7

ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள் செய்யுள்களில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம் .

5.0 பாட முன்னுரை

உரிச்சொல் , ஒரு குணம் குறித்த உரிச்சொல் , பல குணம் குறித்த உரிச்சொல் என இரண்டு வகைப்படும் என்பதை முன்னரே கண்டோம் .

இந்தப் பாடத்தில் ஒருகுணம் குறித்த உரிச்சொல் பற்றிய விளக்கங்களைக் காண்போம் .

திரிசொல் என்னும் சொல்வகை பற்றி முன்பு படித்திருக்கிறீர்கள் .

இத்திரிசொற்களும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் , பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும் .

திரிசொற்களுள் பெயர் , வினை , இடை , உரி என நால்வகைச் சொற்களும் உண்டு .

இங்கு நாம் காண்பது ஒரு பொருள் குறித்து வரும் பல உரிச்சொற்களை மட்டுமேயாகும் .

5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள்

பல உரிச்சொற்கள் ஒரே குணம் ( பொருள் ) குறித்து வருவது உண்டு .

மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் , சொல் என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் ஓசை என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் நன்னூலார் வரிசைப்படுத்திக் கூறுகிறார் .

5.1.1 மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்

‘ சால உறுதவ நனிகூர் கழிமிகல் ’

( நன்னூல் , நூற்பா 456 )

சால , உறு , தவ , நனி , கூர் , கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘ மிகுதி ’ என்னும் ஒருகுணத்தை ( பொருளை ) உணர்த்தும் சொற்களாகும் .

இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன .

உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்பது உங்களுக்குத் தெரியும் .

இவ் உரிச்சொற்கள் செய்யுளில் ‘ மிகுதி ’ என்ற பொருளில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை இனிக் காண்போம் .

• சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ சாலவும் நன்று ” - மிகவும் நல்லது

• உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ உறு பொருள் கொடுத்தும் ” ( மிகுதியான பொருளைக் கொடுத்தும் )

• தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ ஈயாது வீயும் உயிர் தவப் பலவே ”

( பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர் )

• நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின் ”

( கல்லாதவர்களும் மிக நல்லவர்களே , கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால் )

• கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ களி கூர் மனம் ” ( மகிழ்ச்சி மிகுந்த மனம் )

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘ அன்பு கூர்ந்து ’ , ‘ அருள் கூர்ந்து ’ என வருவதைக் காணலாம் .

• கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ கழி பேருவகை ” ( மிகப் பெரும் மகிழ்ச்சி )

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘ கழி நெடிலடி ’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள் .

மேற்காட்டிய சான்றுகளில் இடம் பெற்ற உரிச்சொற்கள் மிகுதி என்னும் பொருளைக் குறிப்பதைத் தெரிந்து கொண்டீர்கள் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 )

உரிச்சொல் எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

[ விடை ]

2 ) ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன ?

[ விடை ]

3 )

மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொற்கள் எத்தனை ?

[ விடை ]

4 )

கழி என்னும் உரிச்சொல்லைச் சான்றுடன் விளக்குக ?

[ விடை ]

5.1.2 சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்

‘ சொல் ’ என்னும் பெயர்ச்சொல் வார்த்தை எனப் பொருள் படும் .

சொல் என்னும் வினைச் சொல்லுக்குச் சொல்வாய் என்பது பொருள் .

செய்யுளில் சொல் என்பதைக் குறிக்கப் பல உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .

நன்னூலார் சொல் என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற பதினாறு உரிச்சொற்களைக் கூறியுள்ளார் .

( நூற்பா , 458 ) அவையாவன :

மாற்றம் , நுவற்சி , செப்பு , உரை , கரை , நொடி , இசை , கூற்று , புகறல் , மொழி , கிளவி , விளம்பு , அறை , பாட்டு , பகர்ச்சி , இயம்பல் .

இப்பதினாறு உரிச்சொற்களும் செய்யுளில் பயின்று வந்துள்ளன .

அவற்றுள் சிலவற்றை விளக்கமாகக் காண்போம் .

• மாற்றம் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து ” ( கோவலர்களின் வாய்ச்சொல்லை உணர்ந்து )

• நுவற்சி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ பொழுதறிந்து நுவல் ” ( காலம் அறிந்து சொல் )

• செப்பு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ செப்பலுற்றேன் ” ( சொன்னேன் )

• உரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ உரைப்பார் உரைப்பவை எல்லாம் ” ( சொல்வார் சொல்பவை எல்லாம் )

• கரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ அறங்கரை நாவின் ” ( அறத்தைச் சொல்கின்ற நாவினையுடைய )

• நொடி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு

“ ஆயிழையார் தாம் நொடியும் ( பெண்கள் சொல்லும் )

• இசை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ இசைத்தவை எல்லாம் ” ( சொன்னவை எல்லாம் )

• கூற்று என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை ” ( நடந்ததை நாங்கள் சொல்ல உணர்ந்தாய் )

• புகறல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ புகன்ற அன்றியும் ” ( சொன்னவை அல்லாமலும் )

• மொழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

” கண்டது மொழிமோ ” ( கண்ட உண்மையைச் சொல்வாயாக )

• கிளவி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ கிளக்கும் கிளவி ” ( சொல்லும் சொல் ) • விளம்பு என்னும் உரிச்சொல்

“ விளம்பினர் புலவர் ” ( புலவர்கள் சொன்னார்கள் )

• அறை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே ! ”

இதன்பொருள் ‘ இறைவன் அடியைத் தொழுது சொல் இலக்கணத்தைச் சொல்லுவேன் என்பதாகும் .

அறைகுவன் என்றால் சொல்லுவேன் என்று பொருள் .

• பாட்டு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ அறம் பாடின்று ” அறநூல் சொல்லிற்று என்பது பொருள் .

• பகர்ச்சி எனும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

“ பகர்ந்தனர் புலவர் ” புலவர்கள் சொன்னார்கள் என்பது பொருள்

• இயம்பல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு :

‘ இடிபோல இயம்பினானே ’

இத்தொடரின் பொருள் ‘ இடியைப் போல உரத்துச் சொன்னான் என்பதாகும் .

மேலே நாம் கண்ட செய்யுள் எடுத்துக்காட்டுகளில் சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களை விளக்கமாகக் கண்டோம் .

இனி ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களைத் தெரிந்து கொள்வோம் .

5.1.3 ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்

ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் 22 ஆகும் .

( நன்னூல் நூற்பா - 459 ) அவையாவன : - முழக்கு , இரட்டு , ஒலி , கலி , இசை , துவை , பிளிறு , இரை , இரங்கு , அழுங்கு , இயம்பல் , இமிழ் , குளிறு , அதிர் , குரை , கனை , சிலை , சும்மை , கௌவை , கம்பலை , அரவம் , ஆர்ப்பு .

இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம் .

உரிச்சொல்

எடுத்துக்காட்டு

விளக்கம்

முழக்கு

“ முழங்கு முந்நீர் ”

ஓசையிடும் கடல்

இரட்டு

“ குடிஞை இரட்டும் ”

ஆந்தை ஒலிக்கும்

ஒலி

“ ஒலி புனல் ஊரன் “

ஒலிக்கும் நீரை

உடைய ஊர்த் தலைவன்

கலி

“ கலி கெழு மூதூர் ”

ஓசைமிக்க பழைய

ஊர்

இசை

“ பறை இசை அருவி ”

பறைபோல்

ஒலிக்கும் அருவி

துவை

“ பல்லியம் துவைப்ப ”

பலவாத்தியங்களும்

ஒலிக்க

பிளிறு

“ பிளிறு வார் முரசு ” ஒலிக்கும் முரசு

இரை

“ இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் ”

ஒலிக்கும் பறவைகள்

இரங்கு

“ இரங்கும் முரசு ”

ஒலிக்கும் முரசு

அழுங்கு

“ அழுங்கல் மூதூர் ”

ஒலிக்கும் மூதூர்

இயம்பல்

“ முரசியம்பின ”

முரசுகள் ஒலித்தன

இமிழ்

“ இமிழ் கடல் ”

ஒலிக்கும் கடல்

குளிறு

“ குளிறு முரசம் ”

ஒலிக்கும் முரசு

அதிர்

“ அதிரும் கார் ”

மேகம் ஒலிக்கும்

குரை

“ குரைபுனல் ஆறு ”

ஒலிக்கும்

நீரையுடைய ஆறு

கனை

“ கனை கடல் ”

ஒலிக்கும் கடல்

சிலை

“ சிலைந்தார் முரசம் ”

ஒலிக்கும் முரசம்

சும்மை

“ சும்மை மிகு தக்கண நாடு ”

ஒலிமிகுந்த தென்னாடு

கௌவை

“ கௌவையோ பெரிதே ”

ஒலி பெரிதாயுள்ளது

கம்பலை

“ வினைக்கம்பலை ”

தொழிலின் ஓசைகள்

அரவம்

“ அரவத் தானை ”

ஒலிமிகுந்த சேனை

ஆர்ப்பு

“ ஆர்த்த பல்லியம் “

ஒலித்த பல

வாத்தியங்கள்

இதுவரை ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களைச் செய்யுள் எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கமாகக் கண்டோம் .

5.2 தொகுப்புரை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்களை விளக்கமாகப் பார்த்தோம் .