4. குறித்த பொருள் ஒன்றினை வரையறுத்துக் கூற வேண்டும் .
ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் பழமொழிக்கு வகுத்த இலக்கணங்கள் , இன்று பழமொழிக்கு மேலைநாட்டார் கூறும் விளக்கத்தோடு பொருந்துகின்றன என்பது வியப்பைத் தருகிறது .
• மேலைநாட்டார் விளக்கம்
ஆர்.சி.டிரெஞ்ச் பழமொழிகளும் அவற்றின் படிப்பினைகளும் என்ற நூலில் பழமொழிக்குச் சில இலக்கணங்கள் வரையறுக்கிறார் .
அவை :
1. பழமொழி மூச்சை ஒருமுறை உள்ளெடுத்து வெளிவிடும் நேரத்திற்குள் குறைந்த சொற்களால் ஆக்கப்பட வேண்டும் .
2. நல்ல உணர்வுடன் இருக்க வேண்டும் .
3. நுட்பம் உடையதாய் இருக்க வேண்டும் .
உப்பிட்ட பண்டம் போல் தீமை தராத வகையில் அமைய வேண்டும் .
• தொல்காப்பியமும் பழமொழியும்
மேற்கூறிய கருத்துகள் பெரும்பாலும் தொல்காப்பியர் கருத்துகளுடன் ஒத்துச் செல்கின்றன .
தொல்காப்பியர் கூறிய பழமொழி இலக்கணங்களுக்கு ஏற்பவே பழமொழி நானூறு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது .
எளிமையாக , அதே சமயம் கூர்மையாக , கூறவந்த கருத்தை வரையறுத்துச் சொல்வதாக இருக்கிறது .
சுவையாக அமைந்து எக்காலத்தும் பயன்படுத்தும் வண்ணம் நின்று நிலவும் பெருமை உடையதாய் உள்ளது .
• அமைப்பு
முதல் இரண்டடிகளில் ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட பொருளைக் கூறுவார் .
மூன்றாமடியில் ஆணையோ , பெண்ணையோ விளித்துக் கூறுதலைக் காணலாம் .
அதனைத் தொடர்ந்து நான்காம் அடியில் பழமொழியைக் காணலாம் .
• வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும்
பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலில் குறிக்கப்படுவதைக் காணலாம் .
மனுநீதிச் சோழன் , பொற்கைப் பாண்டியன் , பாரி , பேகன் , கரிகாற் சோழன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன .
தவறு செய்த தன் மகனைத் தேரின் சக்கரத்தால் கொல்லும்படி ஆணையிட்ட , மனுநீதிச் சோழனைப் பற்றிக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
( பழ - 242 )
என்று பழமொழி கூறுகிறது .
தவற்றை நினைத்துத் தன் கை குறைத்தான் தென்னவனும்
( பழ - 76 )
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
( பழ - 74 )
நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
( பழ - 6 )
இராமாயண , மகாபாரதக் கதைக் குறிப்புகளும் , மாவலி , வாமனன் , மதுகைடவர் என்போரைப் பற்றிய புராணக் குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன .
கல்வி
கல்வியின் சிறப்பைப் பற்றி அறநூல்கள் கூறுகின்றன .
அதைப்போல , பழமொழியும் கல்வியின் பெருமையைக் கூறுகின்றது .
கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு .
அறிவுடையவர் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும் .
எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது .
அவர் சொந்த நாடேயாகும் .
தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும் .
ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை .
இதனை ,
ஆற்றுணா வேண்டுவதில்
என்று பழமொழி ( 4 ) கூறுகிறது .
அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான் .
செல்கின்ற இடந்தோறும் அவன் பலராலும் உபசரிக்கப்படுவான் .
அவனுக்கு வேண்டுவன கிடைக்கும் என்று கல்வியின் சிறப்பும் உயர்வும் கற்றவர் சிறப்பும் உயர்வும் ஒருங்கே உணர்த்தப்படுவதைக் காணலாம் .
• கற்றோர் சிறப்பு
பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர் . தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள் .
நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யுமோ ?
செய்யாதல்லவா ?
அதைப் போலவே நிறையக் கற்றுணர்ந்தவர்கள் ஆரவாரம் செய்யமாட்டார்கள் என்பதை விளக்க வந்த பழமொழி .
நிறைகுடம் நீர்தளும்பல் இல்
( பழ : 9 )
6.2.1 அறிவுடைமை
அறிவுடையார் சிறப்புப் பற்றி , பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?
அறிவுச் செல்வம் சிறந்த செல்வம் .
பொன்னும் , இரத்தினமும் , சந்தனமும் , மாலையும் போன்ற பிற அணிகள் யாவும் ஒருவனை அழகுறச் செய்கின்றன .
எப்போது ?
அவன் அணிந்திருக்கின்ற ஆடை ஒழுங்காக இருக்கும்போதுதான் .
அதுபோல் அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது .
அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான் .
அணியெல்லாம் ஆடையின் பின்
( பழ : 26 )
என்ற பழமொழி இவ்வாறு அறிவுடைமையின் சிறப்பைப் பேசுகிறது .
வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன .
ஒப்பற்ற ஒரு சந்திரனும் வானில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான் .
ஆயிரம் நட்சத்திர ஒளி ஒன்று கூடினாலும் , ஒரு சந்திரனைப் போல் ஒளி தந்து உலகிற்குப் பயன்படாது .
அறிவிலார் பலர் சேர்ந்தாலும் அறிவுடையான் ஒருவனுக்கு நிகராக மாட்டார்கள் என்ற கருத்தை விளக்கும் பழமொழிப் பாடல் இதோ :
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண் ( பு ) ஒருவன் போல்கலார்
பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
காய்கலா ஆகும் நிலா
( பழ : 27 )
6.2.2 கல்லாதவர்
இனி , கல்லாதவர் நிலைபற்றிப் பழமொழி என்ன சொல்கிறதென்று பார்ப்போமா ?
நடக்க முடியாத முடவன் ஒருவன் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு எழுகிறான் .
எழுந்து என்ன செய்யப் போகிறான் ?
யானையோடு விளையாடப் போகிறானாம் .
நமக்கு நகைப்பாக இருக்கிறது .
திகைப்பாக இருக்கிறது .
ஆனால் அவன் அடையப் போவது அவமானமும் துன்பமுமே .
இதுபோன்ற அவமானத்தையும் துன்பத்தையும் தான் கல்லாதவர் கற்றவரோடு வாதம் செய்யின் அடைவர் .
இக்கருத்தைச் சொல்லும் பழமொழிப்பாடல் இதோ !
கல்லாதார் ஆற்றுவாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப் ( பு ) ஊணி
யானையோடு ஆடல் உறவு
( பழ : 16 )
( கறுப்பித்து = கோபமூட்டி ; சுனைத்து = சினந்து ; பிடிப்பு ஊணி = ஊன்று கோலை ஊன்றி )
6.2.3 அவையறிதல்
அவையில் உள்ளாரின் இயல்பறிந்து , சூழல் அறிந்து பேசுதல் அவையறிதலாகும் .
அவையில் உள்ளவர் ஒருவர் ஒருவராகத் தம் கருத்தைக் கூறுதல் வேண்டும் .
மாறுபடுவோர் இருவரும் ஒரே காலத்தில் வாதம் செய்தால் அது தகுதி உடையது ஆகுமா ?
ஆகாதல்லவா ?
அவ்வாறு ஒரே நேரத்தில் வாதம் செய்தால் அது எப்படி இருக்கும் ?
ஒரே காலத்தில் இருவரும் ஒரு நாயைக் கொண்டு வேட்டை ஆடுதல்போலாகும் .
சிறிதேனும் இன்னாது , இருவர் உடன்ஆடல் நாய் ( பழ : 18 )
வாதம் செய்வோர் இருவரும் தம் கருத்தை ஒருவர் பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்ற கருத்து இப்பழமொழியினால் தெளிவாகும் .
அவையில் ஒருவர் பேச்சைக் கேட்டபின் அதற்குரிய பதில் இறுத்தலே சரியானது .
அவர் கூறுவதைக் கேளாமலே பதில் சொன்னால் அவையில் என்ன நடக்கும் ?
குழப்பம்தான் மிஞ்சும் .
இச்செயலுக்கு , பழமொழி எவ்வாறு உவமை கூறுகிறது பாருங்கள் .
முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை நூல் கொண்டு கட்டுவதைப் போலாகும் என்கிறது .
முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு
( பழ : 19 )
இல்வாழ்க்கை
• இல்வாழ்க்கைக்கு உரிய சில நெறிகள்
விதையின்றி விளைவில்லை .
செயல்கள் முயற்சியின்றி நடைபெறா .
உணவு இல்லாது உயிர் வாழ்தல் இயலாது ( பழ : 327 )
குறிப்பறிதலும் விருந்தோம்பலும் உடைய பெண் இல்வாழ்க்கைக்கு உகந்தவள் ( பழ : 330 )
மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தையின் கடன் ( பழ : 331 )
கல்வியறிவால் சிறந்த மக்களைத் தாயார் பெரிதும் விரும்புவர் ( பழ : 332 ) என்று இல்வாழ்க்கைக்கு உரிய நெறிகளைச் சொல்கிறது பழமொழி இலக்கியம் .
6.3.1 பொருளைப் போற்றுதல்
இல்லறத்தில் இருப்போர்க்குப் பொருளைப் போற்றுதல் மிக அவசியம் .
ஏனென்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை .
எனவே பொருள் ஈட்டும் காலத்து , பின்னாளில் உதவும் பொருட்டு , பொருளைச் சேமித்துக் காவல் செய்ய வேண்டும் .
நத்தை எதிர்காலத்தை நோக்கி நீரைச் சேமித்துக் காவல் செய்வதைப் போலப் பிற்காலத்திற்காகக் பொருளைச் சேமிக்க வேண்டும் .
சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று
( பழ : 205 )
( நந்து = நத்தை ; சேண் நோக்கி = எதிர்காலம் நோக்கி )
என்ற பழமொழி இக்கருத்தை விளக்குகிறது .
6.3.2 ஈகை
இல்வாழ்பவன் ஈகைக்குணம் உடையவனாய் இருத்தல் வேண்டும் .
உலக வழக்கில் சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடித்தல் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் .
இலாபநோக்கில் செய்யப்படும் ஒரு தந்திரமாகத்தான் இப்பழமொழியை நாம் அறிந்திருக்கிறோம் .
ஆனால் முன்றுறையரையனார் உண்மையில் நம் வாழ்க்கைக்குப் பயன்தரத்தக்க ஓர் உயரிய வழியைத்தான் இப்பழமொழி வாயிலாகக் கூறுகிறார் .
இம்மையில் தம்மால் இயன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும் .
இந்த நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற நினைக்க வேண்டுமாம் .
அப்படி நினைப்பவர்கள் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர் .
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள் கருதுவாரே - விரிபூ
விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்
( பழ : 372 )
( விராஅம் = கலந்திருக்கின்ற , அயிரை = ஒருவகை மீன் , வராஅல் = ஒருவகை மீன் )
இறைத்தலால் குளத்து நீர் வற்றாதது போல
ஈதலால் செல்வம் குறைவுபடாது
( பழ : 374 )
வறியவர்க்குப் பொருள்ஈந்து ஏழையாயினார் இல்லை
( பழ : 377 )
இறைக்கின்ற கிணறு சுரப்பதைப்போலக் கொடுக்கக்
கொடுக்கப் பொருள் வளரும்
( பழ : 378 )
என்று சொல்லப்படும் கருத்துகள் மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடியன .
• நன்றியில் செல்வம் செல்வம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும் .
இல்லையென்றால் அச்செல்வம் பயனின்றி அழியும் .
எப்படித் தெரியுமா ?
ஒரு நாயின் கையில் முழுத் தேங்காய் கிடைத்தது .
அதை உண்ண நாய்க்கு அளவிட முடியாத ஆசை. ஆனால் அதை உரித்துத் தின்னும் வழியறியாது .
மற்றவர்க்குக் கொடுக்கவும் மனமில்லாமல் தானும் உண்ண முடியாமல் உருட்டிக் கொண்டே இருக்கும் .
அதுபோலத்தான் மற்றவர்க்குக் கொடுக்கவும் தான் அனுபவிக்கவும் அறியாதவர் பெற்ற செல்வமும் பயனின்றி அழியும் .
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப !
அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்
( பழ : 216 )
( வழங்கல் = ஈதல் ; துய்த்தல் = அனுபவித்தல் ; தெங்கம் பழம் = தேங்காய் )
சிலர் தம்மிடம் ஒரு பொருள் கேட்டவருக்குக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டவரை அலையவைப்பர் .
இத்தகைய ஏமாற்றுச் செயலைத் தக்க பழமொழியால் விளக்குகிறார் புலவர் .
பசுவுக்குப் புல் கொடுப்பார் , வாயிலிடுவது போல்காட்டி , புல்லை அதன் கழுத்தில் கட்டி விட்டால் என்ன ஆகும் ?
பசு தன் கழுத்தில் கட்டிய புல்லைத் தின்னும் பொருட்டு முயன்று துன்புறும் .
அது போலவே பொருளைக் கேட்டவர் பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசையால் கால நீட்டிப்பினால் பலநாளும் வந்து துன்புறுவர் .
வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்
என்பது பழமொழி ( 222 )
6.3.3 அறம் செய்தல்
வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது இன்றியமையாத ஒன்று .
எல்லோரும் ஈட்டிய பொருளைச் செலவு செய்து அனுபவிப்பர் .
சேர்த்து வைப்பவரும் உண்டு .
சேர்த்து வைக்கும் பொருள் பின்னால் நமக்கு உதவாது .
ஆனால் செய்யத் தகுந்த இடம் நோக்கி அறம் செய்தால் பின்னால் தளர்ந்த காலத்து அதுவே உதவும் பொருளாகும் .
அதைத்தான் எய்ப்பினில் வைப்பு என்கிறது பழமொழி .
வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறம்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது
( பழ : 358 )
( தக்குழி = தகுந்த இடம் நோக்கி ; எய்ப்பினில் = தளர்ந்த காலத்து )
செய்ய வேண்டிய அறத்தைப் பின்னால் செய்து கொள்ளலாம் எனக் காலம் கடத்தினால் முதுமை வந்துவிடும் .
முதுமை வந்தால் நோயும் உடன் வரும் .
நோய் வந்தால் அறம் செய்ய இயலாது .
சிந்தனை அறத்தில் நின்றாலும் நோய் அது செய்வதற்குத் தடையாகும் .
அந்நிலை , நாயைக் கண்ட பொழுது அதை ஓட்டக் கல்லைத் தேடினால் கல்லில்லாத தன்மையை ஒக்கும் என்பர் .
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
என்ற உலகியல் வழக்கைக் கருத்தில் கொண்டு எழுந்த பாடல் இது .
மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை
ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை
நாய்காணின் கற்காணா வாறு
( பழ : 361 )
கலைவல்ல சிற்பி கல்லில் நாயைச் செதுக்கினான் .
நாய் கல்லில் அழகுற உருப்பெற்றது .
காண்பவர் அதைக் கல்லென்று நினைத்தபோது கல்லாகத்தான் அது காட்சியளித்தது . நாயின் உருவத்தைக் காணும்போது அது நாயெனவே தோன்றியது .