மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் ஆறு உரிச்சொற்களை விளங்கிக் கொண்டீர்கள் .
சொல் என்னும் குணத்தை உணர்த்தும் பதினாறு உரிச்சொற்களின் விளக்கங்களை அறிந்து கொண்டீர்கள் .
ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் இருபத்திரண்டு உரிச்சொற்களைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1 )
சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை ?
[ விடை ]
2 )
நொடி என்னும் சொல் எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொல் ?
[ விடை ]
3 )
காமம் செப்பாது கண்டது மொழிமோ - இத்தொடரில் இடம் பெற்றுள்ள உரிச்சொற்கள் யாவை ?
[ விடை ]
4 )
ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எத்தனை ?
[ விடை ]
5 )
ஒலி , கலி - எக்குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ?
[ விடை ]
பாடம் - 6
A02136 உரிச்சொல் வகைகள் - II
இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?
உரிச்சொல் வகைகளுள் ஒன்றாகிய பலகுணம் தழுவிய உரிச்சொல் குறித்து விளக்குகிறது .
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிவிக்கிறது .
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?
•
பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .
•
‘ கடி ’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பல பொருள்களை விளங்கிக் கொள்ளலாம் .
•
‘ கடி ’ என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் .
•
உரிச்சொல்லின் இன்றியமையா இலக்கணக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம் .
6.0 பாட முன்னுரை
பொருள்களின் பண்புகள் குணப்பண்பு , தொழிற்பண்பு என இருவகையாகப் பகுத்துச் சொல்லப்படுவதை முன்னர் அறிந்தோம் .
அப்பண்புகளைக் குறிப்பவையே உரிச்சொற்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம் .
அவற்றுள் சில உரிச்சொற்கள் ஒரு குணத்தைக் குறித்து வரும் .
அவை ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல் எனப்படும் .
வேறு சில உரிச்சொற்களுள் ஒரு சொல்லே பலகுணம் குறித்து வரும் .
அவை பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் எனப்படும் என்பதை அறிவீர்கள் .
சென்ற பாடத்தில் ஓரு குணம் தழுவிய பல உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கண்டோம் .
இனி , இந்தப் பாடத்தில் பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் குறித்த இலக்கண விளக்கங்களைக் காண்போம் .
முன்பு நீங்கள் பயின்ற திரிசொல் ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும் , பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் வருவது பற்றி நீங்கள் அறிவீர்கள் .
திரிசொல் , பெயர் , வினை , இடை , உரி என நால்வகைச் சொற்களிலும் உண்டு .
இங்கு நாம் காண இருப்பது பலபொருள் தரும் ஓர் உரிச்சொல்லை மட்டுமே ஆகும் .
6.1 பலகுணம் தழுவிய உரிச்சொல்
பல குணம் தழுவிய உரிச்சொல்லின் இலக்கணத்தை நன்னூல் விளக்குகிறது .
கடிஎன் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்
( நன்னூல் 457 )
இதன் பொருள் : கடி என்னும் உரிச்சொல் காவல் , கூர்மை , விரை ( வாசனை ) , விளக்கம் ( பிரகாசம் ) , அச்சம் , சிறப்பு , விரைவு , மிகுதி , புதுமை , ஆர்த்தல் ( ஒலித்தல் ) , வரைவு ( நீக்கல் ) , மன்றல் ( திருமணம் ) , கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும் .
கடி என்னும் ஓர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தருதலால் இது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும் .
இனி , இவ் உரிச்சொல்லை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாகக் காண்போம் .
6.1.1 கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்கள்
கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் செய்யுளில் பயின்று வந்துள்ளதைச் சான்றுகளுடன் பார்ப்போம் .
• காவல்
கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து .
இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது .
• கூர்மை
கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு .
இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது .
• விரை
விரை என்றால் வாசனை ( மணம் ) என்று பொருள் .
கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி
இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது .
• விளக்கம்
விளக்கம் என்பது இங்கு ஒளி , பிரகாசம் எனும் பொருள் தருவது .
‘ கண்ணாடி அன்ன கடி மார்பன் ’
ஒளி பொருந்திய மார்பு கொண்டவன் .
கடிமார்பன் என்பதில் கடி , விளக்கம் என்ற பொருளில் வருகிறது .
• அச்சம்
‘ கடி யாமம் காக்கும் கைவிளக்கு ’
அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள் .
இங்குக் கடி , அச்சம் எனும் பொருளில் வருகிறது .
( யாமம் = நள்ளிரவு )
• சிறப்பு
‘ கடி அரண் ’
வலிமையான கோட்டை என்பது பொருள் .
இங்குக் கடி என்பது சிறப்பு ( வலிமை ) எனும் பொருளில் வருகிறது .
• விரைவு
விரைவு = வேகம் .
‘ எம் அம்பு கடி விடுதும் ’
இத்தொடரின் பொருள் , எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம் .
இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது .
• மிகுதி
‘ கடுங்கால் ஒற்றலின் ’
மிகுதியான ( கடுமையான ) காற்று வீசுவதால் என்பது பொருள் .
இங்குக் கடி ( கடும் ) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது .
• புதுமை
‘ கடி மணச் சாலை ’
புதுமை மணம் நிறைந்த இடம் .
இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது .
• ஆர்த்தல்
ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள் .
‘ கடி முரசு ’ = ஒலிக்கும் முரசு .
இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது .
• வரைவு வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள் .
‘ கடிமது நுகர்வு ’
கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல் .
இத்தொடரில் கடி , விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது .
• மன்றல்
மன்றல் என்றால் திருமணம் என்று பொருள் .
‘ கடிவினை முடுகு இனி ’
திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள் .
இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது .
• கரிப்பு
கரிப்பு , காரச் சுவையைக் குறிக்கும் .
கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு .
‘ கடிமிளகு தின்ற கல்லா மந்தி ’
கடிமிளகு = காரமான மிளகு .
காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள் .
இங்குக் கடி , கார்ப்பு எனும் பொருளில் வந்தது .
இவ்வாறு , கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் பார்த்தோம் .
இனிக் கடி என்னும் சொல் திரிபு பெற்று வழக்கில் இருப்பதைக் காண்போம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 )
பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன ?
[ விடை ]
2 )
கடி என்னும் உரிச்சொல் எத்தனை பொருள்களில் வரும் ?
[ விடை ]
3 )
‘ கடி நுனைப் பகழி ’ - விளக்குக
[ விடை ]
4 )
கடி என்னும் சொல்லுக்கு ஆர்த்தல் என்ற பொருளும் உண்டு - விளக்குக .
[ விடை ]
6.1.2 கடி என்னும் உரிச்சொல் திரிபு
கடி என்னும் உரிச்சொல் ‘ கடு ’ என்று திரிந்து வேறு சில பொருள்களையும் உணர்த்தும் .
கடு என்னும் சொல் இன்றும் வழக்கில் உள்ளது .
எடுத்துக்காட்டு :
கடுஞ்சூல்
=
முதல் சூல்
கடு என்னும் சொல் முதல் என்னும் பொருளில் வந்துள்ளது .
கடும்புலி
=
கொடிய புலி
இதில் கடு என்னும் சொல் கொடிய என்ற பொருளில் வந்துள்ளது .
கடும்பகல்
=
நடுப்பகல்
இங்கே கடு என்ற சொல் நடு என்னும் பொருளைத் தருகிறது .
கடுக்காய்
=
துவர்ப்புக்காய் இதில் கடு என்னும் சொல் துவர்ப்பு என்ற பொருளில் வந்துள்ளது .
இவ்வாறு கடி என்னும் சொல் கடு என்று திரிந்து வழக்கிலிருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் .
6.2 உரிச்சொல் - சில குறிப்புகள்
உரிச்சொல் தொடர்பான மூன்று பாடங்களில் சில உரிச்சொற்களை அறிந்திருக்கிறீர்கள் .
நன்னூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை மொத்தம் நாற்பத்தைந்து சொற்களே ஆகும் .
தொல்காப்பியத்தில் நூற்றிருபது சொற்கள் காட்டப்பட்டுள்ளன .
தமிழில் உள்ள உரிச்சொற்கள் இவ்வளவு தானா ?
எல்லா வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறும் நன்னூலில் அனைத்து உரிச்சொற்களையும் குறித்து விளக்க முடியாது என்பதனால் , உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கூறும் நிகண்டுகளில் அவற்றைக் காணலாம் என நன்னூலார் தெளிவுபடுத்துகிறார் .
6.3 தொகுப்புரை
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை இப்பாடம் விளக்கியது .
பல குணம் தழுவிய உரிச்சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளது .
கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பதின்மூன்று பொருள்களையும் சான்றுகளுடன் எடுத்து இயம்பி உள்ளது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1 )
கடி என்னும் உரிச்சொல் எவ்வாறு திரிந்துள்ளது ?
[ விடை ]
2 )
கடுஞ்சூல் - விளக்குக
[ விடை ]
3 )
கடுங்கதிர் வெம்மை - விளக்குக
[ விடை ]
4 )
நன்னூலில் காட்டப்படாத உரிச்சொல் தொகுதியை எந்நூலில் காணலாம் ?
[ விடை ]
பாடம் - 1
A02131 இடைச்சொல்லின் பொது இலக்கணம்
E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சொல், சொல் வகைகள் ஆகியவற்றை விளக்கி இடைச்சொல் என்றால் என்ன என்பது பற்றி எடுத்துரைக்கிறது.
இலக்கண நூலார் கூறும் இடைச்சொல்லின் பொது இலக்கணத்தையும் அதன் வகைகளையும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
மொழிப் பயன்பாட்டில் இடைச்சொற்களின் பங்கு / பணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
•
இடைச்சொல் கருத்து வெளிப்பாட்டிற்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும் உதவும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
•
சொற்களைப் பகுத்தறிந்து இடைச்சொல் எவ்வாறு சொல்லுக்குரிய பொருளைச் சிறப்பிக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
1.0 பாட முன்னுரை