக் கூறப்படும் உறுதிப் பொருள்கள் வாழ்வைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவும் .
வழி நடக்கவும் துணை புரிகின்றன .
பிறவிப் பிணியைத் தீர்க்க வல்ல அருமருந்தாகவும் அது அமைகிறது .
சிறு பஞ்சமூலம் சொல்லும் பெருநெறிகள் இவையே .
3.2.2 அறச்சிறப்பு
கொல்லாமை , பொய்யாமை , புலால் உண்ணாமை , களவு செய்யாமை இவை நான்குடன் இவை அல்லாத ஏனைய அறங்கள் எல்லாம் ஓர் அறமாகக் கொண்டால் , இந்த ஐவகை அறங்களும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறார் காரியாசான் ( சிறுபஞ்-1 )
குழந்தை நலன் காத்தல் நோயற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முதற்படி அல்லவா ?
அதனை விரிவாகப் பேசுகிறது சிறுபஞ்ச மூலம் .
ஈன்ற தாய் தன் குழந்தையை வளர்த்தல் , தான் கொண்ட சூலை அழியாது காத்தல் , வளர்ப்பார் இல்லாத குழவியை வளர்த்தல் , சூல் ஏற்ற கன்னியையும் மிகவும் வருந்தியவனையும் தன் வீட்டில் வைத்துப் போற்றுதல் இவை பெரிய அறங்களாகும் என்பர் சான்றோர் .
இவை இக்காலத்துக்கும் மிகப் பொருந்துகின்றன அல்லவா ?
• இல்லறச் சிறப்பு
மனைவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை , துறவறத்திலும் நன்றாகும் .
நல்ல துறவறத்தார்க்கு உணவை ஆக்கியிட்டுத் தாமும் உண்ணும் சிறப்புடையவர்கள் இல்லறத்தார் .
இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தினால் அதுவே துறவற வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்கிறது சிறுபஞ்சமூலம் ( 92 )
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்
( குறள் - 46 )
என்ற குறட்பாக் கருத்தை அடியொற்றி மேற்கூறிய கருத்து அமைவதைக் காணலாம் .
• ஈகை
இல்லறநெறியில் ஈகைக்கு இன்றியமையாத இடமுண்டு .
ஈகைக்கு அடிப்படையாக அமைவது உள்ள நெகிழ்ச்சி .
இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து அவர்க்குத் தேவையானதைத் தர வேண்டும் .
எதைப்போல் உள்ளம் நெகிழ வேண்டும் என்று காரியாசான் சொல்கிறார் என்று பார்க்கலாமா ?
நெருப்பைக் கண்ட வெண்ணெய் , மெழுகு , நீர் சேர்ந்த மண் , உப்பு , தன் அழகிய மகனைத் தழுவிய தந்தை என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல் இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து ஈயவேண்டும் .
அவ்வாறு ஈயும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும் என்று ஈகைச் சிறப்பு பேசப்படுகிறது .
பாடலைப் பாருங்கள் ,
வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு
அந்த மகற்சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்
குன்றுபோல் கூடும் பயன்
( சிறுபஞ்-65 ) ( அந்த மகன் = அழகுடைய மகன் )