6

ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்கள் இலக்கியங்களிலும் வழக்குகளிலும் எவ்வெப் பொருள்களில் பயின்று வந்துள்ளன என்பது விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது .

ஒலிக்குறிப்புச் சொற்கள் சில இன்று புதிதாக வழக்கில் வந்துள்ளன .

இவற்றையெல்லாம் இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

அந்தில் அசைநிலையாக வரும் எடுத்துக்காட்டைச் சுட்டுக .

[ விடை ]

2 )

அது மற்றம்ம - என்பதில் அம்ம இடைச்சொல் எந்தப் பொருளில் வந்துள்ளது ?

[ விடை ]

3 )

மா என்னும் இடைச்சொல் எவ்விடத்து வரும் ?

[ விடை ]

4 )

முன்னிலை இடத்து வரும் அசைச்சொற்கள் நான்கினைக் கூறுக .

[ விடை ]

5 )

ஒலிக்குறிப்புச் சொல் என்றால் என்ன ?

[ விடை ]

6 )

திடீரென மறைந்து விட்டான் - இதில் வரும் குறிப்புச் சொல் என்ன பொருளைத் தருகின்றது ?

[ விடை ]

பாடம் - 4

A02134 உரிச்சொல்லின் பொது இலக்கணம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது .

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

• உரிச்சொல்லின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம் .

• உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகளை அறிந்து கொள்ளலாம் .

• உயிர் அல்லாத பொருள்களின் குணப்பண்புகளையும் தெரிந்து கொள்ளலாம் .

4.0 பாட முன்னுரை

பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள் .

சென்ற பாடத்தில் ‘ இடைச்சொல் ’ குறித்து விளக்கப்பட்டது .

இந்தப் பாடத்தில் உரிச்சொல் பற்றிக் கூறப்படுகிறது .

4.1 உரிச்சொல்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் .

உரி என்பது உரிய ( உரிமை ) என்ற பொருளைத் தருவதாகும் .

உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும் .

உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும் .

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள் .

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும் .

4.1.1 உரிச்சொல்லின் பொது இலக்கணம்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார் ,

பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி

ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

என்று தமது நன்னூலில் ( நூற்பா 442 ) குறிப்பிடுகின்றார் .

1 . உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும் .

2 .

ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம் ; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம் .

3 .

உரிச்சொல் , பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும் .

4 .

உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும் .

எடுத்துக்காட்டு :

நனி பேதை

-

நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது .

நனி = மிகுதி , பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்

-

சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது .

சால = மிகவும்

மல்லல் ஞாலம்

-

மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும் .

கடி மலர்

கடி நகர்

-

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர் .

காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது .

4.1.2 உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்

உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும் .

அவை :

1 .

குணப் பண்பு

2 .

தொழிற் பண்பு

உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க் கண்டோம் .

அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது குணப்பண்பு ஆகும் .

எடுத்துக்காட்டு :

மாதர் வாள் முகம்

இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை உணர்த்துகிறது .

( மாதர் = விரும்பத்தக்க , வாள் முகம் = ஒளிமிக்க முகம் )

இமிழ் கடல்

இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது .

4.2 உயிர்ப்பொருள் , உயிர் அல்லாத பொருள்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் .

இனி உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் விளக்கங்களைக் காண்போம் .

4.2.1

உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின்

பகுப்பு

ஓரறிவு உயிர் முதலாக ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள அனைத்தும் உயிர் உடைய பொருள்கள் ஆகும் .

இலக்கண நூலார் உயிர்களை ‘ அறிதல் உணர்வு ’ அடிப்படையில் பகுத்துள்ளனர் .

மெய்யால் அதாவது உடம்பால் உற்று உணரும் உணர்ச்சி மட்டுமே கொண்ட உயிரினங்கள் ஓரறிவு உடையவாகும் .

மெய்யோடு நாக்கு , மூக்கு , கண் , செவி ஆகிய ஐம்பொறிகளாலும் அறியும் ஆற்றலுடைய மனித உயிர்களை ஐந்து அறிவு உடையவாகும் என்கிறார் நன்னூலார் .

தொல்காப்பியர் மனம் என்பதையும் ஓர் அறிவாகக் கொண்டு அதனை ஆறாவது அறிவு என்று கூறுகின்றார் . உயிர் இல்லாத உடம்பு முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அற்ற பொருள்களாகும் .

இதுவரை உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு முறையை அறிந்து கொண்டீர்கள் .

இனி அவ்விரு பொருள்களின் வகைகளை விரிவாகக் காண்போம் .

4.3 உயிர் உடைய பொருள் வகைகள்

உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம் .

இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம் .

• ஓர் அறிவு உயிர்

மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள் .

எடுத்துக்காட்டு : செடி , கொடி , புல் , மரம்

• ஈரறிவுயிர் ( இரண்டு அறிவு உயிர் )

மெய் உணர்வோடு , சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும் .

எடுத்துக்காட்டு : சிப்பி , சங்கு

• மூவறிவுயிர் ( மூன்று அறிவு உயிர் )

மெய் , நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை ( வாசனை ) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள் .

எடுத்துக்காட்டு : கறையான் , எறும்பு

• நாலறிவுயிர் ( நான்கு அறிவு உயிர் )

மெய் , நாக்கு , மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை .

எடுத்துக்காட்டு : தும்பி , வண்டு

• ஐயறிவுயிர் ( ஐந்து அறிவு உயிர் )

மெய் , நாக்கு , மூக்கு , கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும் .

எடுத்துக்காட்டு : விலங்குகள் , பறவைகள் , மனிதர்

இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

உரிச்சொல் என்றால் என்ன ?

[ விடை ]

2 )

உரிச்சொல்லின் இயல்பு யாது ?

[ விடை ]

3 )

பண்பு எனப்படுவது யாது ?

[ விடை ]

4 )

உயிர்ப்பொருள்கள் எத்தனை வகைப்படும் ?

[ விடை ]

5 )

மூன்றறிவு உடைய உயிர்களுள் ஒன்றினைக் கூறுக .

[ விடை ]

4.4 உயிர் உடைய பொருள்களின் பண்புகள்

இப்பகுதியில் உயிர் உடைய பொருள்களின் பண்புகள் விளக்கப்படுகின்றன .

அதாவது , உயிர் உடைய பொருள்களின் பொதுவான குணங்களும் அவற்றிற்கு உரிய தொழில் பண்புகளும் ( செய்கைகள் ) விளக்கப்படுகின்றன .

4.4.1 உயிர் உடைய பொருள்களின் குணப்பண்புகள்

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் ( நூற்பா 452 )

அவையாவன : அறிவு , அருள் , ஆசை , அச்சம் , மானம் , நிறைவு , பொறை , ( பொறுமை ) ஓர்ப்பு ( தெளிவு ) , கடைப்பிடி , மையல் ( மயக்கம் ) , நினைவு , வெறுப்பு , உவப்பு ( மகிழ்வு ) , இரக்கம் , நாண் , வெகுளி ( கோபம் ) , துணிவு , அழுக்காறு ( பொறாமை ) , அன்பு , எளிமை , எய்த்தல் ( சோர்வு ) , துன்பம் , இன்பம் , இளமை , மூப்பு , இகல் ( பகை ) , வென்றி ( வெற்றி ) , பொச்சாப்பு ( பொல்லாங்கு ) , ஊக்கம் , மறம் , மதம் ( வெறி ) , மறவி ( மறதி ) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும் .

4.4.2

உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள்

உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் ( குணங்கள் ) ஐந்து .

அவையாவன :

துய்த்தல் ( அனுபவித்தல் ) , துஞ்சல் ( தூங்குதல் ) , தொழுதல் , அணிதல் , உய்த்தல் ( பிழைத்தல் ) ஆகிய இக்குணங்கள் ஐந்தும் எல்லா உயிர் உடைய பொருள்களுக்கும் பொதுவானவையாகும் .

( நன்னூல் , 453 ) இனி உயிர் அற்ற பொருள்களின் பண்புகளையும் உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களுக்கு உரிய பொதுவான தொழில் பண்புகளையும் பார்ப்போம் .

4.5 உயிர் அல்லாத பொருள்களின் குணப் பண்புகள்

உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம் , இருகோணம் , முக்கோணம் , சதுரம் முதலிய பலவகை வடிவங்களும் , நறுநாற்றம் , துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும் , வெண்மை , செம்மை ( சிவப்பு ) , கருமை , பொன்மை ( மஞ்சள் ) , பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும் , கைப்பு ( கசப்பு ) , புளிப்பு , துவர்ப்பு , உவர்ப்பு , கார்ப்பு ( காரம் ) , இனிப்பு என்னும் ஆறு சுவைகளும் , வெம்மை ( வெப்பம் ) , தண்மை ( குளிர்ச்சி ) , மென்மை , வன்மை , நொய்மை ( நைதல் ) , திண்மை , இழுமெனல் ( வழவழப்பு ) , சருச்சரை ( சொரசொரப்பு ) என்னும் எட்டு ஊறுகளும் ( தொடு உணர்வுகளும் ) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும் .

( நன்னூல் , 454 )

4.5.1

உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பொதுவான தொழில் பண்புகள்

உயிர் உடைய பொருள்களுக்கும் உயிர் அற்ற பொருள்களுக்கும் உரிய பொதுவான தொழில் பண்புகளை இங்கே காண்போம் .

உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும் .

( நன்னூல் , 455 )

‘ தோன்றல் , மறைதல் , வளர்தல் , சுருங்கல் , நீங்கல் , அடைதல் , நடுங்கல் , இசைத்தல் , ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும் .

இசைத்தல் = ஒலித்தல்

எடுத்துக்காட்டு :

‘ பிள்ளை பிறந்தான் ’ - தோன்றல் எனும் தொழில் பண்பு

பிள்ளை எனும் உயிர்ப்பொருளுக்கு வளர்தல் போன்ற ஏனைய தொழில் பண்புகளும் பொருந்தி வருவதைக் காணுங்கள் .

அடுத்து , உயிர் அற்ற பொருள்களுக்கும் மேற்கூறியுள்ள பண்புகள் உள்ளன என்பதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம் .

எடுத்துக்காட்டு :

பிறை தோன்றிற்று - தோன்றல் எனும் தொழிற்பண்பு

மழை கொடுத்தது - ஈதல் எனும் தொழிற்பண்பு

உயிர் அல்லாத பல்வேறு பொருள்களுக்கும் மேற்கூறிய பண்புகள் பொருந்தி வருவதை நீங்களே சொல்லிப் பாருங்கள் .

4.6 தொகுப்புரை

இப்பாடம் உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது .

உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்றும் அவை பெயர் , வினைகளைத் தழுவி வருபவை என்றும் தெரிவிக்கிறது .

குணப்பண்பு , தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை உரிச்சொற்கள் .

அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும் பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும் .

உயிர் உடைய பொருள்களின் வகைகளையும் அவற்றின் குணப்பண்புகளையும் தொழில் பண்புகளையும் தெளிவாக்கியிருக்கிறது .

உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும் , உயிர் உடையது மற்றும் உயிர் அற்றது ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் இப்பாடம் விளக்கியிருக்கிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எத்தனை ?

[ விடை ]

2 )

உயிர்ப் பொருள்களின் தொழில் பண்புகள் யாவை ?

[ விடை ]

3 )

ஆறுசுவைகளும் எவ்வகைப் பொருளின் குணப்பண்புகள் ?

[ விடை ]

4 )

இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகள் யாவை ?

[ விடை ]

5 )

உயிர் அல்லாத பொருள்கள் எவை ?

[ விடை ]

பாடம் - 5

A02135 : உரிச்சொல் வகைகள் - I

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

உரிச்சொல் வகைகளைச் சுட்டிக் காட்டுகிறது .

ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது .

ஒரு குணம் தழுவிய உரிச்சொற்களைச் சான்றுகளுடன் விளக்குகிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

• ஒரு குணம் தழுவிய உரிச்சொற்களாகச் சொல்லப்பட்டு உள்ளவைகளைத் தெரிந்து கொள்ளலாம் .