இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?
தத்தம் பொருளை உணர்த்தி வரும் ஏ , ஓ , என முதலிய இடைச்சொற்கள் , இசைநிறை இடைச்சொற்கள் , அசைநிலை இடைச்சொற்கள் , குறிப்பால் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் ஆகியன குறித்து இப்பாடம் விளக்குகிறது .
இவ்வகை இடைச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறுகிறது .
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?
•
ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்கள் தத்தம் பொருளை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .
•
இசை நிறைக்க வரும் இடைச்சொற்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .
•
செய்யுளில் அசைநிலைச் சொற்களின் இடம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளலாம் .
•
ஒலிக் குறிப்புச் சொற்கள் செய்யுளிலும் வழக்கிலும் பயின்று வரும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம் .
3.0 பாட முன்னுரை
எட்டு வகை இடைச்சொற்களுள் வேற்றுமை உருபுகள் , வினை உருபுகள் , சாரியை உருபுகள் , உவம உருபுகள் என்னும் நான்கு வகை இடைச்சொற்களைப் பற்றி இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம் .
இந்தப் பாடத்தில் எஞ்சிய நான்கு வகை இடைச்சொற்கள் பற்றிக் காணலாம் .
தத்தம் பொருளை உணர்த்தி வருபவை , இசை நிறைக்க வருபவை , அசை நிலையாக வருபவை , குறிப்பால் பொருள் உணர்த்துபவை ஆகிய இடைச்சொற்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம் .
3.1 இடைச்சொல் பொருள்கள்
இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது என்பதை முன்பே அறிவீர்கள் .
பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று , சில இடைச்சொற்கள் சில பொருள்களை உணர்த்தும் .
இவற்றையே தத்தம் பொருளை உணர்த்துவன என நன்னூலார் குறிப்பிடுகின்றார் .
( நூற்பா 421 ) பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவது உண்டு .
தெரிநிலை , தெளிவு , ஐயம் , முற்று , எண் , சிறப்பு , எதிர்மறை , எச்சம் , வினா , விருப்பம் , ஒழிந்தசொல் , பிரிநிலை , கழிவு , ஆக்கம் ஆகியவை அவ் இடைச்சொற்களுக்குரிய பொருள்கள் ஆகும் .
இனி எடுத்துக்காட்டுகள் கொண்டு அவ்விடைச் சொற்கள் உணர்த்தும் பொருள்களைப் புரிந்து கொள்ளலாம் .
3.1.1 ஏகார இடைச்சொல்
ஏகார இடைச்சொல் பிரிநிலை , வினா , எண் , ஈற்றசை , தேற்றம் எனும் பொருள்களை உணர்த்தி நிற்கும் .
இச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் வருவதுண்டு .
எடுத்துக்காட்டு
1 )
பிரிநிலை
இவனே வெற்றி பெற்றான் - இதில் ஏ என்பது பலருள் ஒருவனைப் பிரித்துச் சுட்டுகிறது .
ஆகவே பிரிநிலை .
2 )
வினா
நீயே சொன்னாய் ?
இதில் நீயே என்பது நீயோ என்னும் வினாப் பொருள் உணர்த்துகிறது .
3 )
எண்
அறமே பொருளே இன்பமே வீடே எனப் பொருள் நான்கு - இதில் அறமும் பொருளும் இன்பமும் வீடும் என எண்ணிச் சொல்வதால் ஏ எண்ணுப் பொருள் உணர்த்துகிறது .
4 )
தேற்றம்
செய்யவே செய்தான் .
இதில் ஏ தேற்றப் ( உறுதிப் ) படுத்துகின்றமையால் தேற்றம் ( நிச்சயம் )
5 )
இசை நிறை
ஏயே இவளொருத்தி பேடி !
இதில் வரும் ஏ , ஏ என்பன வேறு பொருள் இல்லாமல் இசையை மட்டும் நிறைத்து நிற்கின்றன .
6 )
ஈற்றசை
‘ எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே ’ ( நன்னூல் , நூற்பா-58 ) - இதில் ஏ ஈற்று அசையாக நிற்கிறது . அதாவது வேறுபொருள் இல்லாமல் வெறும் அசையாக நிற்கிறது .
3.1.2 ஓகார இடைச்சொல்
‘ ஓ ’ என்னும் இடைச்சொல் ஒழியிசை , வினா , சிறப்பு , எதிர்மறை , தெரிநிலை , கழிவு , பிரிநிலை என்னும் பொருள்களில் வரும் .
அசைநிலையாகவும் வரும் .
எடுத்துக்காட்டு
1 )
ஒழியிசை
படிக்கவோ வந்தாய் - இது படிப்பதற்கு வரவில்லை , விளையாட வந்தாய் என்ற ஒழிந்த ( மறைந்திருக்கிற ) பொருளைத் தந்தது .
ஆகவே ஒழியிசை .
2 )
வினா
நீயோ கண்ணன் ?
இதில் ஓ வினாப் பொருளில் வந்தது .
3 )
சிறப்பு
ஓ ஓ கொடியது - இதில் ஓ இழிவு சிறப்புப் பற்றி வந்தது .
( மிக இழிவு )
ஓ ஓ பெரியர் - இதில் ஓ உயர்வு சிறப்புப் பற்றி வந்தது .
( மிக உயர்வு )
4 )
எதிர்மறை
அவனோ கேட்பான் - இதில் அவன் கேட்க மாட்டான் என்று பொருள்படுதலால் ஓ எதிர்மறை .
5 )
தெரிநிலை
அலியை நோக்கி , இது ஆணோ ?
அதுவுமன்று ; பெண்ணோ ?
அதுவுமன்று .
இக்கூற்றில் அலி என்பது தெரியநிற்றலால் ஓ தெரிநிலை .
6 )
கழிவு
ஓ ஓ கெட்டேன் - இதில் கடந்த நிகழ்ச்சிக்கு வருந்துவதால் ஓ கழிவுப் பொருளில் வந்தது .
7 )
பிரிநிலை
இவனோ கொண்டான் - பலருள் ஒருவனைப் பிரித்துக் காட்டுவதால் ஓ பிரிநிலை .
8 )
அசை நிலை
பார்மினோ !
( பாருங்கள் ) இதில் ஓ வேறொரு பொருளுமின்றி அசையாகவே நிற்கிறது .
3.1.3 என , என்று - இடைச்சொற்கள்
என , என்று ஆகிய இந்த இரண்டு இடைச்சொற்களும் வினை , பெயர் , குறிப்பு , இசை , எண் , பண்பு ஆகியவற்றை உணர்த்தும் சொற்களோடு இயைந்து ( சேர்ந்து ) வரும் .
எடுத்துக்காட்டு
1 )
வினை
:
மகன் பிறந்தான் எனத் தந்தை மகிழ்ந்தான் .
மகன் பிறந்தான் என்று தந்தை மகிழ்ந்தான் .
வினையொடு இயைந்து வந்தது .
2 )
பெயர்
: அழுக்காறு என ஒருபாவி - அழுக்காறு என்று ஒருபாவி - இங்கு அழுக்காறு என்னும் பெயரோடு ( பெயர்ச்சொல்லோடு ) இயைந்து வந்தன .
3 )
குறிப்பு
:
‘ பொள்ளென ' ஆங்கே புறம்வேரார் பொள்ளென்று ஆங்கே புறம்வேரார் - பொள் என்ற விரைவுக்குறிப்பு
மொழியோடு இயைந்து வந்தன .
4 )
இசை
:
ஒல்லென ஒலித்தது .
ஒல்லென்று ஒலித்தது .
ஒல் என்ற இசைக்குறிப்புச் சொல்லோடு வந்தன .
5 )
எண்
:
நிலமென நீரென தீயென வளியென வானெனப் பூதங்கள் ஐந்து ’
நிலமென்று நீரென்று தீயென்று வளியென்று வானென்று பூதங்கள் ஐந்து - எண்ணொடு இயைந்தன .
6 )
பண்பு
:
வெள்ளென விடிந்தது .
வெள்ளென்று விடிந்தது - பண்பைக் குறிக்கும் சொல்லோடு இயைந்தன .
3.1.4 உம்மை இடைச்சொல்
உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை , சிறப்பு , ஐயம் , எச்சம் , முற்று , அளவை , தெரிநிலை , ஆக்கம் என்னும் எட்டுப் பொருளில் வரும் .
எடுத்துக்காட்டு
1 )
எதிர்மறை
:
நாள் தவறினும் நாத்தவறான் - இதில் நாள் தவறாது என்று பொருள் படுதலால் உம்மை எதிர்மறை .
2 )
சிறப்பு
:
அறிஞருக்கும் எட்டாப்பொருள் - இதில் பல நூல்களையும் கற்ற அறிஞருக்கும் என்று அறிஞரை உயர்த்துவதால் உயர்வு சிறப்பு
நாயும் தின்னாச் சோறு .
இதில் கக்கியதைத் தின்னும் நாயும் என்று நாயை இழிவு படுத்துவதால் இழிவு சிறப்பு .
3 )
ஐயம்
:
பத்தாயினும் எட்டாயினும் கிடைக்கும் .
இதில் ஒன்றைத் துணிந்து கூறாமையால் ஐயத்தை உணர்த்தியது .
4 )
எச்சம்
:
இராமனும் வருந்தினான் - இதில் இராமன் வருந்துமுன் இலக்குமணனும் வருந்தினான் என்று பொருள் கொண்டால் - இது இறந்தது தழீஇய எச்சவும்மை .
:
இராமன் வருந்திய பின் இலக்குமணனும் வருந்தினான் என்று பொருள் படின் - இது எதிரது தழீஇய எச்சவும்மை .
5 )
முற்று
:
எல்லாரும் வந்தார் - இது முற்றுப் பொருளைத் தருதலால் இது முற்றும்மை . 6 )
எண்
:
நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியுமெனப் பூதம் ஐந்து - இதில் பொருள்களை எண்ணுதலால்
எண்ணும்மை .
7 )
தெரிநிலை
:
அலியை நோக்கி , ‘ ஆணும் அன்று பெண்ணும் அன்று ’ என்று சொன்னால் அலி என்பது தெரிய நிற்றலால் - தெரிநிலை .
8 )
ஆக்கம்
:
தஞ்சாவூர் நகரும் ஆயிற்று - இதில் ஊராயிருந்த தஞ்சாவூர் இப்போது நகரம் ஆயிற்று என்று ஆக்கப்பொருள் தருதலால் - ஆக்கம் .
( வளர்ச்சி )
மேலே நாம் கண்ட முற்றும்மை சில இடங்களில் எச்சப்பொருளைத் தருவதும் உண்டு .
எல்லாரும் வந்திலர் - இதில் சிலர் வந்தனர் என்ற எஞ்சிய பொருள் - எச்சப் பொருள் அமைந்துள்ளது .
3.1.5 சில எண்ணிடைச் சொற்கள்
நாம் இதுவரை அறிந்துள்ள எண் இடைச்சொற்கள் ஏ , ஓ , என , என்று , உம் , ஆகியனவாகும் .
இவற்றுடன் எனா , என்றா , ஓடு , ஒடு ஆகியவையும் எண் இடைச்சொற்களாக வரும் .
இவை பற்றிய சில சிறப்பு இலக்கணங்களைக் காண்போம் .
( அ ) சொற்களிடையே எண் இடைச்சொல் மறைந்து வருவது செவ்வெண் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
கண்ணனும் முருகனும் வந்தனர் என்பதைக் கண்ணன் முருகன் இருவரும் வந்தனர் என உம்மையை நீக்கிச் சொல்வது செவ்வெண் .
இவ்வாறு செவ்வெண் வரும்போது இருவரும் எனும் தொகைச் சொல் இடம் பெறும் .
அதேபோல் ஏ , என்றா , எனா என்னும் எண்ணிடைச் சொற்கள் எண்ணி வரும்போதும் தொகைச்சொல் வரும் .
எடுத்துக்காட்டு :
சாத்தனே கொற்றனே இருவரும் வந்தனர் .
சாத்தன்என்றா கொற்றன்என்றா இருவரும் வந்தனர் .
சாத்தன் எனா கொற்றன்எனா இருவரும் வந்தனர் .
( ஆ ) உம் , என்று , என , ஓடு எனும் இந்நான்கு எண் இடைச்சொற்களும் எண்ணிச் சொல்லும்போது தொகை பெற்றும் வரலாம் .
பெறாமலும் வரலாம் .
எடுத்துக்காட்டு :
சாத்தனும் கொற்றனும் இருவரும் வந்தனர் .
சாத்தனும் கொற்றனும் வந்தனர் .
சாத்தனோடு கொற்றனோடு இருவர் உளர் .
சாத்தனோடு கொற்றனோடு உளர் .
சாத்தனும் கொற்றனும் ஆகிய இருவர் உள்ளனர்
என்பது பொருள்
என்று , என , ஒடு என்னும் இம்மூன்று இடைச்சொற்களும் எண்ணப்படும் பொருள்தோறும் நிற்கும் .
சில சமயங்களில் ஓரிடத்தில் நிலைத்து நின்று , எண்ணப்படும் பொருள்தோறும் சென்றும் பொருந்தும் .
எடுத்துக்காட்டு :
என்று
‘ வினைபகை என்று இரண்டின் எச்சம் ’
( குறள் : 674 )
இதில் என்று என்னும் இடைச்சொல் தான் நின்ற இடத்திலிருந்து பிரிந்து ( விலகி ) வினை என்று , பகை என்று என எண்ணப்படும் பொருள்கள்தோறும் சென்று பொருந்தியது .
என என்பதும் ‘ என்று ’ போலவே செயல்படும் .
‘ பகைபாவம் அச்சம் பழியென நான்கும் ’
( குறள் : 146 )
இங்கே , என - என்பது ஓரிடத்தில் நின்று பகையென , பாவமென , அச்சமென , பழியென , என்று எண்ணப்படும் பொருள்தோறும் சென்று பொருந்தியது .
ஒடு ‘ பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் ’