( பேணில் ஈகை = விருப்பமில்லாத ஈகை ; துவ்வாது = நீங்காது )
என்ற பாடல் உணர்த்துகிறது .
ஒருவர்தாம் உண்ணும்பொழுது இரப்பவர்க்கு இயன்ற அளவு கொடுத்துவிட்டு உண்ண வேண்டும் .
தான் ஒருவனே உண்டு வாழும் வாழ்வு சிறப்புடையது அன்று .
எவனொருவன் தன் ஒருவனுக்காகச் சமைத்துக் கொள்கிறானோ அவன் பாவத்தை உண்கிறான் என்று குறிப்பிடுகிறது பகவத் கீதை .
எனவே ஒருவன் பிறர்க்கு ஈயாது தான் மட்டும் உண்டு வாழ்தல் கூடாதது ஆகும் .
இதனை முதுமொழிக்காஞ்சி ,
தான்ஓர் இன்புறல் தனிமையில் துவ்வாது
( துவ்வாப் பத்து : 10 )
என்று குறிப்பிடுகிறது .
ஆசாரக்கோவையும் " தமக்கென்று உலை ஏற்றார் " ( 39 ) என்று கூறுவதைக் காணலாம் .
5.7.2 மாண்பில்லா மனைவி
எதிர்மறையாகக் கூறும் உண்மைகள் ‘ அல்ல பத்து ’ என்ற தலைப்பில் வரும் முதுமொழிகளாகும் .
இல்லறத்தில் மனையாள் பங்கைச் சிறப்பிற்குரியதாக இலக்கியங்கள் பேசுகின்றன .
மனையாள் மாண்புடன் இருந்தால் மனைவாழ்க்கை சிறப்படையும் .
இல்லையெனில் இல்லறம் நல்லறமாகாது என்பது
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று
( அல்ல பத்து : 2 )
( மாணாதது = சிறவாதது )
என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது .
5.7.3 அறமில்லா ஈகை
ஈகையானது அறவழியில் இருக்கவேண்டும் .
வறியார்க்கு ஒன்று ஈதல் , அறச்சாலைகட்குப் பயன்படுத்துதல் , அறிவுமுறைகட்கு வழங்கல் முதலிய வகைகளில் அமைய வேண்டும் .
பசுவைக் கொன்று செருப்பைத் தானம் செய்வது போல அமையக்கூடாது .
இதனை முதுமொழிக்காஞ்சி எப்படிச் சொல்கிறது பாருங்கள் !
அறத்தாற்றின் ஈயாதது ஈகை யன்று
( அல்ல பத்து : 8 )
ஈகையும் அறவழியில் நிற்கும் தகுதியுடைவர்க்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது .
ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் விட்டால் ஒழுகிவிடும் அல்லவா ?
இளமைக்காலம் தொட்டு முதுமைக்காலம் வரை ஒருவன் அறம் செய்து பயன் அடையவேண்டும் .
அவ்வாறு அறம் செய்யாமல் அடைந்த மூப்பு சிறப்புடையதாகாது என்று வாழும் வாழ்க்கைக்குப் பொருளாயிருப்பது மற்றவர்க்கு உதவும் அறஉணர்வே என்பதை முதுமொழிக்காஞ்சி ,
மறுபிறப் பறியாதது மூப்பு அன்று
( அல்ல பத்து : 10 )
என்று சொல்கிறது .
மறு பிறவி உண்டு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி வாழாமல் முதிர்ந்த மூப்பு சிறந்த மூப்பாகாது என்பது இதன் பொருள் .
5.7.4 மக்கட்பேறு இல்லா வாழ்க்கை
இவ்வுலகில் கிடைத்தற்கரிய பேறுகள் எத்தனையோ உள்ளன .
அவற்றில் மக்கட்பேறே சிறந்த பேறு என்பதை ,
பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற
( குறள் : 61 )
என்பார் திருவள்ளுவர் .
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வ ராயினும் .
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லை தாம்வாழும் நாளே
என்று புறநானூற்றுப் பாடலும் ( 188 ) மக்கட்பேற்றைச் சிறப்பித்துக் கூறுகின்றது .
இந்தக் கருத்தையே முதுமொழிக்காஞ்சி
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை
( இல்லைப் பத்து : 1 )
என்று பிரதிபலிக்கிறது .
செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தலை விடத் தக்க செயல் வேறில்லை .
விருப்பமும் விளைவும்
இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை .
இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல , துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை .
துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள் .
சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்வர் .
அத்தகையோருக்கு என்ன சிறப்பு கிட்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது .
சிலர் , உடல் வளத்தை மனத்திற்கொண்டு , எப்பொழுதும் அளவுக்கு அதிகமான உணவையே உண்டு மகிழ்வர் .
அத்தகையோருக்கு எத்தகைய தீமை வரும் என்பதனை முதுமொழிக் காஞ்சி வெளிப்படுத்துகிறது .
5.8.1 துன்பமும் இன்பமும்
ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்றபொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம் .
ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் .
துன்பங்களைக் கண்டு அஞ்சி , செயலைக் கைவிடுதல் கூடாது .
அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும் .
எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும் ( எளிய பத்து : 5 )
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
( எளிய பத்து - 5 )
( வெய்யோர் = விரும்புவோர் )
5.8.2 உணவும் நோயும்
ஒருவன் உண்ணும் போது அளவறிந்து உண்ண வேண்டும் .
அவ்வாறு உண்டால் நோய் உண்டாகாது .
அளவு கடந்து உண்டால் அவ்வுணவு செரிக்காது .
உண்டவனுக்கு மிகுந்த நோயை உண்டு பண்ணும் .
எனவே , உணவை அளவுக்கு மேல் உண்பவர்கட்கு நோயானது எளிமையாக வந்து சேரும் .
உண்டிவெய் யோர்க்கு உறுபிணி எளிது
( எளிய பத்து - 7 )
( வெய்யோர் = விரும்புவோர் )
இவ்வாறு அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தை முதுமொழிக்காஞ்சி வலியுறுத்துகிறது , எனவேதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றார் ஆன்றோர் .
தொகுப்புரை
நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல் , உறங்குதல் , பேசுதல் போன்றவற்றிற்கும் விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை , கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது .
மனிதனின் உயர்பண்புகள் இவை , இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல் மதிப்புகளை வரையறை செய்கிறது .
முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக வைத்துப் பல பாடல்கள் அமைந்துள்ளதை இந்நூலில் காணலாம் .
சான்றோர் செயல் இதுவெனக் கூறும் பாடல்கள் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளை எடுத்துரைக்கின்றன .
முதுமொழிக்காஞ்சி , காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று .
பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து அதிகாரங்களில் நூறு முதுமொழிகளை இந்நூலில் காணலாம் .
சிறந்தனவற்றைக் கூறி அவற்றை விடச் சிறந்த பொருள்களை எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும் .
சிறந்தனவற்றை எப்படி அறிவது என்பதை , இந்நூல் எடுத்துரைக்கிறது .
எளிமையானவை எவை , பொய்யானவை எவை , பயன் இல்லாதன யாவை என்பதையும் இந்நூல் பட்டியலிடுகிறது .
யாருக்கு எது எளிது என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது .
எதிர்மறையால் கூறும் வாழ்வியல் உண்மைகளை , அல்ல பத்து , இல்லைப் பத்து என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறது .
வாழ்க்கையில் இன்ப துன்பங்களை , இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையை மனிதன் அடைய வேண்டும் என்ற உண்மைகளையும் உணர வைக்கிறது .
அளவில் சிறிய நூலாக அமைந்து , ஆன்றோர் அனுபவ மொழிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூலாக முதுமொழிக்காஞ்சி விளங்குகிறது .
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1. முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் யார் ?
[ விடை ]
2. முதுமொழிக்காஞ்சி மொத்தம் எத்தனைச் செய்யுட்களைக் கொண்டது ?
[ விடை ] 3. ‘ சிறந்த பத்து ’ அதிகாரத்தின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுக .
[ விடை ]
4. மனைவாழ்க்கை சிறப்படையக் காரணமாக விளங்குவது எது ?
[ விடை ]
5. நோய்கள் யாரிடம் சுலபமாகச் சேரும் ?
பழமொழி நானூறு
பாட முன்னுரை
பழமொழி நானூறு என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .
இந்நூல் பழமொழி என்றும் வழங்கப்படும் .
இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு விளங்குகின்றன .
ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை உணர்த்துகிறது .
படிப்பவர் எளிமையாகக் கற்கும் வண்ணம் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் 34 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
சில அதிகாரங்கள் 10 வெண்பாக்களைக் கொண்டுள்ளன .
சில அதிகாரங்களில் 10-க்கு மேற்பட்ட வெண்பாக்கள் உள்ளன .
எஞ்சியவற்றில் 10-க்குக் குறைவான வெண்பாக்கள் உள்ளன .
இவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .
இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் .
முன்றுறை என்பது ஊர். அரையனார் என்பதால் சிற்றரசராக இருக்கலாம் .
சமண சமயத்தைச் சேர்ந்த இவர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் .
பழமொழிகள்
பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள் , மக்களை நன்னெறியில் செலுத்தக் கூடிய வழிகாட்டிகள் .
உலகெங்கிலும் பழமொழிகள் காணப்படுகின்றன .
எல்லா நாடுகளிலும் , எல்லா மொழிகளிலும் பழமொழிகள் உண்டு .
உலக நாடகக் கவிஞர் செகப்பிரியர் தம் நாடகங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார் .
‘ விரும்பிய வண்ணமே ’ ( As you Like it ) என்ற நாடகத்தில் எல்லாம் ( கேடுகளும் ) நன்மைக்கே என்ற கருத்தமைந்த பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார் .
அவருடைய நாடகத் தலைப்புகள் பழமொழிகள் போன்றே காணப்படுகின்றன .
சான்றாகச் சிலவற்றைக் கீழே காணலாம் .
‘ As you like it ’ , ‘ Measure for Measure ’
‘ Much Ado About Nothing ’ , ‘ All ' s well that ends well ’
ஏசுநாதர் தம் குழுவில் உள்ள நற்சீடர்களுக்குப் பழமொழிகள் வாயிலாகவே அறவுரை பகர்ந்திருக்கிறார் .
‘ மருத்துவனே , உன்னை முதலில் குணப்படுத்திக் கொள் ’என்று அறிவுரை கூறுவார் .
‘ Physician , heal thyself '
அறிஞர் பெருமக்களான அரிஸ்டாட்டில் , சாலமன் ஆகியோரும் பழமொழிப் பித்தர்கள் என்பார்கள் .
6.1.1 இலக்கியங்களில் பழமொழிகள்
சங்க இலக்கியம் முதலாக அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயின்று வருகின்றன .
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
என்ற இரண்டு பழமொழிகளும் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை .
குறுந்தொகையில் இப்பழமொழி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போமா ?
தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் ( பொதுமகளிர் ) சென்று விட்டான் தலைவன் .
தலைவி வருந்தியிருக்கிறாள் .
அவள் மீது அன்புடைய தோழி தலைவன் வந்தவுடன் அவனை வீட்டின் உள்ளே விடாமல் வாயிலில் நிறுத்திக் கீழே குறிப்பிட்டுள்ளவாறு பேசுகிறாள் .
குளிர்ச்சியான நீரில் அளவிற்கு மேல் நீராடினால் உடம்பிற்குத் துன்பம் உண்டாகும் .
தேன்இனிப்புடையதுதான் .
அதையே இடைவிடாது பலமுறை உண்டால் உண்டவர்க்கு அது வெறுப்பைக் கொடுக்கும் .
சுவை உடைய தேன் இப்போது புளிப்பாய் இருக்கும் .
அதுபோல நாங்களும் உனக்கு இதுநாள் வரை இனிய இன்பப் பொருளாய்த் தோன்றினோம் .
பழக்க மிகுதியால் இப்போது வெறுப்புடைப் பொருளாக மாறினோம் என்று கூறுகிறாள் .
இந்தக் கருத்தை உட்படுத்தி ,
நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
( குறுந்தொகை : 354 )
( நீடு ஆடில் = நீண்ட நேரம் நீராடினால் , ஆர்ந்தோர் = அதிகமாக உண்டோர் )
என்ற பாடலைப் பாடுகிறார் புலவர் கயத்தூர் கிழார் .
காப்பியங்களிலும் , புராணங்களிலும் பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன .
கம்பராமாயணம் , வில்லிபாரதம் , திருமுறைகள் , திருவருட்பா ஆகிய நூல்களிலும் பல பழமொழிகளைக் காண முடிகிறது .
• நாடகங்களில் பழமொழி
நாடக இலக்கியங்களிலும் பழமொழிகள் பல இடம்பெற்றுள்ளன .
எடுத்துக்காட்டாக ‘ பெண் என்றால் பேயும் இரங்குமே ’ என இராம நாடகத்திலும் , ‘ பூவையை வளர்த்துப் பூனைக்கு ஈயவோ ’ என்று மனோன்மணீயம் நாடகத்திலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன .
• இலக்கியப் பெருமையும் பழமொழியும்
தமிழ் இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தவை திருக்குறளும் , நாலடியாரும் .
இவற்றின் பெருமையை வெளிப்படுத்துகின்ற வகையிலும் பழமொழிகள் வழங்குகின்றன .
பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
என்பவை குறளுக்கும் நாலடியாருக்கும் சிறப்பைத் தரும் பழமொழிகள் .
அதைப்போல , ‘ திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ’ என்று பழமொழிகளால் குறிப்பிடுவதைக் காணலாம் .
• தமிழ்மொழியின் சிறப்பு
ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உண்டு .
ஆனால் எம்மொழியிலும் பழமொழிக்கென்று ஒரு தனி நூல் இருப்பதாகத் தெரியவில்லை .
தமிழில் பழமொழிக்கென்று நூல்கள் உள்ளன .
அவை ‘ பழமொழி நானூறு ’ மற்றொன்று பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்பன .
இத்தனைச் சிறப்பு பழமொழிக்கு உரியது ஆவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமோ ?
6.1.2 பழமொழி - அமைப்பும் சிறப்பும்
• பழமொழி என்ற சொல் - விளக்கம்
1. பழமையான மொழி - தொன்மையானது ( அனுபவ மொழிகள் )
2. பழம் போன்ற மொழி - பழம் போல் இனிமையானது .
சுவை உடையது .
( இலக்கியச் சுவை )
3. பழம் போல நன்மையளிப்பது ( வாழ்க்கையில் நெறிப்படுத்துவது )
4. பழம் போல் நெகிழ்ந்த தன்மை - புரிந்து கொள்ள எளிமையானது .
என்கிற அனைத்துப் பொருளையும் உள்ளடக்கியுள்ளது .
பழமொழி என்ற சொல் மிகவும் பொருளாழம் உடையது இல்லையா ?
• இலக்கணம்
தொல்காப்பியர் பழமொழியை ‘ முதுமொழி ’என்று குறிப்பிடுகிறார் .
அங்கதம் முதுசொலோடு
( தொல் .
பொருள் .
செய் : 79 )
இம்முதுமொழிக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தும் , தொகுத்தும் உரைக்கிறார் .
நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது முதலிய முதுமொழி யென்ப
( தொல் .
பொருள் .
செய் : 177 )
இதன் பொருளாவது :
1. பழமொழி கூர்மையோடு திட்ப நுட்பம் உடையதாய் இருத்தல் வேண்டும் .
2. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் . 3. சிறந்ததாக எளிமையாக அமைந்து இருக்க வேண்டும் .