3.3.9 மும்மருந்தும் கூறும் முடிவு
திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி ஆகிய மும்மருந்துகளின் பெயர்களால் அமைந்த நூல்களில் காணும் உண்மைகள் என்னவென்று பார்ப்போமா ?
பணிவுடைமை முதலிய நல்லொழுக்கம் மேற்கொள்ளுதல் , கொலை புரியாமை , புலால் உண்ணாமை , அருளுடைமை , இனிய முகத்துடன் வேண்டுவார்க்கு உணவு கொடுத்தல் ஆகிய இவையே இம்மைக்கும் மறுமைக்கும் பெருவாழ்வு தருவன .
தொகுப்புரை
திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி ஆகிய மூன்று நூல்களைப் பற்றி இப்பாடத்தில் பார்த்தோம் .
கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம் , சுக்கு , மிளகு , திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்துப் பொருள்களைக் குறிக்கிறது .
இவை உடல் நோயைத் தீர்க்க வல்லதைப் போல் திரிகடுக நூலில் கூறப்படும் கருத்துகளும் மக்களுடைய உள நோயைத் தீர்ப்பதாகும் .
அறத்தின் உயர்வு , இயற்கையும் அறமும் , அறமும் இன்ப துன்பமும் என்று பல கோணங்களில் நல்லாதனார் திரிகடுகம் வாயிலாக அறக்கருத்துகளை எடுத்துரைக்கின்றார் .
அடிப்படைச் சமுதாய நிறுவனமாகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சிந்தனைகள் நல்ல சமுதாயம் உருவாக்கும் வழிகளாக உள்ளன .
இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் என்ற மருந்துப் பெயர் கொண்ட அறநூல் விளக்கப்படுகிறது .
ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்ப்பது போல் உளநோயைப் போக்கும் ஐந்து கருத்துகளைக் காரியாசான் ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார் .
அறச் சிறப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன .
அறநெறிகளே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதைச் சிறுபஞ்சமூலத்தில் வலியுறுத்துகிறார் .
இல்லறச் சிறப்பும் , வாழ்வியல் உண்மைகளும் விரித்துரைக்கப் படுகின்றன .
வாழ்வியல் உண்மைகளை விளக்கச் செடி கொடிகள் , மரங்கள் , பறவைகள் இவற்றின் இயல்புகளை எடுத்துக் காட்டுகிறார் .
எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று என்பதை எடுத்துக் கூறி , உலகில் எப்பொருளும் இகழ்தற்குரியன அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் .
அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை எடுத்துரைப்பதே சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் நோக்கமாக அமைகிறது .
மூன்றாவது பகுதியில் ஏலாதி நூல் பற்றிய விளக்கம் இடம் பெறுகிறது .
இந்நூலில் கணிமேதையார் பொதுவாக அறங்கள் செய்வது நன்று என்று மட்டும் சொல்லாமல் இத்தகைய அறங்களைச் செய்பவர்கள் மறுபிறவியில் மன்னராய்ப் பிறந்து ஆட்சி செய்வர் என்று 21 பாடல்களில் குறிப்பிடுகிறார் .
விண்ணவர்க்கும் மேலானவர் யார் என்பது எட்டுப்பாடல்களில் சொல்லப்படுகிறது .
காலனுக்கு அஞ்சி அறம் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது .
அறநெறிகள் நன்னெறிகள் முதலியவற்றைப் பின்பற்றி வாழ்வில் உய்ய வேண்டும் என்பதே ஏலாதி நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம் .
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார் ?
[ விடை ]
2. பஞ்சமூலம் என்ற சொற்றொடர் குறிக்கும் ஐவகை வேர்கள் யாவை ?
[ விடை ]
3. நண்டுக்கு எமன் யார் ?
[ விடை ]
4. இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச் சொல்கிறார் ?
[ விடை ]
5. ஏலாதி நூலின் ஆசிரியர் யார் ?
[ விடை ]
6. வாளஞ்சான் , வன்கண்மை அஞ்சான் , வனப்பஞ்சான் யார் ?
[ விடை ]
7. அறங்களைச் செய்தால் மறுபிறவியில் மன்னராய்ப் பிறக்கலாம் என்று எத்தனைப் பாடல்களில் சொல்லப்படுகிறது ?
[ விடை ]
8. ஏலாதி நூல் எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?
இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்
பாட முன்னுரை
இடைக்கால இலக்கியங்களில் அறநூல்கள்-1 வரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்கள் அடங்கும் .
அவற்றுள் நான்காவது பாடமாக இன்னா நாற்பது , இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களையும் பார்க்கப் போகிறோம் .
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் நானாற்பது என்று வரும் தொடர் , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது என்ற நான்கு நூல்களையும் குறிக்கும் .
இவை ஒவ்வொன்றும் நாற்பது செய்யுட்களை உடையன .
ஆதலால் இவை ‘ நானாற்பது ’ ( நால் நாற்பது ) என்ற தொடரால் வழங்கப்பட்டன .
இன்னா நாற்பது
இன்னா நாற்பது , துன்பம் தருவனவற்றைத் தொகுத்துத் தருகிறது .
ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்துள்ளன .
ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘ இன்னா ’என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘ இன்னா நாற்பது ’ என்ற பெயரை இந்நூல் பெற்றுள்ளது . 4.1.1 ஆசிரியர்
இன்னா நாற்பது நூலை இயற்றியவர் கபிலர் .
இவர் சங்ககாலத்துக் கபிலர் அல்லர் ; பிற்காலத்தவர் .
இவர் சைவ , வைணவ நெறிகளைப் பொதுவாக நோக்கியவர் .
உலகியலில் ‘ இன்னாதன ’ என்று தோன்றியவற்றை எல்லாம் நான்கு நான்காக ஒவ்வொரு பாடலிலும் அழகாகக் கூறியுள்ளார் .
4.1.2 நூல் அமைப்பும் , பாடுபொருளும்
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்கள் உள்ளன .
பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன .
ஒவ்வொரு பாடலிலும் நான்கு நீதிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன .
இது ஒரு சிறந்த நீதி நூலாக விளங்குவதால் , பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .
மக்கள் யாவரும் விரும்புவது இன்பமே , என்றாலும் இன்ப , துன்பங்களின் காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ப நடப்பதில்லை .
இது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் .
இன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வதை விடத் துன்பத்தின் காரணத்தை , அறிந்து கொண்டு அதனை நீக்கி வாழ்வது அவசியம் என்பதால் இன்னா நாற்பது முதலில் படைக்கப்பட்டு , அதன் பின்னரே இனியவை நாற்பது படைக்கப்பட்டது எனக் கொள்ளலாம் .
இந்நூலில் நல் வாழ்க்கைக்குரிய நீதிகள் கூறப்படுகின்றன .
தனி மனிதனின் கடமைகள் , உரிமைகள் , சமுதாயத்தில் அவன் சந்திக்கின்ற பலவகையான சூழல்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஏற்படும் துன்பங்களைத் தொகுத்துக் கூறுகின்றார் ஆசிரியர் .
குடும்பம் என்பது கணவன் மனைவி உறவு , அவர்கள் நடத்தும் இல்லறம் , பெற்றோர் , பிள்ளைகள் உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது .
குடும்ப உறுப்பினர்களுக்குத் துன்பம் தருவன எவையெவை என்று சொல்கிறது இன்னா நாற்பது .
அரசன் , குடிமக்கள் , உழவர் , துறவிகள் என்று அவரவர் நிலையில் துன்பம் தருவன எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது .
கபிலரின் இன்னா நாற்பது துன்பங்களின் மூலங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது .
கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களிலும் 164 இன்னாதவைகளைக் கபிலர் தொகுத்துக் கூறுகிறார் .
தனி மனிதப் பண்புகள் செம்மைப்பட்டால் , சமுதாயம் சிறந்து விளங்கும் என்ற நோக்கில் அமைந்த அறக்கருத்துகளே இந்நூல் முழுவதும் காணக்கிடக்கின்றன .
ஒழுக்க முறைகள்
சில ஒழுக்க முறைகளும் பழக்க வழக்கங்களும் இந்நூலிருந்து நமக்குக் கிடைக்கின்றன .
கொடுங்கோல் மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்வதை மக்கள் பெரும் துன்பமாகக் கருதினர் .
கொடுங்கோல் மறமன்னர் கீழ் வாழ்தல் இன்னா
( இன்னா நாற்பது - 3 )
( மற மன்னர் = அறநெறி தவறிய )
என்று கபிலர் இதனைச் சுட்டிக் காட்டுகிறார் .
வீரம் இல்லாத மன்னன் போர்க்களம் செல்லுதல் கூடாது என்பது அக்கால மக்கள் கொள்கை .
அக்காலத்தில் மன்னனுக்கு யானைப்படை முதன்மையாகக் கருதப்பட்டது .
மன்னன் உலா வரும்போது யானைக்கு மணி கட்டியிருத்தல் வேண்டும் .
மணியில்லாத யானையின் மீது சென்றால் அரசனுக்குத் தீங்கு நேரும் என்று அவர்கள் அஞ்சினர் .
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தல் இன்னா
( இன் .
நாற். - 13 )
( குஞ்சரம் = யானை )
அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வழக்கம் வெறுத்து ஒதுக்கப்பட்டது .
குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா
( இன் .
நாற். - 19 )
என்று கல்லாமையின் இழிவு பேசப்படுகிறது .
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா
( இன் .
நாற். - 26 )
( யாத்த = நெருங்கிப் பிணைந்த ; தொடர் = தொடர்பு )
என்று , பெரியோர் கேண்மையை விடல் துன்பமாகும் என்று எச்சரிக்கிறது .
தனி மனித அறமே சமுதாய அறத்திற்கு அடிப்படை , அறத்தின் வழிச் செல்லாத நிலையில் தனிமனிதனுக்குப் பல துன்பங்கள் ஏற்படுகின்றன .
கற்றவன் , கல்லாதவன் , செல்வன் , வறுமையுற்றார் என்ற போதும் துன்பங்கள் நீங்குவதில்லை .
இந்தச் சமுதாயத்தில் துன்பம் தருவன எவை என்பதை இன்னா நாற்பது தொகுத்துக் கூறுவது பற்றி இனி விரிவாகப் பார்ப்போமா ?
4.2.1 ஈகையும் இரத்தலும் மனத்தில் அருளும் கையில் பொருளும் உடையவரே வறியவர்க்குப் பொருளைக் கொடுக்க இயலும் .
இவை இல்லாதவர் வறியவர்க்குப் பொருள் கொடுத்தல் இயலாது .
எனவே இச்செயல் அவர்க்குத் துன்பத்தையே தரும் என்கிறது இன்னா நாற்பது .
இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு
( இன் .
நாற். - 10 )
( வண்மை = கொடை , புரிவு = செய்தல் )
தம்முடைய செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக் குணம் இல்லாதவர்கள் அழகு பயனற்றது .
வண்மை யிலாளர் வனப் பின்னா
( இன் .
நாற். - 9 )
‘ இரக்கம் இல்லாதவரிடத்தில் இரந்து நிற்றல் துன்பம் தரும் ’ ( இன் .
நாற். - 10 ) என்ற கருத்தை ‘ அருளில்லார் தங்கள் செலவு இன்னா ’ எனச் சொல்கிறது இந்நூல் .
‘ கொடுத்த அளவினால் மனம் நிறைந்து மகிழாதவர்க்குக் கொடுத்தல் துன்பம் ’ ( இன் .
நாற். - 21 ) செல்வத்தைப் பெற்றவர் அச்செல்வத்தைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்தல் வேண்டும் .
பொருளை அனுபவிக்காமல் வீணாகச் சேர்த்து வைப்பவர்கள் அப்பொருளால் அடைய வேண்டிய பயனை அடைய மாட்டார்கள் .
எனவே அனுபவியாமல் சேர்த்து வைக்கின்ற பெருஞ்செல்வத்தின் தொகுதி இன்பத்தைத் தராமல் துன்பத்தையே தரும் .
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா
( இன் .
நாற். - 16 )
என்கிறார் கபிலர் .
4.2.2 புலனடக்கமும் துன்பமும்
உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தன்னுடைய பெருமையும் புகழும் கெடாதபடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் .
இதற்குப் புலனடக்கம் அவசியம் என்பதை இன்னா நாற்பது எடுத்துரைக்கிறது .
புலனடக்கம் இல்லையென்றால் துன்பம் வரும் என்பதை ,
தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா
( இன் .
நாற். - 32 )
( நன்கு = மிகவும் )
பிறன் மனையாளை விரும்பாத பேராண்மை ஒருவனுக்கு வேண்டும் .
மாறாக , பிறன் மனைவியை விரும்புதல் துன்பம் தருவதாகும் .
பிறன்மனையாள் பின்நோக்கும் பேதைமை இன்னா
( இன் .
நாற் .
-38 )
( பேதைமை = அறிவின்மை )
4.2.3 வீரமும் வலிமையும்
வீரமும் வலிமையும் ஒருவனுக்குத் தேவைதான் .
அவை மனிதனுக்குப் பெருமை தருவனவே .
அவையும் எப்போது துன்பமாகும் என்று பாருங்கள் .
வீரர்கள் பலரை உடைய ஒருவன் பகைவரை எதிர்க்கத் தானே மார்பைத் தட்டுதல் நன்மையைத் தராது .
தன்னை வியத்தல் என்றுமே துன்பமும் தருவது ஆகும் .
எந்தச் செயலை மேற்கொள்வதாக இருந்தாலும் எண்ணித் துணிய வேண்டும் .
இல்லையெனில் துன்பமே நேரும் .
சான்றாக நீரில் பாய்ந்து நீந்த விரும்புகின்றவன் , அந்நீர் நிலையின் ஆழம் , அதன் அடியில் இருக்கும் பாறை , மறைந்திருக்கும் மரக்கட்டைகள் ஆகியவற்றை அறிந்து பாய்ந்து நீந்த வேண்டும் .
அதனை அறியாமல் பாய்ந்து நீந்தினால் துன்பம் நிச்சயம் ( இன் .
நாற். - 29 ) .
உயர்ந்த மரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பம் பயக்கும் .
நெடுமரம் நீள்கோட்டு உயர் பாய்தல் இன்னா
( இன் . நாற் .
-30 )
( நீள்கோடு = நீண்ட கிளை )
இக்கருத்தையே ,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்
( குறள் : 476 )
என்று குறட்பா கூறும் .
இது போல உயிருக்கு ஊறு விளைக்கவல்ல மூன்று வேறு செய்திகளையும் இப்பாடல் கூறும் .
அவை
1. மதம் பிடித்த யானைக்கு எதிரே செல்லுதல்
2. பாம்பு மறைந்து வாழும் வீட்டில் குடியிருத்தல்
3. கொடிய புலிகள் உலவும் வழியில் பயணம் செய்தல்
ஆகியவை , முள்ளுடைய காட்டில் நடத்தல் துன்பம் .
வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கைக் கொலை செய்வது கொடியது ( இன் .
நாற். - 33 ) . வீரமும் வலிமையும் ஒருவர்க்கு நன்மை பயக்கவல்லன .
ஆனால் அதுவே தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் விளைவது துன்பமே என்கிறார் கபிலர் .
4.2.4 கல்வியும் வறுமையும்
கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு .
கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது .
கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா
( இன் .
நாற். - 15 )
என்கிறது ஒரு பாடல் .
நற்குடியில் பிறந்தவன் கல்லாதிருத்தல் துன்பம் .
கல்வியற்றவர் சொல்லும் சொல்லின் பொருள் இன்னாதது .
அவன் கற்றவர் நடுவே ஒன்றைச் சொல்லுதல் துன்பமே தரும் .
( இன் .
நாற் .
-28 )
இனி வறுமை நிலையால் வரும் துன்பம் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பாருங்கள் .
வறியவன் அழகு துன்பமே தரும் .
வளமை இலாளர் வனப்பு இன்னா
( இன் .
நாற். - 27 )
( வனப்பு = அழகு )
பெரிய நகரத்தில் வாழ விரும்புபவன் அதற்கு ஏற்ற செல்வமும் உடையவனாய் இருத்தல் வேண்டும் .
செலவுக்குத் தகுந்த பொருள் கையில் இல்லாதவனாய் இருத்தல் துன்பம் தரும் .
நெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னா
( இன் .
நாற். - 36 )
( கைத்து = கையகத்து ; இன்மை = இல்லாமை )
செல்வம் இல்லாதவர் தம் வாய்ச் சொல் பயனற்றுப் போகும் .
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
( குறள் : 1046 )
என்று தமிழ் மறை கூறுகிறது அல்லவா ?
இதே கருத்தை இன்னா நாற்பதும் கூறுகிறது ?
வறியவன் கூறுவதிலுள்ள நயமும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது .
இல்லார்வாய்ச் சொல்லின் நயம் இன்னா ( இன் .