இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் ( இடையியல் ) , நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் ( இடையியல் ) விளக்கிக் கூறுகின்றன .
பெயர்ச்சொற்கள் , வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும் .
இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை .
இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா :
இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே
( தொல் .
சொல் .
251 )
( இடை = இடைச்சொல் )
இடைச்சொற்கள் பெயர் , வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர் , வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும் .
பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம் .
எடுத்துக்காட்டு
ஐயோ இறந்தான்
=
ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது .
கொன்றான் கூகூ
=
என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன .
மற்றொன்று
=
மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது .
குழையன்
=
அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது .
இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து , இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம் .
1.5 இடைச்சொல் வகைகள்
நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம் .
1 )
வேற்றுமை உருபுகள்
2 )
வினை விகுதிகள் , காலம் காட்டும் இடைநிலைகள்
3 )
சாரியைகள்
4 )
உவம உருபுகள்
5 )
ஏ , ஓ , என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்
6 )
செய்யுளில் இசையைக் கூட்ட ( நிறைக்க ) வரும் சொற்கள்
7 )
செய்யுளில் அசைநிலையாக வருபவை
8 )
அச்சம் , விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை
இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும் .
இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது :
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசை நிலை
குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப் பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்
( சூத்திரம் - 419 )
( ஒப்பு உருபு = உவம உருபு )
இனி இவ்வகைகளின் விளக்கங்களைப் பாடம் இரண்டு மற்றும் மூன்றில் விரிவாகக் காண்போம் .
1.6 தொகுப்புரை
சொல் என்றால் அது பொருள் தர வேண்டும் .
தமிழில் ஓர் எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தந்து சொல் ஆகிறது .
சொற்கள் இலக்கண நோக்கில் பொதுவாகப் பெயர் , வினை , இடை , உரி என நான்கு வகைப்படும் .
இவற்றுள் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் தன்மை உடையது .
இடைச்சொல் எட்டு வகைப்படும் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1 )
இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் எந்த அதிகாரத்தில் எந்த இயலில் கூறுகிறது ?
[ விடை ]
2 )
இடைச்சொல் - பெயர்க் காரணம் கூறுக .
[ விடை ]
3 )
இடைச்சொல் எவ்வகைச் சொற்களைச் சார்ந்து நடக்கும் தன்மை உடையது ?
[ விடை ]
4 )
குழையன் என்ற பெயர்ச்சொல்லில் இடம் பெற்றுள்ள இடைச்சொல் யாது ?
[ விடை ]
5 )
இடைச்சொல் எத்தனை வகைப்படும் ?
[ விடை ]
பாடம் - 2
A02132 இடைச்சொல் வகைகள் - I
இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?
இடைச்சொற்களுள் வேற்றுமை உருபுகள் , வினை உருபுகள் சாரியைகள் , உவம உருபுகள் ஆகிய இடைச்சொற்கள் பற்றி இப்பாடம் எடுத்துக் கூறுகின்றது .
இந்நான்கு வகை இடைச்சொற்களும் செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் இந்தப் பாடம் விளக்கிக் காட்டுகின்றது .
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?
•
வேற்றுமை உருபுகளை ஏற்கும் பெயர்கள் எவ்வாறு பொருள் தெளிவினைத் தருகின்றன என்பதை அறியலாம் .
•
ஒரு வினைச்சொல்லில் விகுதியும் , காலம் காட்டும் இடைநிலையும் எவற்றையெல்லாம் குறிப்பிடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .
•
சொற்களைச் சார்ந்து , இயைந்து வரும் சாரியைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் .
2.0 பாட முன்னுரை
இடைச்சொல் எட்டு வகைப்படும் .
அவற்றுள் வேற்றுமை உருபுகள் , வினை உருபுகள் , சாரியைகள் , உவம உருபுகள் ஆகிய நான்கு இடைச்சொல் வகைகள் இந்தப் பாடத்தில் விளக்கப்படுகின்றன .
வேற்றுமை உருபுகளாகிய ஐ , ஆல் , கு , இன் , அது , கண் ஆகியன இடைச்சொற்களாய்ப் பெயருக்கு இறுதியில் நிற்கும் இயல்புகள் விளக்கப்படுகின்றன .
வினை உருபுகள் என்பன வினை விகுதிகளும் , காலம் காட்டும் இடைநிலைகளும் ஆகும் .
2.1 வேற்றுமை உருபுகள்
முதலில் , இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம் .
வேற்றுமை என்பது வேறுபாடு .
பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பப் பொருள் வேறுபடும் , அது வேற்றுமை எனப்படும் .
வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும் .
அவை தனித்து வருவதில்லை . எடுத்துக்காட்டு
1 )
கண்ணன் கண்டான்
2 )
கண்ணனை ( க் ) கண்டான்
முதல் வாக்கியத்தில் கண்ணன் பார்க்கிறான் , இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான் .
முதல் வாக்கியத்தில் கண்ணன் எழுவாய் ; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள் .
இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு .
இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம் .
இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும் .
இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது .
எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம் .
வேற்றுமைகள்
உருபு
1 )
முதல் வேற்றுமை
( எழுவாய் வேற்றுமை )
----- - -
2 )
இரண்டாம் வேற்றுமை
ஐ
3 )
மூன்றாம் வேற்றுமை
ஆல் , ஆன் , ஒடு , ஓடு , உடன்
4 )
நான்காம் வேற்றுமை
கு
5 )
ஐந்தாம் வேற்றுமை
இன் , இல்
6 )
ஆறாம் வேற்றுமை
அது , உடைய
7 )
ஏழாம் வேற்றுமை
கண்
8 )
எட்டாம் வேற்றுமை
( விளி வேற்றுமை )
----- - -
எடுத்துக்காட்டு
2 )
கண்ணனைக் கண்டான்
-
ஐ
-
உருபு
3 )
வாளால் வெட்டினான்
- ஆல்
-
உருபு
4 )
கூலிக்கு வேலை செய்தான்
-
கு
-
உருபு
5 )
மலையின் வீழ் அருவி
-
இன்
-
உருபு
6 )
கம்பரது கவித்திறம்
-
அது
-
உருபு
7 )
அவையின் கண் இருந்தான்
-
கண்
-
உருபு
இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து ( இறுதியில் ) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டுவதைக் கண்டோம் .
தமக்கென்று பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன .
2.2 வினை உருபுகள்
• வினைச்சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் .
வினைச்சொல் பகுதி , விகுதி , சந்தி , சாரியை , இடைநிலை , விகாரம் என்னும் ஆறு உறுப்புகளையும் பெற்றுவரும் .
இவ்வுறுப்புகள் குறைந்து வரும் வினைச்சொற்களும் உண்டு .
என்றாலும் பகுதி , விகுதி , இடைநிலை என்னும் மூன்று உறுப்புகளும் முக்கியமானவை .
பகுதி - வினையை ( செயலை ) க் காட்டும்
இடைநிலை - காலத்தைக் காட்டும்
விகுதி - திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டும்
இங்கு இடைச்சொல் வரிசையில் இரண்டாவதாகச் சொல்லப்படும் வினை உருபுகளாகிய விகுதிகள் பற்றியும் , இடைநிலைகள் பற்றியும் காணலாம் .
2.2.1 வினை விகுதிகள்
ஒருவினைச் சொல்லில் முதலில் இருப்பது பகுதி .
அதனால் பகுதியை முதல் நிலை என்பர் .
விகுதி எப்போதும் சொல்லின் இறுதியில் இருக்கும் .
அதனால் அதனை இறுதி நிலை என்பர் .
பகுதி , விகுதியாகிய முதல் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் இருப்பது இடைநிலை ஆகும் .
வினைச்சொல்லின் விகுதி பால் , இடம் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல்லாகும் .
தன்மை வினைமுற்று விகுதிகளும் , முன்னிலை வினைமுற்று விகுதிகளும் எண் , இடம் என்ற இரண்டை மட்டுமே காட்டும் .
திணையையும் பாலையும் காட்டா .
எடுத்துக்காட்டு
நடந்தேன் -