92

( இனி .

நாற் .

-14 )

என்று கூறியுள்ளார் .

• இனியவை நாற்பதும் இன்னா நாற்பதும்

இன்னா நாற்பதின் சில கருத்துகளும் சொற்றொடர்களும் அப்படியே இந்நூலில் அமைந்திருப்பதைக் காணலாம் .

பொருள்உணர்வா ரில்வழிப் பாட்டுரைத்தல் இன்னா

( இன் .

நாற் .

-10 )

என்ற கருத்தை இனியவை நாற்பது ,

கற்றார்முன் கல்வி யுரைத்தல் மிக வினிதே

( இனி .

நாற் .

-16 )

என்று குறிப்பிடுகிறது .

இன்னா நாற்பதும் , இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்வதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .

ஒழுக்க நெறிகள்

இனியவை நாற்பதில் பல ஒழுக்க நெறிகள் கூறப்பட்டுள்ளன .

பிறர் மனைவியை விரும்புதலாகிய தீய செயலை எல்லா அறநூல்களும் கண்டிக்கின்றன .

திருக்குறளில் ‘ பிறன்இல் விழையாமை ’ என்று ஓர் அதிகாரம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் .

பிறன் மனைவியை நஞ்சு என்று கருதுவதே இனிமையானது என்று இனியவை நாற்பது கூறுகிறது .

அதைக் கீழ்க்காணும் பாடல் அடிகள் தெரிவிக்கின்றன .

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது

( இனி .

நாற் .

-37 )

( பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள் , தளிரியலார் = தளிர் போன்ற மென்மை உடைய பிற பெண்டிர் , விடம் = நஞ்சு )

இன்னா நாற்பதின் நேர் எதிராக இனியவை நாற்பது தோன்றினாலும் நீதிகளைச் சுவைபடச் சொல்வதைப் படித்து ரசிக்கலாம் .

4.5.1 கல்வி இனிமை தரும்

கல்வி சிறந்தது .

அது எப்போது இனிதாகும் தெரியுமா ?

கற்ற கல்வி நல்ல அவையின்கண் கைகொடுக்கிறதல்லவா ?

அப்போது அது இனிதாகிறது .

கற்றலின் அருமை பெருமை உணர்ந்து , பிச்சை எடுத்தாவது கற்றல் இனிது .

“ பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே ” ( இனி .

நாற் .

-1 )

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்று வெற்றி வேற்கையும் சொல்லுகிறது .

கற்றார் முன் கல்வி உரைத்தல் இனிது .

அறிவால் மேம்பட்டவரைச் சேர்தல் இனிது .

அதுபோல் கல்லாதவரிடமிருந்து நீங்குதலும் இனிதாகும் .

கையில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும் கல்லாதவரை விட்டு நீங்குதல் இனிது என்கிறார் பூதஞ்சேந்தனார் .

கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே

( இனி .

நாற் . -25 )

( தீர்வு = விட்டுப்பிரிதல் )

கற்றவரிடம் சேர்ந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் .

கற்றவர் பொருள் உணர்ந்து சொல்கின்ற சொல்லை ஏற்றுச் செய்யும் செயலின் பயன் இனிதாகும் ( இனி .

நாற் .

-32 )

4.5.2 இனிய அறச் செயல்கள்

இயன்றவரை அறம் செய்தல் இனிது .

நம்மால் முடிந்தவரை செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் அறச் செயலைச் செய்யவேண்டும் .

ஆற்றும் துணையால் அறம்செய்கை முன் இனிதே

( இனி .

நாற் .

-6 )

வள்ளுவரும் ,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும் வாயெல்லாம் செயல்

( குறள் : 33 )

என்று இயன்றவரை அறம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார் .

அறச்செயல் செய்து பாவங்களைச் செய்யாமை இனியது , சோலை வளர்த்தல் , குளம் வெட்டுதல் போன்றவை இனியன .

இக்கருத்தை ,

காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே

( இனி .

நாற் .

-23 )

( கா = சோலை , தொட்டல் = தோண்டுதல் )

என்று குறிப்பிடுகிறது இனியவை நாற்பது .

இந்தக் கருத்தையே ,

காவோடு அறக்குளம் தொட்டானும்

செல்வர் எனப்படு வார்

( திரிகடுகம்-70 )

என்று திரிகடுகமும்

காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

( பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் -36 )

என்று பெரியபுராணமும் சிறப்பித்துப் பேசுகின்றன .

ஒருவர் செய்த நன்றியின் பயனைக்கருதி வாழ்வது இனிது .

நியாய சபையின் கண் ஓரஞ் சொல்லாத மாண்பு இனிது ( இனி .

நாற். - 30 ) .

( ஓரம் = ஒரு பக்கம் சாய்தல் )

முன்பு தன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளை , அறிவார் யாருமில்லை என்று அபகரிக்கக் கூடாது .

அடைக்கலப் பொருளைக் காத்தலிலும் இனியது வேறொன்றில்லை ( இனி .

நாற் .

-30 )

• ஈகை இனியது

பொருள் உடையவரிடம் ஈகைப்பண்பு இருக்க வேண்டும் .

அதுவே இனியதாம் .

எள் அளவாயினும் பிறரிடம் இரத்தல் கூடாது .

பிறர்க்குக் கொடுத்தலே இன்பம் தரும் .

ஒரு பொருளை விரும்பித் தன்னிடம் வந்தவர் விருப்பத்தைப் புறக்கணிக்காத மாண்பு இனியது .

எந்த நிலையிலும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒளிக்காத அன்பு இனியது .

எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்குஇனியது இல்

( இனி .

நாற் .

-26 )

( திறம் = வகை , இயைவ = முடிந்தவற்றை , கரவாத = ஒளிக்காத , பற்று = அன்பு )

இந்த அடிப்படையில் ஒரு கைப்பிடி அளவு அரிசியாவது நாள்தோறும் கொடுத்து வாழுங்கள் .

அது உண்மையான இன்பம் ஆகும் என்று நாலடியார் கூறுகிறது .

இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவகொடுத் துண்மின்

( நாலடியார் -64 )

4.5.3 நட்பில் இனிமை

நல்லவர்களுடன் கொள்ளும் நட்பு இன்பம் தருவதாகும் .

ஆகவே , எங்கே செல்ல நேர்ந்தாலும் அங்கெல்லாம் நல்லவர்களைத் தேடிச் சென்று நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

‘ தான் செல்லும் திசைகளில் எல்லாம் தக்காரை நட்புக் கொள்ளுதல் இனிது ’ ( இனி .

நாற். - 3 ) நட்புடையவர்க்கு இனியன செய்தல் இனிது .

எந்த நிலையிலும் தன் பகைவரோடு சேராதவரை நட்பாக்கிக் கொள்ளுதல் இனிது .

( இனி .

நாற். - 17 ) .

இனிய நட்பைப் பாதுகாக்கவும் ஒரு வழி சொல்கிறது இனியவை நாற்பது .

நட்புக் கொண்டவரைப் புறம் கூறாதவராய் வாழ்வது மிக இனியது ( இனி .

நாற். - 19 ) . வலிய வந்து தாமாகவே நட்புக் கொள்ளினும் கயவருடைய நட்பை நீக்குதல் இனிது என்று நீக்க வேண்டிய நட்பு எது என்று கூறி நம்மை எச்சரிக்கை செய்கிறது ( இனி .

நாற் .

-20 )

• பிற இனிய பண்புகள்

அன்றாட வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கிறோம் .

பழகுவதற்கு இனியர் என்று சிலரைத்தான் சொல்கிறோம் .

இனியவராய் இருக்க என்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் ?

பூதஞ்சேந்தனார் சொல்வதைக் கேட்போம் .

குற்றம் இல்லாமல் யாவர்க்கும் இரங்கி அன்புடையவராய் வாழ்தல் இனிது .

தப்பு வழியில் சென்று விடாத மதி நுட்பம் இனிது ( இனி .

நாற் .

-11 )

உயிர் போவதாயினும் உண்ணத்தகாதவர் கையில் உணவு உண்ணாமை பெருமை உடையது .

சத்தியத்தைப் பாதுகாத்துப் பணிந்து ஒழுகல் இனிது .

ஒருவர்க்குச் சார்பாகாத மனஎழுச்சி இனிது என்று நடுவு நிலைமைப் பண்பு , சத்தியம் போற்றல் ஆகிய பண்புகளை இனியன என்கிறார் பூதஞ்சேந்தனார் ( இனி .

நாற் .

-11,19,22 )

செல்வம் அழிந்தாலும் பாவச் சொற்களைச் சொல்லாத தெளிவு இனிது .

இவர் வறியாரென்று இகழாமை இனிது .

இயன்றவரை பிறர் மீது குற்றம் கூறாமை இனிது .

பொறாமை கொள்ளாமை மிக இனிது .

சினம் நீக்கி வாழ்தல் இனிது .

மானம் உடையவர் மதிப்பு இனியது என்று வாழ்வியல் மதிப்புகளைப் பட்டியலிடுகிறது ( இனி .

நாற். - 28,29,30 ) .

உறவு முறைகள்

இல்லறத்தில் ஈடுபடும் கணவன் மனைவி , பெற்றோர் , அரசன் , குடிமக்கள் ஆகியோருக்கு எவை எவை இனிமையானவை என்பனவற்றை இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது .

4.6.1 இல்லறம்

கணவன் , மனைவி இருவரும் உளமொத்து வாழ்வதே சிறந்த இல்லறமாகும் .

அவ்வாறு ஒன்றுபட்ட மணவாழ்க்கை அமையுமாயின் , அம் மண வாழ்க்கை இனியது .

அன்பில்லாத மனைவி அமைந்தால் அவளை விலக்கி விடுதல் இனிது . வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ்தல் இனிது .

இதனை ,

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே

( இனி .

நாற் .

-10 )

( கடம் = கடன் )

என்கிறது இனியவை நாற்பது .

• கடமைகள்

மக்கள் தமக்குரிய கடமைகளினின்று நீங்காமல் வாழ வேண்டும் .

விதைக்காக வைத்த தானியத்தை உண்ணக் கூடாது .

விதை இல்லையேல் மேல் விளைவும் இல்லை .

மேலும் , விதை பயிராக விளையும் போது பலரும் உண்ணுவதற்கு உதவுகிறது .

அதை ஒருவர் உண்பது என்பது பலர் உணவைப் பறிக்கும் செயல் போலாகும் .

( இனி .

நாற் .

-40 ) பால் மிகக் கறக்கும் ஆவும் கன்றும் உடையவன் படைக்கும் விருந்து மிக இனிது ( இனி .

நாற். - 38 ) என்றும் , மானம் அழிந்த பின் வாழாமை மிகவும் இனியது ; தன் நிலை தாழாமல் அடங்கி வாழ்வது இனிமையானது ( இனி .

நாற். - 13 ) என்றும் , ஊர் ஊராய்ச் சென்று இரந்து வாழாமை இனிது ( இனி .

நாற். - 11 ) என்றும் இல்லறத்தார் கடமைகளை எடுத்துரைக்கின்றார் பூதஞ்சேந்தனார் .

4.6.2 இனிக்கும் உறவுகள்

குடும்ப உறவுகளிலும் நட்பு நிலையிலும் இனிக்கும் உறவுகள் இருப்பின் வாழ்க்கை இனியதாகும் அல்லவா !

குடும்பத்தில் பிள்ளைகள் , பெற்றோர் ஏவலை மறுக்காமல் செய்யும் ஆற்றல் பெற்றவராய் இருப்பின் அது வாழ்வில் இனிமை சேர்க்கும் அல்லவா ?

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே

( இனி .

நாற் -3 )

( ஏவது = கட்டளையிடுவது , மாறா = மீறாத , இளங்கிளைமை = மக்கள் )

மிக்க சிறப்பினை உடைய தாய் தந்தையரைப் பணிந்து அவர் பாதங்களில் வீழ்ந்து எழுதல் இனிது ( இனி .

நாற். - 18 ) . பெற்றோரைப் பணிந்து பாதங்களில் வீழ்தல் இனிது என்று சொல்லும் பூதஞ்சேந்தனார் .

தந்தையே ஆனாலும் அவன் தீநெறிக்கண் சென்றால் அவன் சொல்வழி நில்லாமை இனிது என்கிறார் .

தந்தையே ஆயினும் தான்அடங்கான் ஆகுமேல்

கொண்டுஅடையான் ஆகல் இனிது

( இனி .

நாற் .

-7 )

பழிபாவத்துக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு விலகுவது இனிது .

நிலையில்லாத அறிவினருடன் சேராது நீங்குதல் இனிது ( இனி .

நாற் .

-21 )

4.6.3 அரசனுக்கு இனியது

சமுதாயத்தில் அரசன் முதலாகிய அனைவரும் தமக்குரிய உரிமையுடன் வாழ்தல் இனிது .

அரசன் , குடிமக்கள் அனைவர்க்கும் இனியன எவை எனச் சொல்கிறார் பூதஞ்சேந்தனார் .

அரசன் போர்க்களத்தில் யானைப்போர் காணுதல் இனியது ( இனி .

நாற். - 4 ) . அரசனுக்கு , ஒற்றரை ஒற்றரால் வேவு பார்த்து அவற்றின் பயனை ஆராய்தல் நன்மை பயக்கும் .

குற்றத்தை ஆராய்ந்து முறையாகத் தண்டனை கொடுத்தல் இனியது ( இனி .

நாற். - 35 ) . செங்கோலனாக அரசன் ஆளுதல் வேண்டும் .

ஒருவரையே நம்பியிராமல் எல்லாரிடத்தும் தானும் சென்று அறிதல் வேண்டும் .

இவையெல்லாம் அரசன் செய்தல் இனிது ( இனி .

நாற் . 35 )