எரு , ஏவு இரவு , நிறைவு , உறவு , விரிவு
ஓய்வு , பிறழ்வு , நிகழ்வு
வலு , ஏழு , உழு , துள்ளு
மேலே காட்டப்பட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின , இடையின மெய் எழுத்துகள் உகரத்துடன் சேர்ந்து வந்துள்ளன .
அவை குறைந்து ஒலிப்பதில்லை .
எனவே அவை குற்றியலுகரம் அல்ல .
ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் அது முற்றியலுகரம் எனப்படும் .
மேலே காட்டியுள்ள சொற்களில் உள்ள உகரங்கள் எல்லாம் முற்றியலுகரங்கள் ஆகும் .
ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ குற்றியலுகரமாகவோ இருக்கும் .
குற்றியலிகரம்
உகரம் சில இடங்களில் குறுகி , குற்றியலுகரம் ஆவது போலவே , இகரமும் சில இடங்களில் குறுகும் .
இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர் .
குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும் .
4.6.1 தனிமொழிக் குற்றியலிகரம்
மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும் .
இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது .
இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும் .
கேண்மியா
சென்மியா
இந்தச் சொற்களில் உள்ள ‘ மி ’ என்ற எழுத்தில் உள்ள இகரம் தனக்கு இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் .
4.6.2 புணர்மொழிக் குற்றியலிகரம்
புணர்மொழி என்பது இரண்டு சொற்கள் சேர்ந்து வருவதாகும் .
புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம் ஆகும் .
முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து , இரண்டாம் சொல் ‘ ய ’ என்ற எழுத்தில் தொடங்கும்போது , குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது , இகரமாகத் திரியும் .
அவ்வாறு திரிந்த இகரம் , உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும் .
நாடு ( ட் + உ ) + யாது = நாடியாது ( ட் + இ )
களிற்று ( ற் + உ ) + யானை = களிற்றியானை ( ற் + இ )
கொக்கு ( க் + உ ) + யாது = கொக்கியாது ( க் + இ )
குரங்கு ( க் + உ ) + யாது = குரங்கியாது ( க் + இ )
யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய
( நன்னூல் 93 )
( பொருள் : இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் முதல் சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இரண்டாம் சொல்லின் முதலில் யகரம் வரும்போது இகரமாக மாறும் .
இந்த இகரமும் அசைச் சொல்லாகிய மியா என்பதில் உள்ள இகரமும் குறைந்து ஒலிக்கும்)
குறுக்கங்கள்
குற்றியலுகரம் , குற்றியலிகரம் ஆகிய இரண்டிலும் உகரம் குறுகி ஒலிப்பதைப் பற்றிப் படித்தோம் .
அதைப்போல , ஐ , ஔ , ம் , ஆய்தம் ஆகியவையும் குறுகி ஒலிக்கும் .
இவற்றை ஐகாரக் குறுக்கும் , ஔகாரக் குறுக்கம் , மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று சொல்கிறோம் .
4.7.1 ஐகாரக்குறுக்கம்
ஐ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் .
ஐப்பசி , வைகல் - முதல்
கடைசி , இறைவன் - இடை
மழை , நகை , கடை - இறுதி
மேலே ஐ என்ற எழுத்து , சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம் .
ஐ என்பது நெடில் எழுத்து என்று முன்பே கூறப்பட்டது .
நெடில் எழுத்து என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும் .
தனியே இருக்கும் ஐகாரம் மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும் .
சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டு மாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும் .
இதை ஐகாரக் குறுக்கம் என்று கூறுவர் . மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள ஐகாரம் , இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும் .
ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை ,
நசைஇ , அசைஇ
இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்கு ஒரு மாத்திரையும் வரும் .
4.7.2 ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும் .
ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும் .
இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர் .
ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் .
ஒளவையார் , மௌவல் , வௌவால் .
ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை .
தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
( நன்னூல் 95 )
( பொருள் : ஐகார எழுத்து சொல்லில் வரும்போது , தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் ( சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் ) குறைந்தே ஒலிக்கும் .
ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும்)
4.7.3 மகரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று , குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும் .
மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும் .
• தனிமொழி
ணகர , னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து , குறைந்து ஒலிக்கும் .
மருண்ம் , உண்ம்
போன்ம் , சென்ம்
• புணர்மொழி
இரண்டு சொற்கள் சேரும்போது , முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து , இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும் .
தரும் வளவன்
வாழும் வகை
மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும் .
மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையே பெறும் .
ண , ன முன்னும் , வஃகான் மிசையும் மக்குறுகும் .
( நன்னூல் .
96 )
பொருள் :
வகரத்திற்கு முன்பும் ண் , ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று , குறைந்து ஒலிக்கும் .
4.7.4 ஆய்தக்குறுக்கம்
இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல் , ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல் , ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும் .
அல் + திணை = அஃறிணை
முள் + தீது = முஃடீது
இந்த ஆய்த எழுத்து , குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும் .
இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர் .
ல , ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
( நன்னூல் 97 )
( பொருள் : ல் , ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும் .
அந்த ஆய்த எழுத்து , குறைந்து ஒலிக்கும்)
• சார்பு எழுத்துகளுக்கு மாத்திரை
சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும் .
உயிரளபெடை மூன்று மாத்திரை
உயிர்மெய் நெடில் இரண்டு மாத்திரை
உயிர்மெய்க் குறில் ஒரு மாத்திரை
ஒற்றளபெடை ஒரு மாத்திரை ஐகாரக்குறுக்கம் , ஒரு மாத்திரை
ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை
குற்றியலுகரம் , குற்றியலிகரம் அரை மாத்திரை
ஆய்தம் அரை மாத்திரை
மகரக்குறுக்கம் , ஆய்தக்குறுக்கம் கால் மாத்திரை
மூன்று உயிரளபு ; இரண்டு ஆம் நெடில் ; ஒன்றே
குறிலோடு , ஐ , ஒளக் குறுக்கம் ஒற்றளபு ;
அரை ஒற்று .
இ , உக் குறுக்கம் , ஆய்தம் ;
கால் குறள் மஃகான் , ஆய்தம் , மாத்திரை .
( நன்னூல் .
99 )
( பொருள் : உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும் .
உயிர்மெய்க்குறில் , ஒற்றளபெடை , ஐகாரக் குறுக்கம் , ஒளகாரக் குறுக்கம் ஆகியவை ஒரு மாத்திரை பெறும் .
மெய் எழுத்து , குற்றியலுகரம் , குற்றியலிகரம் , ஆய்தம் ஆகியவை அரை மாத்திரை பெறும் .
மகரக்குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் கால் மாத்திரை பெறும்)
தொகுப்புரை
சார்பு எழுத்துகளின் பத்து வகையையும் இப்பாடம் விளக்குகிறது .
உயிர் எழுத்தும் , மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்து உருவாவதை இப்பாடத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் .
ஆய்த எழுத்தின் வடிவம் , மாத்திரை முதலியவற்றை இப்பாடம் தெரிவிக்கிறது .
அளபெடையின் வகைகளையும் அவை பற்றிய விளக்கங்களையும் குற்றியலுகரம் , குற்றியலிகரம் ஆகியவற்றையும் இப்பாடம் அறிவிக்கிறது .
ஐகாரக் குறுக்கம் , ஒளகாரக் குறுக்கம் , மகரக் குறுக்கம் , ஆய்தக் குறுக்கம் முதலியவை குறுகி வரும் தன்மையையும் அவற்றின் மாத்திரையையும் இப்பாடம் உணர்த்துகிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. குற்றியலுகரம் என்றால் என்ன ?
விடை
2. வன்றொடர் , மென்றொடர்க் குற்றியலுகரங்களை விளக்குக .
விடை
3. குற்றியலிகரம் என்றால் என்ன ?
விடை
4. ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன ?
விடை
5. மகரக் குறுக்கம் என்றால் என்ன ?
விடை
6. மகரக் குறுக்கம் எத்தனை வகைப்படும் ?
விடை
7. ஆய்தக் குறுக்கத்தை விளக்குக .
மொழி முதல் , மொழி இறுதி எழுத்துகள்
பாட முன்னுரை
தமிழ் மொழியில் எழுதும்போது சொற்களின் முதலில் இந்த எழுத்துகள் தான் வரும் என்ற வரையறை உண்டு .
ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும் .
ஆனால் தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை .
தனி மெய் எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாக வாரா .
ழு , வு , லு முதலிய உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை .
அதேபோல , சொல்லுக்கு இறுதியிலும் எல்லா எழுத்துகளும் வருவதில்லை .
சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வருவதற்கும் சில வரையறைகள் உள்ளன .
தமிழ் மொழியில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றியும் சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும் இந்தப் பாடத்தில் காணலாம் .
உயிர்மெய் எழுத்துகளின் நிலை
தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள் , சார்பு எழுத்துகள் என வகைப்படுத்தலாம் என முந்தைய பாடங்களில் பார்த்தோம் .
உயிர் எழுத்து , மெய் எழுத்து ஆகிய முதல் எழுத்துகளும் , சார்பு எழுத்துகளில் உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் தன்மையை இந்தப் பாடம் வரையறுத்துச் சொல்கிறது .
உயிர் எழுத்து , மெய் எழுத்து என்று முதல் எழுத்துகள் இரு வகைப்படும் . அவற்றில் உயிர் எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வரும் .
மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும் .
உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை .
மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை .
வல்லின எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை .
எடுத்துக்காட்டு
சொல்லின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து வருதல் .
அம்மா
எறும்பு
சொல்லுக்கு இறுதியில் மெய் எழுத்து வருதல் .
மணல்
முள்
கண்
உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் .
சொல்லுக்கு முதலில் உயிர்மெய் எழுத்து வருதல் .
பல்
கண்
மரம்
நிழல்
சொல்லுக்கு இறுதியில் உயிர்மெய் எழுத்து வருதல் .
எலி
அப்பா
உணவு
ஒற்றுமை
உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உண்டாவதே உயிர்மெய் எழுத்து என்பதை நீங்கள் அறிவீர்கள் .
மேலும் உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்துகள் முன்னும் உயிர் எழுத்துகள் பின்னும் அமைந்துள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள் .
சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளைப் பற்றிப் பார்க்கும்போது உயிர்மெய் எழுத்துகளை மெய் + உயிர் என்று தனித்தனியே பிரித்துவிட வேண்டும் .
அவ்வாறு பிரித்துவிட்டால் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் உயிர்எழுத்து அல்லது மெய் எழுத்து ஆகிய இரண்டு மட்டுமே வரும் என்பது தெளிவாகிவிடும் .
மரம் என்ற சொல்லின் முதல் எழுத்து ம. இதைப் பிரித்துப் பார்த்தால் ம் + அ என்று வரும் .
மரம் என்ற சொல் ம் என்ற மெய் எழுத்தில் தொடங்கிய சொல் என்று கொள்ள வேண்டும் .
கிளி என்ற சொல்லின் இறுதி எழுத்து ளி என்பதாகும் .
இதைப் பிரித்துப் பார்த்தால் ள் + இ என்று வரும் .
கிளி என்ற சொல் இ என்ற உயிர் எழுத்தில் முடிகின்ற சொல் என்று கொள்ள வேண்டும் .
இவ்வாறு பிரித்துப் பார்க்கும் போது எல்லா எழுத்துகளையும் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து என்ற பகுப்புக்குள் கொண்டு வந்து விடலாம் .
ஒருசொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் தொடங்குகிறது என்று கூறிவிட இயலும் .
அதே போல ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் முடிகிறது என்றும் கூறிவிட இயலும் .
சொல் என்பது ஒரு பொருளைக் குறிப்பது .
பல எழுத்துகளின் சேர்க்கை ஒரு சொல் ஆகிறது .
ஒரே எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படும் .
அப்போது அந்த ஒற்றை எழுத்தும் ஒருசொல் ஆகிறது .
நெடில் எழுத்துகள் மட்டுமே தனித்து ஒரு சொல்லாக வரும் .
தீ , பூ , வா , போ
இவற்றை ஓர் எழுத்து ஒரு மொழி என்று கூறுவர் .
இந்தச் சொற்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்துகள் வரும் ஓர் எழுத்துச் சொற்கள் .
இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம் .
தீ = த் + ஈ
பூ = ப் + ஊ
வா = வ் + ஆ
போ = ப் + ஓ
மேலே பிரித்துக் காட்டியுள்ளதைக் கவனியுங்கள் . இவற்றில் மெய் எழுத்து முன்னும் , உயிர் எழுத்து பின்னும் அமைந்துள்ளன .