3.2.3 வாழ்வாங்கு வாழ்வார்
நம் கண் முன்னால் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவார் பலரைக் காண்கிறோம் .
ஒரு சிலரே நோயற்று வாழ்கின்றனர் .
இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து சொல்கிறார் காரியாசான் .
நோயுற்றவர் கலங்கித் துன்புறுகின்றனர் .
மருத்துவர் சிலரோ கல் நெஞ்சம் உடையராகி நோயுற்றாரிடம் மிகுதியான பணம் கேட்கின்றனர் .
இரக்கமுள்ள மருத்துவர் நோயுற்றவரிடம் இனிமையாகப் பேசி நன்மருந்து தந்து அவர் உடல் நோயினைத் தீர்க்கின்றனர் .
மிகக் கொடிய தலைநோய் உற்றார் , பித்தேறியவர் , வாய்ப்புற்று உடையவர் , சயநோய் உடையவர் , மூலநோய் கண்டவர் ஆகியோர் நோய்களைத் துடைத்த அருளாளரே ஒரு நோயும் இன்றி வாழ்கின்றனர் என்கிறார் காரியாசான் .
( சிறுபஞ்-76 )
• நீண்ட நாள் வாழ்வார்
பஞ்ச காலத்திலும் பகுத்து உண்பவர் .
மற்றவர்க்குக் கொடுத்து உண்பவர் , படையுடைந்த காலத்து அஞ்சாது புகுந்து பலரையும் காக்கின்றவன் , எந்நாளும் மற்றவர்க்குக் கொடுத்த பின்னரே உண்கின்றவன் , பசித்த குழந்தைகளுக்குச் சோறளிப்பவன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வார் என்று கூறுகிறது .
( சிறுபஞ்-79 )
3.2.4 மரங்களும் மக்கள் வாழ்க்கையும்
பலா முதலிய மரங்கள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் பூக்காமல் காய்க்கின்றன .
பூத்தாலும் காயாத பாதிரி முதலான மரங்களும் இருக்கின்றன .
நூல்களைக் கற்றுவல்ல மேதையர் வயதில் இளையராயினும் அறிவினால் மூத்தவரே .
நூல்களைக் கற்றுத் தெளியாத பேதையர் வயதில் முதிர்ந்தவர் ஆயினும் அறிவில் சிறியவரே .
ஆண்டில் இளைஞராயினும் அறிவினால் மூத்தவர் சிலர் வெளிப்படையாகப் பூக்காமல் காய்க்கும் மரம் போன்றவர்கள் ( அத்தி , ஆல் , பலா , அரசு போன்ற மரங்கள் )
பிறர் அறிவிக்காமலேயே அறிவுடைய அறிவுடையோரும் உள்ளனர் .
இவர்கள் பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கின்ற விதை போன்றவர்கள் என்று கூறுகிறது சிறுபஞ்ச மூலம் ( 22 )
வயதும் அறிவும் பற்றி விளக்கும் பாடல்களைப் பாருங்கள் .
பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு
( சிறுபஞ் - 22 )
( நாறுவ = முளைப்பன )
பூத்தாலுங் காயா மரம்உள நன்றறியார்
மூத்தாலும் மூவார்நூல் தேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலும் செல்லா துணர்வு
( சிறுபஞ் - 23 )
( நாறாத = முளையாத , பேதை = அறிவில்லாதவன் )
3.2.5 பிறவியற்றவர்
உலகில் பிறப்பற்று வாழ்பவர் யார் என்று காட்டுகிறார் காரியாசான் .
கள் உண்ணாமலும் , சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும் , பிறர் மனம் வருந்த வன்சொல் கூறாமலும் , ஊன் உண்ணாமலும் இருப்பவர் மீண்டும் பிறத்தல்இல்லை என்பது ஆசிரியர் எண்ணம் .
( சிறுபஞ்-21 )
மக்களாய்ப் பிறந்தும் இரண்டு கால் மாடுகள் என்று யாரைச் சொல்கிறார் காரியாசான் என்று பார்ப்போமா ?
முன்பு பொருள் உடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம் என்போரும் , முன்பு யாமே அழகு உடையராய் இருந்தோம் என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால்களோடு உலவும் மாடுகளுக்கு ஒப்பாவார் என்று கூறுகிறார் .
( சிறுபஞ்-20 )
3.2.6 வாழ்வியல் உண்மைகள்
வாழ்வியல் உண்மைகள் பலவற்றைக் காரியாசான் நூலின் இடையிடையே எடுத்துரைக்கின்றார் .
எது நன்று ?
எது நன்றன்று ?
எது வேண்டும் ?
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் பார்ப்போமா ?
• எது நன்று ?
எது நன்றன்று ? பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் நன்று .
பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் நன்றன்று .
பிறர் பகை கெடவாழ்தல் நன்று ( சிறுபஞ்-16 )
• எது வேண்டும் ?
என்ன செய்ய வேண்டும் ?
பிறவி நீங்கத் தவம் செய்க .
புகழ் வேண்டும் எனில் ஈதலைச் செய்க .
இரக்கம் வேண்டுமெனில் பிறர் மனை விரும்பாமை வேண்டும் .
தினம் சிறிதேனும் பொருள் சேர்த்தால் செல்வம் பெருகும் என்று ஒருவர் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர் .
( சிறுபஞ்-5 )
ஒருவனுடைய நாவில் தோன்றும் வசை மொழிகளே அவனுக்கு எமனாகும் என்ற கருத்தை எப்படிச் சொல்கிறார் காரியாசான் என்று பாருங்கள் .
சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை
( சிறுபஞ் - 11 )
( கூற்றம் = எமன் , கோடு = கொம்பு , வலம் = வெற்றி , மா = மான் , ஞெண்டு = நண்டு , பார்ப்பு = குஞ்சு )
1. சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டை எமன்
2. மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகள் எமன்
3. கவரிமானுக்கு அதன் மயிர் எமன்
4. நண்டுக்கு அதன் குஞ்சு எமன்
5. ஒருவன் நாவில் தோன்றும் வசைமொழியே அவனுக்கு
எமன் என்கிறார் .
நண்டு , சிப்பி , வேய் , கதலி ஆகியவை நாசமுறும் காலத்தில் கொண்ட கருவழிக்கும் என்ற ( நல்வழி-36 ) பாடல் அடி இந்த நான்கிற்கும் அவற்றின் குஞ்சே எமன் ஆகும் என்ற கருத்தை அரண்செய்யும் வகையில் உள்ளது .
• எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று
1. வலிய தூக்கணாங் குருவி செய்யும் கூடும்
2. பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கும்
3. தூய உலண்டு ( ஒருவகைப் புழு ) என்னும் புழுக்களால்
நூற்கப்பட்ட நூலும் .
4. கோல் புழுவால் செய்யப்பட்ட கோல் கூடும்
5. தேனீக்களால் திரட்டப்பட்ட தேன் பொதியும்
மற்றவர்களாலே செய்ய முடியாது .
அவற்றாலேயே எளிதாக உருவாக்க முடியும் .
கற்றவர் அவற்றைத் தம்மால் செய்ய முடியும் என்று செய்ய முற்படார் .
ஒவ்வொருவர்க்கும் அவரவர் செய்யும் செயல் எளிது .
பிறர் செய்யும் செயல் அரிது என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது சிறுபஞ்சமூலம் ( 27 ) !
• உறுதிப் பொருள்கள்
சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து உறுதிப் பொருள்களும் மக்களை எச்சரிக்கை செய்து வாழ்வை நெறிப்படுத்துவனவாய் அமைகின்றன .
அவை :
1. நற்குணம் உடையவரைச் சேருங்கள்
2. பிறர் பொருளைக் கவர நினைக்காதீர்கள்
3. தீக்குணம் உடையவரை ஒழியுங்கள்
4. தீய சொற்களைப் பேசாதீர்கள்
5. இயமன் வருவது உறுதி
என்பனவாகும் ( 26 )
ஏலாதி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள் .
ஏலாதி என்பது ஏலம் , இலவங்கம் , சிறு நாவற்பூ , சுக்கு , மிளகு , திப்பிலி என்ற ஆறு பொருள்களும் ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை சூர்ணமாகும் .
இது உடலுக்கு வலிமை , பொலிவு , தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது .
அதுபோல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமை நோயை நீக்கி அறிவைத் தரவல்லன . அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர் .
மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும் .
3.3.1 ஆசிரியர்
நூலின் ஆசிரியர் கணி மேதாவியார் .
இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர் .
கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர் .
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர் .
இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் .
3.3.2 நூலின் அமைப்பும் பாடுபொருளும்
இந்நூல் 82 பாடல்களைக் கொண்டுள்ளது .
சிறப்புப்பாயிரம் , தற்சிறப்புப் பாயிரம் ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும் .
இந்நூலும் ‘ மகடூஉ முன்னிலை ’ அமைப்பைக் கொண்டது .
அதாவது , ஒரு பெண்ணை விளித்து , அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது .
1 , 2 , 6 , 7 , 13 , 21 , 28 , 29 , 31 , 32 , 33 , 56 , 76 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம் .
சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளாகிய கொல்லாமை , கள்ளாமை , பொய்யாமை முதலியவற்றையும் காமம் , கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது .
இல்லறம் , துறவறம் ஆகிய நெறிகளையும் விளக்குகிறது .
சமண சமய நூலாக இருந்தாலும் , இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் அனைவர்க்கும் பொதுவான பொதுமை நெறிகளாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம் .
இந்நூலாசிரியர் காலம் நான்காம் நூற்றாண்டு .
3.3.3 உண்டி கொடுத்தலின் பயன்
துறவிகள் , மாணவர் , வறியவர் , தென்புலத்தார் , துணையற்றவர் , சிறுவர் , சான்றோர் ஆகிய இவர்களுக்கு நல்ல உணவைப் பகுத்துக் கொடுத்தவர் மறுமையில் மன்னராய் ஆட்சி செய்வர் என்று கூறுகிறார் ஆசிரியர் ( ஏலாதி-35 )
பொய் பேசாமல் , பிறர் சொல்லும் பொய்மைக்கு இணங்காமல் , புலால் உண்ணாமல் , எவரையும் வையாமல் , விருந்தினர் முகம் கோணாது முகம் மலர்ந்து பகுத்துக் கொடுத்து உண்பவர் மண்ணரசராகி மகிழ்ந்து புகழ் பெறுவர் என்று ஏலாதி கூறுகிறது .
( ஏலாதி-44 )
இதுபோல் 21 பாடல்களில் ஆதரவற்றோர்க்கு உணவு , உடை , கொடுத்து ஆதரிப்பவர் , தீயனவற்றைப் பேசாமலும் , செய்யாமலும் உள்ளவர்கள் , நோய் தீர்ப்போர் முதலியவர்கள் மண்ணாளும் அரசராவர் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதன் மூலம் பசித்துயரம் நீங்க உணவு கொடுத்து ஆதரிப்பவர் பெருவாழ்வு பெறுவர் என்ற கருத்தை ஏலாதி உறுதிப்படுத்துகிறது .
3.3.4 விண்ணுலகை அடையும் நெறி
கொலை செய்யாது , மற்றவரைத் துன்புறுத்தாது வாழ்பவர் , வஞ்சியாதவர் ஆகியோர் விண்ணவர்க்கும் மேலாவர் என்று உரைக்கிறது ஏலாதி ( ஏலாதி-2 )
இது விருந்தாய் வருகின்ற அனைவரிடத்தும் இன்சொல் கூறி அறுசுவை உணவு அளித்தல் விண்ணக வாழ்வை அளிக்கும் .
விண்ணுலக வாழ்வினை அடைவதற்கான வழிகள் கூறப்படுகின்றன ( ஏலாதி 7 , 20 , 32 , 33 , 34 , 36 , 40 ) இவற்றுள் பொய்யாமையும் கொலை புரியாமையும் , புலால் உண்ணாமையும் , உணவு கொடுத்தலும் ஆகிய அறங்களே விண்ணுலக வாழ்வினை அடையும் வழிகளாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன .
எடுத்துக்காட்டாக ,
காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப் படுவார் விரைந்து
( ஏலாதி-36 )
கை கால் இழந்தவர் , பார்வையற்றவர் , ஊமையர் , தமக்குத் துணையாக எவருமே இல்லாதவர் , நூலறிவு இல்லாதவர் முதலியவர்களுக்கு வயிறார உணவளித்தவர்கள் தேவர்களால் விரும்பிப் போற்றப்படுவார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து .
3.3.5 கற்றவர்க்கு ஒப்பாவான்
கல்வியின் சிறப்பை இலக்கியத்தில் பல நிலைகளில் எடுத்துரைப்பதைப் பார்த்திருப்பீர்கள் .
கற்றவர் என்று யாரைச் சொல்லலாம் என்று ஏலாதி கூறுவதைப் பாருங்கள் .
துன்பம் தீர்த்தல் , பிறரை இகழாமை , கீழ்மைப் பண்புடைய மக்களோடு பழகாமை , பசித்துன்பம் போக்குதல் , உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதல் , இனிய சொல் உடையவன் ஆதல் ஆகிய பண்புகளை உடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான் என்று காட்டுகிறது ஏலாதி .
( ஏலாதி-4 )
அந்தப் பாடலைப் பாருங்கள் .
இடர்தீர்த்தல் எள்ளாமை கீழ்இனம் சேராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறும்சொல் காணில் கல்வியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்
( ஏலாதி - 4 )
( இடர் = துன்பம் ; எள்ளாமை = இகழாமை ; படர் = துன்பம் ( பசித்துன்பம் ) பழிப்பின் நடை = பழிப்பதற்குரிய நடை ; காமுறும் சொல் = இன்சொல் ; விண்டவர் நூல் = மேலோர் கூறிய ஒழுக்க நூல்கள் )
கல்வியின் பயன் நல்லொழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் உடையவராகச் செய்தலேயாகும் .
ஒருவர் மேற்கூறிய பண்புகளைப் பெற்றிருப்பாரேயாயின் அவர் கல்வியின் பயனை அடைந்ததாகவே கருதலாம் .
ஆனால் , அத்தகையோர்க்குச் சான்றோர்களின் அறநூல்களும் தேவையற்றுப் போய்விடும் .
விருந்தோம்பல் பண்பு இல்லறத்திற்குரிய சிறந்த பண்பல்லவா ? அதுபற்றி ஏலாதி என்ன சொல்கிறது ?
விருந்தினரிடம் இன்சொல் கூறலும் , கலந்துறவாடலும் இருக்கை உதவலும் , அறுசுவை உணவு அளித்தலும் , கடுஞ்சொல் ஒழித்து மென்சொல் வழங்குதலும் ஒருவனிடம் அமைந்தால் அவனை வானோர் விருந்தினராய் ஏற்றுக்கொள்வராம் ( ஏலாதி-7 )
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
( குறள் : 86 )
என்ற குறட்பாக் கருத்தையொட்டி இது அமைந்துள்ளது .
இல்லறச் சிறப்பையும் புலனடக்கச் சிறப்பையும் எடுத்துரைக்கிறது .
அமைச்சனாகும் தகுதி யாருக்கு உண்டு , தூதர் பண்புகள் யாவை என்பன போன்ற அரசியல் கருத்துகளையும் குறிப்பிடுகிறது இந்நூல் .
உடல் உறுப்புகளின் தொழில் ஆறு வகைப்படும் அவை உறுப்பினை எடுத்தல் , முடக்கல் , நிமிர்த்தல் , நிற்றல் , கிடத்தல் , ஆடுதல் என்பன என்று விவரிக்கிறது ஒரு பாடல் ( ஏலாதி-69 )
உடல் உறுப்புகளின் அழகெல்லாம் அழகல்ல .
கல்வியழகே அழகு என்று காட்டுகிறது இன்னொரு பாடல் ( ஏலாதி-74 )
3.3.6 பல்லுயிர்க்கும் தாய்
அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான் ?
புலனடக்கம் , பிறர்க்கு ஈதல் , பொறுமை , பொய் சொல்லாமை , ஊன் உண்ணாமை , நற்குணமுடைமை முதலிய ஆறு பண்புகளை உடையவனாக இருப்பான் .
அவன் பல உயிர்கட்கும் தாய்போலும் அன்பினை உடையவன் என்று தாய்மையைச் சிறப்பிக்கும் பாடலைப் பாருங்கள் .
நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்
தாய்அன்னன் என்னத் தகும்
( ஏலாதி-6 )
( நிறை = மனக்கட்டுப்பாடு ; நீர்மை = நற்பண்பு ; வேயன்ன தோளாய் = மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்ணே !
( இது விளி ) )
3.3.7 காலனுக்கு அஞ்சுக
ஒருவருடைய வாழ்நாளின் இறுதிக்காலம் அறிந்து வருபவன் காலன் .
அவன் பகைவனின் வாளுக்கும் அஞ்சான் .
கண்ணோட்டம் இல்லாத வீரத்துக்கு அஞ்சான் , ஆண்மைத் தோற்றம் கண்டு அஞ்சான் , ஆட்சியைக் கண்டு அஞ்ச மாட்டான் , பொருளுக்கும் அஞ்சான் .
எதற்கும் அஞ்சாது வருவான் .
அவன் வருமுன்னே நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டு நெறி நிற்றல் வேண்டும் என்கிறார் கணிமேதையார் .
வாளஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான் ஆம்பொருள் தான்அஞ்சான் - நாளெஞ்சாக்
காலன் வரவொழிதல் காணில் வீடெய்திய
பாலின்நூல் எய்தப் படும்
( ஏலாதி - 22 )
( நாள் எஞ்சா = குறிப்பிட்ட நாள் தவறாத , வீடெய்திய பாலின் நூல் = வீடு பேற்றுக்கு வழி கூறும் நூல்கள் )
காலன் வராமல் தடுப்பது எப்படி ?
காலனுக்கு அஞ்சி அறம் ( தவம் ) செய்து வீடுபெற முயல வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடலைப் பார்ப்போமா ?
அழப்போகான் , அஞ்சான் அலறினால் கேளான்
எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்
என்னேஇக் காலன்ஈடு ஓரான் தவமுயலான்
கொன்னே இருத்தல் குறை
( ஏலாதி - 37 )
( அலறி = கதறி , எழ = எழுந்து உபசரித்தாலும் , ஈடற்றார் = வலிமையில்லாதவர் , ஓரான் = உணராமல் , கொன்னே = வீணாக , குறை = தவறு )
3.3.8 சுவர்க்கமும் வீடும்
சுவர்க்கமும் வீடுபேறும் பற்றி ஏலாதி இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது பாருங்கள் .
ஒருவன் கொடையினால் இம்மையில் இன்புற்று வாழலாம் .
தவத்தினால் விண்ணுலக வாழ்வு பெறலாம் .
மெய்யுணர்வினால் வீடு பேற்றை அடையலாம் என்கிறார் கணி மேதையார் .
விண்ணுலக வாழ்வினும் மேலான தன்மை உடையது வீடுபேறு என்னும் உண்மை இங்கு வலியுறுத்தப்படுவதைக் காணலாம் ( ஏலாதி-76 )
தவம் இரண்டு வகையினதாகக் கூறப்படுகிறது .
பயன் கருதிய தவத்தினால் விண்ணுலகம் எட்டும் . பயன்கருதாத , மெய்யுணர்வு பொருந்திய தவ ஒழுக்கத்தால் வீடுபேறு கிட்டும் .