உயர் டிப்ளமோ படிப்பு
பாடம் - 1
A02131 இடைச்சொல்லின் பொது இலக்கணம்
E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?
சொல் , சொல் வகைகள் ஆகியவற்றை விளக்கி இடைச்சொல் என்றால் என்ன என்பது பற்றி எடுத்துரைக்கிறது .
இலக்கண நூலார் கூறும் இடைச்சொல்லின் பொது இலக்கணத்தையும் அதன் வகைகளையும் விளக்குகிறது .
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?
•
மொழிப் பயன்பாட்டில் இடைச்சொற்களின் பங்கு / பணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .
•
இடைச்சொல் கருத்து வெளிப்பாட்டிற்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும் உதவும் முறைகளை அறிந்து கொள்ளலாம் .
•
சொற்களைப் பகுத்தறிந்து இடைச்சொல் எவ்வாறு சொல்லுக்குரிய பொருளைச் சிறப்பிக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .
1.0 பாட முன்னுரை
நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது .
மக்கள் வாழ மொழி வேண்டும் .
மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும் .
இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர் .
பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று .
இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘ இடைச்சொல்லுக்குப் ’ பொதுவான விளக்கம் தருகிறது .
இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம் , நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன .
இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல் , சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது .
1.1 சொல் - விளக்கம்
எழுத்து என்பது ஒலியும் , வடிவும் கொண்டு விளங்குவது .
எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம் .
பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது .
சொல் என்பதைப் ‘ பதம் ’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார் .
பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் .
1.1.1 ஓரெழுத்து ஒருமொழி
ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர் .
சிறப்பான ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் .
எடுத்துக்காட்டு
ஆ ( பசு ) , ஈ , ஏ ( அம்பு ) , ஓ ( மதகு ) , தா , போ முதலிய எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர் .
இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள் பலவெழுத்துச் சொற்கள் ஆகும் .
எடுத்துக்காட்டு
அணி
அறம்
விரும்பு
1.2 சொல் பகுப்பு
இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும் .
ஓர் எழுத்து தனித்து நின்றோ , சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ , பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம் .
ஒரு சொல் எவ்வாறு அமைகிறது , எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம் .
அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும் .
சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன .
சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம் , பகாப்பதம் என இரண்டு வகைப்படும் .
1.2.1 பகுபதம்
பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள் .
பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல் .
பகுதி , விகுதி , இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும் . இவற்றுள் விகுதி , இடைநிலை , சந்தி , சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும் .
பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம் .
• பகுதி
பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும் ; பெயர் , வினை , இடை , உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும் .
எடுத்துக்காட்டு
கண்ணன்
-
கண்
-
பெயர்ப் பகுதி
வந்தான்
-
வா
-
வினைப் பகுதி
மற்றவன்
-
மற்று
-
இடைப் பகுதி
கடியன்
-
கடி
-
உரிப் பகுதி
• விகுதி
விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றை உணர்த்தும் .
எடுத்துக்காட்டு
கண்ணன்
-
அன்
-
ஆண் பாலை உணர்த்துகிறது .
வந்தேன்
-
ஏன்
-
தன்மை ஒருமையை உணர்த்துகிறது
வந்தது
-
து
-
ஒன்றன்பாலை உணர்த்துகிறது
வந்தீர்
-
ஈர்
-
முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது .
இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள் .
• இடைநிலை இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும் .
பெயர் இடைநிலை , வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும் .
பெயர் இடைநிலை காலம் காட்டாது .
வினை இடைநிலை காலம் காட்டும் .
எடுத்துக்காட்டு
அறிஞன் - அறி + ஞ் + அன்
இதில் ‘ ஞ் ’ என்பது பெயர் இடைநிலை .
இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது .
வந்தான் - வா + த் ( ந் ) + த் + ஆன்
இதில் ‘ த் ’ என்பது வினை இடைநிலை .
இது இறந்த காலம் காட்டியது .
• சந்தி
சந்தி என்பது புணர்ச்சி .
இது சொற்களை இணைக்கிறது .
சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது .
எடுத்துக்காட்டு
படித்தான் - படி + த் + த் + ஆன்
என்று பகுக்க வேண்டும் .
இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘ த் ’ சந்தி ஆகும் .
அதற்கு அடுத்துள்ள ‘ த் ’ காலம் காட்டும் இடைநிலை ஆகும் .
• சாரியை
சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும் .
புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும் .
சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும் .
எடுத்துக்காட்டு
பட்டினத்தான் - பட்டினம் + அத்து + ஆன்
இச்சொல்லில் ‘ அத்து ’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது .
ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க , பட்டினம் + ஆன் , ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘ அத்து ’ துணை புரிகிறது அல்லவா ?
ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது .
நெஞ்சம் - நெஞ்சு + அம்
இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல் .
அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது .
• விகாரம்
பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று .
இங்கு விகாரம் எனப்படுவது , பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் ( மாற்றங்கள் ) ஆகும் .
எடுத்துக்காட்டு
வந்தான் - என்ற சொல்லில் ‘ வா ’ என்பது பகுதி .
இப்பகுதி , ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘ வ ’ எனக் குறுகியது .
அதனால் இது விகாரம் என்று கூறப்படும் .
• சொல்லும் உறுப்புகளும்
ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும் .
இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு .
எடுத்துக்காட்டு
கண்ணன் - கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன .
வந்தனன் - என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம் .
வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்
பகுதி , சந்தி , இடைநிலை , சாரியை , விகுதி , விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம் .
( ‘ வா ’ என்பது ‘ வ ’ எனத் திரிந்தது விகாரம் )
1.2.2 பகாப்பதம்
பகுக்க முடியாத பதம் . பகுத்தால் பொருள் தராது .
எடுத்துக்காட்டு
கண்
பிரித்தால் பொருள் தராது .
படி
1.3 சொல் வகைகள்
தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு .
அவை ,
1 )
பெயர்ச்சொல்
2 )
வினைச்சொல்
3 )
இடைச்சொல்
4 )
உரிச்சொல்
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர் .
அவை ,
1 )
இயற்சொல்
2 )
திரிசொல்
3 )
திசைச்சொல்
4 )
வடசொல்
பெயர் , வினை இவற்றை இடமாகக் கொண்டு , அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல் , உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 .
சொல் என்றால் என்ன ?
[ விடை ]
2 .
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன ?
[ விடை ]
3 .
பகாப்பதம் என்றால் என்ன ?
[ விடை ]
4 .
பகுபத உறுப்புகள் எத்தனை ?
அவை யாவை ?
[ விடை ]
5 .
இலக்கண நோக்கில் சொல் எத்தனை வகைப்படும் ?
அவை யாவை ?
[ விடை ]
6 .
கண்ணன் என்ற பெயரைப் பகுத்து அதில் உள்ள பகுபத உறுப்புகளைக் கூறுக .
[ விடை ]
1.4 இடைச்சொல்லின் இலக்கணம்
பெயர் , வினை , இடை , உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம் . இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம் .