1

உயர் டிப்ளமோ படிப்பு

பாடம் - 1

A02131 இடைச்சொல்லின் பொது இலக்கணம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

சொல் , சொல் வகைகள் ஆகியவற்றை விளக்கி இடைச்சொல் என்றால் என்ன என்பது பற்றி எடுத்துரைக்கிறது .

இலக்கண நூலார் கூறும் இடைச்சொல்லின் பொது இலக்கணத்தையும் அதன் வகைகளையும் விளக்குகிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

மொழிப் பயன்பாட்டில் இடைச்சொற்களின் பங்கு / பணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .

இடைச்சொல் கருத்து வெளிப்பாட்டிற்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும் உதவும் முறைகளை அறிந்து கொள்ளலாம் .

சொற்களைப் பகுத்தறிந்து இடைச்சொல் எவ்வாறு சொல்லுக்குரிய பொருளைச் சிறப்பிக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .

1.0 பாட முன்னுரை

நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது .

மக்கள் வாழ மொழி வேண்டும் .

மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும் .

இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர் .

பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று .

இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘ இடைச்சொல்லுக்குப் ’ பொதுவான விளக்கம் தருகிறது .

இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம் , நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன .

இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல் , சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது .

1.1 சொல் - விளக்கம்

எழுத்து என்பது ஒலியும் , வடிவும் கொண்டு விளங்குவது .

எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம் .

பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது .

சொல் என்பதைப் ‘ பதம் ’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார் .

பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் .

1.1.1 ஓரெழுத்து ஒருமொழி

ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர் .

சிறப்பான ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் .

எடுத்துக்காட்டு

ஆ ( பசு ) , ஈ , ஏ ( அம்பு ) , ஓ ( மதகு ) , தா , போ முதலிய எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர் .

இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள் பலவெழுத்துச் சொற்கள் ஆகும் .

எடுத்துக்காட்டு

அணி

அறம்

விரும்பு

1.2 சொல் பகுப்பு

இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும் .

ஓர் எழுத்து தனித்து நின்றோ , சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ , பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம் .

ஒரு சொல் எவ்வாறு அமைகிறது , எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம் .

அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும் .

சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன .

சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம் , பகாப்பதம் என இரண்டு வகைப்படும் .

1.2.1 பகுபதம்

பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள் .

பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல் .

பகுதி , விகுதி , இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும் . இவற்றுள் விகுதி , இடைநிலை , சந்தி , சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும் .

பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம் .

• பகுதி

பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும் ; பெயர் , வினை , இடை , உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும் .

எடுத்துக்காட்டு

கண்ணன்

-

கண்

-

பெயர்ப் பகுதி

வந்தான்

-

வா

-

வினைப் பகுதி

மற்றவன்

-

மற்று

-

இடைப் பகுதி

கடியன்

-

கடி

-

உரிப் பகுதி

• விகுதி

விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றை உணர்த்தும் .

எடுத்துக்காட்டு

கண்ணன்

-

அன்

-

ஆண் பாலை உணர்த்துகிறது .

வந்தேன்

-

ஏன்

-

தன்மை ஒருமையை உணர்த்துகிறது

வந்தது

-

து

-

ஒன்றன்பாலை உணர்த்துகிறது

வந்தீர்

-

ஈர்

-

முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது .

இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள் .

• இடைநிலை இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும் .

பெயர் இடைநிலை , வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும் .

பெயர் இடைநிலை காலம் காட்டாது .

வினை இடைநிலை காலம் காட்டும் .

எடுத்துக்காட்டு

அறிஞன் - அறி + ஞ் + அன்

இதில் ‘ ஞ் ’ என்பது பெயர் இடைநிலை .

இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது .

வந்தான் - வா + த் ( ந் ) + த் + ஆன்

இதில் ‘ த் ’ என்பது வினை இடைநிலை .

இது இறந்த காலம் காட்டியது .

• சந்தி

சந்தி என்பது புணர்ச்சி .

இது சொற்களை இணைக்கிறது .

சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது .

எடுத்துக்காட்டு

படித்தான் - படி + த் + த் + ஆன்

என்று பகுக்க வேண்டும் .

இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘ த் ’ சந்தி ஆகும் .

அதற்கு அடுத்துள்ள ‘ த் ’ காலம் காட்டும் இடைநிலை ஆகும் .

• சாரியை

சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும் .

புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும் .

சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும் .

எடுத்துக்காட்டு

பட்டினத்தான் - பட்டினம் + அத்து + ஆன்

இச்சொல்லில் ‘ அத்து ’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது .

ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க , பட்டினம் + ஆன் , ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘ அத்து ’ துணை புரிகிறது அல்லவா ?

ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது .

நெஞ்சம் - நெஞ்சு + அம்

இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல் .

அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது .

• விகாரம்

பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று .

இங்கு விகாரம் எனப்படுவது , பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் ( மாற்றங்கள் ) ஆகும் .

எடுத்துக்காட்டு

வந்தான் - என்ற சொல்லில் ‘ வா ’ என்பது பகுதி .

இப்பகுதி , ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘ வ ’ எனக் குறுகியது .

அதனால் இது விகாரம் என்று கூறப்படும் .

• சொல்லும் உறுப்புகளும்

ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும் .

இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு .

எடுத்துக்காட்டு

கண்ணன் - கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன .

வந்தனன் - என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம் .

வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்

பகுதி , சந்தி , இடைநிலை , சாரியை , விகுதி , விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம் .

( ‘ வா ’ என்பது ‘ வ ’ எனத் திரிந்தது விகாரம் )

1.2.2 பகாப்பதம்

பகுக்க முடியாத பதம் . பகுத்தால் பொருள் தராது .

எடுத்துக்காட்டு

கண்

பிரித்தால் பொருள் தராது .

படி

1.3 சொல் வகைகள்

தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு .

அவை ,

1 )

பெயர்ச்சொல்

2 )

வினைச்சொல்

3 )

இடைச்சொல்

4 )

உரிச்சொல்

இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர் .

அவை ,

1 )

இயற்சொல்

2 )

திரிசொல்

3 )

திசைச்சொல்

4 )

வடசொல்

பெயர் , வினை இவற்றை இடமாகக் கொண்டு , அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல் , உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 .

சொல் என்றால் என்ன ?

[ விடை ]

2 .

ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன ?

[ விடை ]

3 .

பகாப்பதம் என்றால் என்ன ?

[ விடை ]

4 .

பகுபத உறுப்புகள் எத்தனை ?

அவை யாவை ?

[ விடை ]

5 .

இலக்கண நோக்கில் சொல் எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

[ விடை ]

6 .

கண்ணன் என்ற பெயரைப் பகுத்து அதில் உள்ள பகுபத உறுப்புகளைக் கூறுக .

[ விடை ]

1.4 இடைச்சொல்லின் இலக்கணம்

பெயர் , வினை , இடை , உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம் . இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம் .