•
ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள் செய்யுள்களில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம் .
5.0 பாட முன்னுரை
உரிச்சொல் , ஒரு குணம் குறித்த உரிச்சொல் , பல குணம் குறித்த உரிச்சொல் என இரண்டு வகைப்படும் என்பதை முன்னரே கண்டோம் .
இந்தப் பாடத்தில் ஒருகுணம் குறித்த உரிச்சொல் பற்றிய விளக்கங்களைக் காண்போம் .
திரிசொல் என்னும் சொல்வகை பற்றி முன்பு படித்திருக்கிறீர்கள் .
இத்திரிசொற்களும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் , பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும் .
திரிசொற்களுள் பெயர் , வினை , இடை , உரி என நால்வகைச் சொற்களும் உண்டு .
இங்கு நாம் காண்பது ஒரு பொருள் குறித்து வரும் பல உரிச்சொற்களை மட்டுமேயாகும் .
5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள்
பல உரிச்சொற்கள் ஒரே குணம் ( பொருள் ) குறித்து வருவது உண்டு .
மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் , சொல் என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் ஓசை என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் நன்னூலார் வரிசைப்படுத்திக் கூறுகிறார் .
5.1.1 மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்
‘ சால உறுதவ நனிகூர் கழிமிகல் ’
( நன்னூல் , நூற்பா 456 )
சால , உறு , தவ , நனி , கூர் , கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘ மிகுதி ’ என்னும் ஒருகுணத்தை ( பொருளை ) உணர்த்தும் சொற்களாகும் .
இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன .
உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்பது உங்களுக்குத் தெரியும் .
இவ் உரிச்சொற்கள் செய்யுளில் ‘ மிகுதி ’ என்ற பொருளில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை இனிக் காண்போம் .
• சால என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ சாலவும் நன்று ” - மிகவும் நல்லது
• உறு என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ உறு பொருள் கொடுத்தும் ” ( மிகுதியான பொருளைக் கொடுத்தும் )
• தவ என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ ஈயாது வீயும் உயிர் தவப் பலவே ”
( பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர் )
• நனி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின் ”
( கல்லாதவர்களும் மிக நல்லவர்களே , கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால் )
• கூர் என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ களி கூர் மனம் ” ( மகிழ்ச்சி மிகுந்த மனம் )
இன்றைய எழுத்து வழக்கிலும் ‘ அன்பு கூர்ந்து ’ , ‘ அருள் கூர்ந்து ’ என வருவதைக் காணலாம் .
• கழி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ கழி பேருவகை ” ( மிகப் பெரும் மகிழ்ச்சி )
செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘ கழி நெடிலடி ’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள் .
மேற்காட்டிய சான்றுகளில் இடம் பெற்ற உரிச்சொற்கள் மிகுதி என்னும் பொருளைக் குறிப்பதைத் தெரிந்து கொண்டீர்கள் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 )
உரிச்சொல் எத்தனை வகைப்படும் ?
அவை யாவை ?
[ விடை ]
2 ) ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன ?
[ விடை ]
3 )
மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொற்கள் எத்தனை ?
[ விடை ]
4 )
கழி என்னும் உரிச்சொல்லைச் சான்றுடன் விளக்குக ?
[ விடை ]
5.1.2 சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்
‘ சொல் ’ என்னும் பெயர்ச்சொல் வார்த்தை எனப் பொருள் படும் .
சொல் என்னும் வினைச் சொல்லுக்குச் சொல்வாய் என்பது பொருள் .
செய்யுளில் சொல் என்பதைக் குறிக்கப் பல உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .
நன்னூலார் சொல் என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற பதினாறு உரிச்சொற்களைக் கூறியுள்ளார் .
( நூற்பா , 458 ) அவையாவன :
மாற்றம் , நுவற்சி , செப்பு , உரை , கரை , நொடி , இசை , கூற்று , புகறல் , மொழி , கிளவி , விளம்பு , அறை , பாட்டு , பகர்ச்சி , இயம்பல் .
இப்பதினாறு உரிச்சொற்களும் செய்யுளில் பயின்று வந்துள்ளன .
அவற்றுள் சிலவற்றை விளக்கமாகக் காண்போம் .
• மாற்றம் என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து ” ( கோவலர்களின் வாய்ச்சொல்லை உணர்ந்து )
• நுவற்சி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ பொழுதறிந்து நுவல் ” ( காலம் அறிந்து சொல் )
• செப்பு என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ செப்பலுற்றேன் ” ( சொன்னேன் )
• உரை என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ உரைப்பார் உரைப்பவை எல்லாம் ” ( சொல்வார் சொல்பவை எல்லாம் )
• கரை என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ அறங்கரை நாவின் ” ( அறத்தைச் சொல்கின்ற நாவினையுடைய )
• நொடி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு
“ ஆயிழையார் தாம் நொடியும் ( பெண்கள் சொல்லும் )
• இசை என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ இசைத்தவை எல்லாம் ” ( சொன்னவை எல்லாம் )
• கூற்று என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை ” ( நடந்ததை நாங்கள் சொல்ல உணர்ந்தாய் )
• புகறல் என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ புகன்ற அன்றியும் ” ( சொன்னவை அல்லாமலும் )
• மொழி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
” கண்டது மொழிமோ ” ( கண்ட உண்மையைச் சொல்வாயாக )
• கிளவி என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ கிளக்கும் கிளவி ” ( சொல்லும் சொல் ) • விளம்பு என்னும் உரிச்சொல்
“ விளம்பினர் புலவர் ” ( புலவர்கள் சொன்னார்கள் )
• அறை என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே ! ”
இதன்பொருள் ‘ இறைவன் அடியைத் தொழுது சொல் இலக்கணத்தைச் சொல்லுவேன் என்பதாகும் .
அறைகுவன் என்றால் சொல்லுவேன் என்று பொருள் .
• பாட்டு என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ அறம் பாடின்று ” அறநூல் சொல்லிற்று என்பது பொருள் .
• பகர்ச்சி எனும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
“ பகர்ந்தனர் புலவர் ” புலவர்கள் சொன்னார்கள் என்பது பொருள்
• இயம்பல் என்னும் உரிச்சொல்
எடுத்துக்காட்டு :
‘ இடிபோல இயம்பினானே ’
இத்தொடரின் பொருள் ‘ இடியைப் போல உரத்துச் சொன்னான் என்பதாகும் .
மேலே நாம் கண்ட செய்யுள் எடுத்துக்காட்டுகளில் சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களை விளக்கமாகக் கண்டோம் .
இனி ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களைத் தெரிந்து கொள்வோம் .
5.1.3 ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்
ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் 22 ஆகும் .
( நன்னூல் நூற்பா - 459 ) அவையாவன : - முழக்கு , இரட்டு , ஒலி , கலி , இசை , துவை , பிளிறு , இரை , இரங்கு , அழுங்கு , இயம்பல் , இமிழ் , குளிறு , அதிர் , குரை , கனை , சிலை , சும்மை , கௌவை , கம்பலை , அரவம் , ஆர்ப்பு .
இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம் .
உரிச்சொல்
எடுத்துக்காட்டு
விளக்கம்
முழக்கு
“ முழங்கு முந்நீர் ”
ஓசையிடும் கடல்
இரட்டு
“ குடிஞை இரட்டும் ”
ஆந்தை ஒலிக்கும்
ஒலி
“ ஒலி புனல் ஊரன் “
ஒலிக்கும் நீரை
உடைய ஊர்த் தலைவன்
கலி
“ கலி கெழு மூதூர் ”
ஓசைமிக்க பழைய
ஊர்
இசை
“ பறை இசை அருவி ”
பறைபோல்
ஒலிக்கும் அருவி
துவை
“ பல்லியம் துவைப்ப ”
பலவாத்தியங்களும்
ஒலிக்க
பிளிறு
“ பிளிறு வார் முரசு ” ஒலிக்கும் முரசு
இரை
“ இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் ”
ஒலிக்கும் பறவைகள்
இரங்கு
“ இரங்கும் முரசு ”
ஒலிக்கும் முரசு
அழுங்கு
“ அழுங்கல் மூதூர் ”
ஒலிக்கும் மூதூர்
இயம்பல்
“ முரசியம்பின ”
முரசுகள் ஒலித்தன
இமிழ்
“ இமிழ் கடல் ”
ஒலிக்கும் கடல்
குளிறு
“ குளிறு முரசம் ”
ஒலிக்கும் முரசு
அதிர்
“ அதிரும் கார் ”
மேகம் ஒலிக்கும்
குரை
“ குரைபுனல் ஆறு ”
ஒலிக்கும்
நீரையுடைய ஆறு
கனை
“ கனை கடல் ”
ஒலிக்கும் கடல்
சிலை
“ சிலைந்தார் முரசம் ”
ஒலிக்கும் முரசம்
சும்மை
“ சும்மை மிகு தக்கண நாடு ”
ஒலிமிகுந்த தென்னாடு
கௌவை
“ கௌவையோ பெரிதே ”
ஒலி பெரிதாயுள்ளது
கம்பலை
“ வினைக்கம்பலை ”
தொழிலின் ஓசைகள்
அரவம்
“ அரவத் தானை ”
ஒலிமிகுந்த சேனை
ஆர்ப்பு
“ ஆர்த்த பல்லியம் “
ஒலித்த பல
வாத்தியங்கள்
இதுவரை ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களைச் செய்யுள் எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கமாகக் கண்டோம் .
5.2 தொகுப்புரை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்களை விளக்கமாகப் பார்த்தோம் .