8

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் ஆறு உரிச்சொற்களை விளங்கிக் கொண்டீர்கள் .

சொல் என்னும் குணத்தை உணர்த்தும் பதினாறு உரிச்சொற்களின் விளக்கங்களை அறிந்து கொண்டீர்கள் .

ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் இருபத்திரண்டு உரிச்சொற்களைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை ?

[ விடை ]

2 )

நொடி என்னும் சொல் எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொல் ?

[ விடை ]

3 )

காமம் செப்பாது கண்டது மொழிமோ - இத்தொடரில் இடம் பெற்றுள்ள உரிச்சொற்கள் யாவை ?

[ விடை ]

4 )

ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை ?

[ விடை ]

5 )

ஒலி , கலி - எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ?

[ விடை ]

பாடம் - 6

A02136 உரிச்சொல் வகைகள் - II

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

உரிச்சொல் வகைகளுள் ஒன்றாகிய பலகுணம் தழுவிய உரிச்சொல் குறித்து விளக்குகிறது .

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிவிக்கிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .

‘ கடி ’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பல பொருள்களை விளங்கிக் கொள்ளலாம் .

‘ கடி ’ என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் .

உரிச்சொல்லின் இன்றியமையா இலக்கணக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம் .

6.0 பாட முன்னுரை

பொருள்களின் பண்புகள் குணப்பண்பு , தொழிற்பண்பு என இருவகையாகப் பகுத்துச் சொல்லப்படுவதை முன்னர் அறிந்தோம் .

அப்பண்புகளைக் குறிப்பவையே உரிச்சொற்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம் .

அவற்றுள் சில உரிச்சொற்கள் ஒரு குணத்தைக் குறித்து வரும் .

அவை ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல் எனப்படும் .

வேறு சில உரிச்சொற்களுள் ஒரு சொல்லே பலகுணம் குறித்து வரும் .

அவை பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் எனப்படும் என்பதை அறிவீர்கள் .

சென்ற பாடத்தில் ஓரு குணம் தழுவிய பல உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கண்டோம் .

இனி , இந்தப் பாடத்தில் பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் குறித்த இலக்கண விளக்கங்களைக் காண்போம் .

முன்பு நீங்கள் பயின்ற திரிசொல் ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும் , பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் வருவது பற்றி நீங்கள் அறிவீர்கள் .

திரிசொல் , பெயர் , வினை , இடை , உரி என நால்வகைச் சொற்களிலும் உண்டு .

இங்கு நாம் காண இருப்பது பலபொருள் தரும் ஓர் உரிச்சொல்லை மட்டுமே ஆகும் .

6.1 பலகுணம் தழுவிய உரிச்சொல்

பல குணம் தழுவிய உரிச்சொல்லின் இலக்கணத்தை நன்னூல் விளக்குகிறது .

கடிஎன் கிளவி காப்பே கூர்மை

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்

வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்

( நன்னூல் 457 )

இதன் பொருள் : கடி என்னும் உரிச்சொல் காவல் , கூர்மை , விரை ( வாசனை ) , விளக்கம் ( பிரகாசம் ) , அச்சம் , சிறப்பு , விரைவு , மிகுதி , புதுமை , ஆர்த்தல் ( ஒலித்தல் ) , வரைவு ( நீக்கல் ) , மன்றல் ( திருமணம் ) , கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும் .

கடி என்னும் ஓர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தருதலால் இது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும் .

இனி , இவ் உரிச்சொல்லை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாகக் காண்போம் .

6.1.1 கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள்

கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் செய்யுளில் பயின்று வந்துள்ளதைச் சான்றுகளுடன் பார்ப்போம் .

• காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து .

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது .

• கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு .

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது .

• விரை

விரை என்றால் வாசனை ( மணம் ) என்று பொருள் .

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது .

• விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி , பிரகாசம் எனும் பொருள் தருவது .

‘ கண்ணாடி அன்ன கடி மார்பன் ’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன் .

கடிமார்பன் என்பதில் கடி , விளக்கம் என்ற பொருளில் வருகிறது .

• அச்சம்

‘ கடி யாமம் காக்கும் கைவிளக்கு ’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள் .

இங்குக் கடி , அச்சம் எனும் பொருளில் வருகிறது .

( யாமம் = நள்ளிரவு )

• சிறப்பு

‘ கடி அரண் ’

வலிமையான கோட்டை என்பது பொருள் .

இங்குக் கடி என்பது சிறப்பு ( வலிமை ) எனும் பொருளில் வருகிறது .

• விரைவு

விரைவு = வேகம் .

‘ எம் அம்பு கடி விடுதும் ’

இத்தொடரின் பொருள் , எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம் .

இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது .

• மிகுதி

‘ கடுங்கால் ஒற்றலின் ’

மிகுதியான ( கடுமையான ) காற்று வீசுவதால் என்பது பொருள் .

இங்குக் கடி ( கடும் ) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது .

• புதுமை

‘ கடி மணச் சாலை ’

புதுமை மணம் நிறைந்த இடம் .

இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது .

• ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள் .

‘ கடி முரசு ’ = ஒலிக்கும் முரசு .

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது .

• வரைவு வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள் .

‘ கடிமது நுகர்வு ’

கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல் .

இத்தொடரில் கடி , விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது .

• மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள் .

‘ கடிவினை முடுகு இனி ’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள் .

இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது .

• கரிப்பு

கரிப்பு , காரச் சுவையைக் குறிக்கும் .

கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு .

‘ கடிமிளகு தின்ற கல்லா மந்தி ’

கடிமிளகு = காரமான மிளகு .

காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள் .

இங்குக் கடி , கார்ப்பு எனும் பொருளில் வந்தது .

இவ்வாறு , கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் பார்த்தோம் .

இனிக் கடி என்னும் சொல் திரிபு பெற்று வழக்கில் இருப்பதைக் காண்போம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 )

பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன ?

[ விடை ]

2 )

கடி என்னும் உரிச்சொல் எத்தனை பொருள்களில் வரும் ?

[ விடை ]

3 )

‘ கடி நுனைப் பகழி ’ - விளக்குக

[ விடை ]

4 )

கடி என்னும் சொல்லுக்கு ஆர்த்தல் என்ற பொருளும் உண்டு - விளக்குக .

[ விடை ]

6.1.2 கடி என்னும் உரிச்சொல் திரிபு

கடி என்னும் உரிச்சொல் ‘ கடு ’ என்று திரிந்து வேறு சில பொருள்களையும் உணர்த்தும் .

கடு என்னும் சொல் இன்றும் வழக்கில் உள்ளது .

எடுத்துக்காட்டு :

கடுஞ்சூல்

=

முதல் சூல்

கடு என்னும் சொல் முதல் என்னும் பொருளில் வந்துள்ளது .

கடும்புலி

=

கொடிய புலி

இதில் கடு என்னும் சொல் கொடிய என்ற பொருளில் வந்துள்ளது .

கடும்பகல்

=

நடுப்பகல்

இங்கே கடு என்ற சொல் நடு என்னும் பொருளைத் தருகிறது .

கடுக்காய்

=

துவர்ப்புக்காய் இதில் கடு என்னும் சொல் துவர்ப்பு என்ற பொருளில் வந்துள்ளது .

இவ்வாறு கடி என்னும் சொல் கடு என்று திரிந்து வழக்கிலிருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் .

6.2 உரிச்சொல் - சில குறிப்புகள்

உரிச்சொல் தொடர்பான மூன்று பாடங்களில் சில உரிச்சொற்களை அறிந்திருக்கிறீர்கள் .

நன்னூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை மொத்தம் நாற்பத்தைந்து சொற்களே ஆகும் .

தொல்காப்பியத்தில் நூற்றிருபது சொற்கள் காட்டப்பட்டுள்ளன .

தமிழில் உள்ள உரிச்சொற்கள் இவ்வளவு தானா ?

எல்லா வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறும் நன்னூலில் அனைத்து உரிச்சொற்களையும் குறித்து விளக்க முடியாது என்பதனால் , உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கூறும் நிகண்டுகளில் அவற்றைக் காணலாம் என நன்னூலார் தெளிவுபடுத்துகிறார் .

6.3 தொகுப்புரை

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை இப்பாடம் விளக்கியது .

பல குணம் தழுவிய உரிச்சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளது .

கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பதின்மூன்று பொருள்களையும் சான்றுகளுடன் எடுத்து இயம்பி உள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 )

கடி என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது ?

[ விடை ]

2 )

கடுஞ்சூல் - விளக்குக

[ விடை ]

3 )

கடுங்கதிர் வெம்மை - விளக்குக

[ விடை ]

4 )

நன்னூலில் காட்டப்படாத உரிச்சொல் தொகுதியை எந்நூலில் காணலாம் ?

[ விடை ]

பாடம் - 1

A02131 இடைச்சொல்லின் பொது இலக்கணம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சொல், சொல் வகைகள் ஆகியவற்றை விளக்கி இடைச்சொல் என்றால் என்ன என்பது பற்றி எடுத்துரைக்கிறது.

இலக்கண நூலார் கூறும் இடைச்சொல்லின் பொது இலக்கணத்தையும் அதன் வகைகளையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

மொழிப் பயன்பாட்டில் இடைச்சொற்களின் பங்கு / பணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இடைச்சொல் கருத்து வெளிப்பாட்டிற்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும் உதவும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.

சொற்களைப் பகுத்தறிந்து இடைச்சொல் எவ்வாறு சொல்லுக்குரிய பொருளைச் சிறப்பிக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1.0 பாட முன்னுரை